மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் : தொல்.திருமாவளவன் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் : தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை, மே 18  மக்கள்தொகை அடிப்படையில் சமூக வாரியாக இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த செயல் திட்டம் வகுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (17.5.2023) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக் களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.ஏற்கெனவே சொல்லப்பட்ட தீர்ப்பில் தவறு இருப்பதாக சீராய்வு மனுக்கள் நிரூபிக்கவில்லை என இந்த அமர்வு கூறியுள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி ஒருவர் மட்டுமே புதிதாக இடம் பெற்றிருப்பவர். மற்ற 4 பேரும் ஏற்கெ னவே தீர்ப்பளித்தவர்கள்.

இனி சட்டப் போராட்டம் நடத் துவதில் பயனில்லை என்றமுடிவுக்கு இது நம்மை தள்ளியிருக்கிறது. 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக் கீட்டின் பயனாளிகளை விரிவுபடுத்துவ தற்கானது அல்ல. மாறாக, ஒட்டு மொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித் துக் கட்டுவதற்கானதாகும். இத்தகைய சூழலில், சமூகநீதிக்காக போராடும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை இனி அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், எதிர்வரும் 2024 மக்களவை தேர்தல் அதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாப்பதற்கும், அத் துடன் இடஒதுக்கீட்டின் அளவை மக்கள் தொகை அடிப்படையில் சமூக வாரியாக உயர்த்துவதற்குரிய செயல் திட்டத்தை வகுப்பதற்கும் முன்வர வேண்டும் என்று சமூகநீதிக்கான அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விசிக சார்பில் தெரிவித்துக் கொள் கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment