தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, மே 11 அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு என்ற சட் டத்தை ஒன்றிய அரசு கடந்த 2013ஆ-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தல் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம் தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு 105(ஏ) என்ற சட்டப்பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு சட்டத்தை கொண்டு வந்தது. ஒன்றிய அரசு சட்டம் கொண்டுவந்து 1லு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி உள்பட 100-க்கும் மேற் பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு விசாரித்தது. நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, இந்த சட்டத்தின்கீழ் 2013ஆ-ம் ஆண்டுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட நிலம் கையெடுப்பு தொடர்பான நடவடிக் கைகள் ரத்து செய்யப்படுகின்றன என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை விசாரிக்கவும் உயர்நீதிமன்றத்துக்கு தடை விதித்தது.

இதற்கிடையே ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட சட்டத்தை உயிர்ப்பிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.மோகன் ராவ் உள்ளிட்ட 55 பேர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2021ஆ-ம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பில் மனு தாரர்களின் வாதங்களை ஏற்க முடி யாது, மாநில அரசின் உரிமைக்கு உட்பட்டு இருப்பதாலும், சென்னை உயர்நீதிமன்ற  வழிகாட்டுதலின்படி இருப்பதாலும், தமிழ்நாடு அரசின் 2019-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் செல்லும். எனவே, இதற்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தது.இதற்கிடையே இதே விவகாரம் தொடர்பாக சென்னையை சேர்ந்த சி.எஸ்.கோபாலகிருஷ்ணன், வி.திருநாராயண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பு கூறியுள்ளது. தமிழ் நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் நில கையப்படுத்துதலில் ஏற்படுத்தும் தவிர்க்கக்கூடிய தாமதத்தை தடுக்கும் நோக்கில் உள்ளது.

நிலம் கையகப்படுத்தலுக்கான புதிய சட்டத்தின் ஒப்பிடுகையில், நெடுஞ்சாலை சட்டத்தில் உள்ள விதிகள், நடைமுறைகளுக்கான வேறுபாடுகள், பாகுபாடுகள் இருப்பதாக முன்வைத்த வாதத்தை நிராகரிக்கிறோம். தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டம் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment