மூடத்தனத்தின் மூர்க்கத்தனம் சொர்க்கத்திற்கு செல்ல தலையை வெட்டி நரபலி கொடுத்த கணவன் மனைவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 17, 2023

மூடத்தனத்தின் மூர்க்கத்தனம் சொர்க்கத்திற்கு செல்ல தலையை வெட்டி நரபலி கொடுத்த கணவன் மனைவி

ராஜ்கோட், ஏப்.17 இணையர் தங்களை தாங்களே ‘நரபலி' கொடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா என்ற கிராமத்தைச் சேர்ந்த இணையர்ஹேமுபாய் மக்வானா (38) மற்றும் ஹன்சா பென் (35). இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த இணையருக்கு மாந்திரீக பூஜை களில் நம்பிக்கை இருந்த நிலையில், இரு வரும் கடந்த ஓராண்டு காலமாக தங்கள் குடிசையில் நாள்தோறும் மாந்திரீக பூஜை களை செய்து வந்துள்ளனராம்.

இந்நிலையில், கடந்த 15.4.2023 அன்று மாலை ஹோம குண்டத்தில் நெருப்பு வளர்த்து பூஜை செய்த இந்த இணையர், மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை ஆய்வு செய்த போது தான் பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளது. இவர்கள் தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுக் கும் விதமாக இயந்திரம் ஒன்றை உருவாக்கி வீட்டருகே வைத்துள்ளனர்.

ஹோமம் வளர்த்து...

சம்பவ நாள் அன்று ஹோமம் வளர்த்து அந்த இயந்திரத்தில் தலையை கொடுத்து தாங்களே அதை இயக்கி தலையைத் துண் டாக்கிக் கொண்டு நரபலியாகியுள்ளனர். தலை உருண்டு சென்று குண்டத்தில் விழும் விதமாக இவர்கள் அதை அமைத்துள்ளனர். இரண்டு தலைகளையும் ஒன்றாக வெட்டி விட்டு ஹோமகுண்டலத்தில் விழும்படி கணவன்-மனைவி தாங்களாகவே ஸ்டாண்ட் தயார் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது. இதில் கயிற்றுடன் கூடிய கனமான இரும்பு மேடையின் கீழ் கூர்மையான ஆயுதம் பொருத்தப்பட்டிருந் தது. இது கமல பூஜை என அழைக்கப்படுகிறது. 

மேலும் இவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து தற்கொலை கடிதம் கண்டெடுக் கப்பட்டுள்ளது. அதில், தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இணையர் தங்களைத் தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாமரை பூஜை செய்ய என்ன காரணம் என்பதுதான் கேள்வி? இந்தச் சடங்குகள் செய்ய யாரேனும் அவர்களை தூண்டினார் களா? எந்த நோக்கத்திற்காக இந்த பூஜை செய்யப்பட்டது? என விசாரணை நடை பெறுகிறது.

புராணக்கதை தாமரை (கமல) பூஜை என்றால் என்ன? 

கமல பூஜை என்பது சிவபெருமானுக்கு ஆயிரம் தாமரை மலர்களை அர்ப்பணிப்பது. கர்தக் மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தருமாம். தேவுதி ஏகாதசி, வைகுண்ட சவுடசி போன்ற ‘பண் டிகை'கள் வருவதால் கர்தக் மாதம் சிறப்பு வாய்ந்ததாம். இந்த நாளில் சிவன் மற்றும் விஷ்ணுவின் அருளால் வைகுண்டத்தை அடையலாம் என்ற நம்பிக்கை உள்ளது. விஷ்ணு நான்கு மாதங்கள் ஓய்வெடுக்க செல்கிறார், பின்னர் படைப்பின் பொறுப்பு சிவபெருமானிடம் ஒப்படைக்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்குப் பிறகு தேவுதி ஏகாதசி நாளில் நாராயணர் எழுந்தருளும் போது, அவருக்கு மீண்டும் படைப்பின் பொறுப்பு கிடைக்கிறது. வைகுண்ட சவு தாஷம் என்பது மகாவிஷ்ணு காசிக்குச் சென்று சிவனை சந்திக்கும் நாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த நாள் மிகவும் ‘புனித' மானதாக கருதப்படுகிறது. விஷ்ணு நான்கு மாத ஓய்வுக்குப் பிறகு காசியில் சிவசங்கரைச் சந்திக்கச் சென்றாராம். 

பின்னர் மணிகர்ணிகா கிரிவலத்தில் நீராடி சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்களால் வழிபடுவதாக உறுதிமொழி எடுத்தாராம். சிவன் நாராயணனையும் பக்தர்களையும் சோதிக்க முடிவு செய்து, அமைதியாக ஒரு தாமரை மலரை மறையச் செய்தாராம். விஷ்ணு பகவான் சிவனுக்கு மலர் எடுக்கச் சென்றபோது, 1 பூ குறைவாக வந்தபோது, இந்த இக்கட்டான நிலையில் இருந்து எப்படி மீள்வது, எப்படித் தன் உறுதிமொழியை நிறைவேற்றுவது என்று நினைத்தாராம். தன் கண்களும் தாமரை போன்றது என்று விஷ்ணு நினைத்தாராம், எனவே. அவர் தனது கண்களை சிவனுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தாராம். விஷ்ணு சிவபெருமானுக்கு தனது கண்ணை அர்ப் பணிக்க முற்பட்ட போது சிவபெருமான் அங்கு தோன்றி விஷ்ணுவை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தாராம். 

இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment