ஜெர்மனி நாட்டு உயர்கல்வி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு திராவிடர் இயக்கம் பற்றி பாடமெடுத்தார் ஆசிரியர் - வீ.குமரேசன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 2, 2023

ஜெர்மனி நாட்டு உயர்கல்வி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு திராவிடர் இயக்கம் பற்றி பாடமெடுத்தார் ஆசிரியர் - வீ.குமரேசன்

புரட்சி மாவீரன் நாத்திகன் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச் 23. 

அந்த புரட்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டு 92ஆம் ஆண்டு (23.3.2023) நாளினைப் போற்றி அந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் பகத்சிங் உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் திராவிடர் கழக தலைமைப் பொறுப்பாளர் களும், தலைமை நிலைய பணியாளர்களும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

வீரவணக்கம் செலுத்தி விட்டு தனது அலுவலக அறைக்கு ஆசிரியர் அவர்கள் வந்த பொழுது அவரைச் சந்தித்து உரையாட, ஜெர்மனி நாட்டிலிருந்து 6 மாணவர்கள் வந்திருந்தனர். அந்த மாணவர் குழுவினர், ஆசிரியர் அவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆகியிருந்தவரும், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா - மேரிலாந்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்று உரையாற்றியவருமான பேராசிரியர் முனைவர் ஸ்வென் வொர்ட்மான் வழிகாட்டுதலுடன் வருகை தந்திருந்தனர். ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் துறையில் பணியாற்றிய அவர் தமிழில் சரளமாக உரையாடக் கூடியவர். ஆசிரியர் அவர்களைப் பார்த்ததும், ‘அய்யா! வணக்கம்' என பளிச்சென்று தமிழில் தெரிவித்தார். ஆசிரியர் அவர் களும் பெரும் மகிழ்ச்சியுடன் ஸ்வென் அவர்களுக்கும், உடன் வருகை தந்த உயர்கல்வி மாணவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்தார். ஜெர்மன் நாட்டு மாண வர்கள் வருகை முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதால், ஆசிரியர் அவர்கள் அந்த மாணவர் குழுவிடம் சாவகாசமாக உரையாட நேரத்தை ஒதுக்கியிருந்தார். வருகை தந்தவர்களை பெரியார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வேண்டியும் அவர்களுக்குத் தேநீர், மோர் வழங்கிடவும் ஆசிரியர் பணித்தார்.

சிறிதுநேர இடைவெளியில் அருங்காட்சியகத்திற்கு வந்து ஆசிரியர் ஜெர்மனி நாட்டு மாணவர்களுடன் உரையாடத் தொடங்கினார். முனைவர் ஸ்வென் வொர்ட்மான், வருகை தந்திருந்தோர் பற்றிய அறி முகத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். சியாரா ப்ரோலிச் Chiara Froehlich), வள்ளி (ஜெர்மனி நாட்டவர்தான், பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்ததால், ‘வள்ளி‘ என்ற பெயர் சூட்டப்பட்டதாம். அவர் தமிழ் சரளமாகப் பேசினார்), கிளாரா ஜஸ்தெவ் மோரிஸ்ஜே (Clasa Jestev Morisje), மகாதேவ இந்துமதி (ஈழத் தமிழர் - புலம் பெயர்ந்து ஜெர்மன் குடியுரிமை பெற்று வாழ்பவர்), மகாதேவ டில்சன் (ஈழத் தமிழர் - முதலில் குறிப்பிட்டவரின் மகன்), இவர்களுடன் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ், அவர்களுடன் உறுதுணையாக இருக் கும் பாண்டிச்சேரி தேசிகனும் வந்திருந்தார்.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட கேள்வியை ஆசிரியரிடம் கேட்டனர். ஒருவர் கேட்ட கேள்வி இதுதான்.  "திராவிடர் இயக்கம், குறிப்பாக  பெரியார் கொள்கை பற்றிய விளக்கத்தினை எடுத்துக் கூறுங்கள்."

ஆசிரியர் அவர்கள் திராவிடர் இயக்கம் - தந்தை பெரியார் அந்த இயக்கத்தை வழிநடத்தி மக்கள் இயக்க மாக மாற்றியது குறித்து எடுத்துரைத்தார்.

அரசியல் கட்சி அல்ல

பெரியார் அரசியல் அதிகாரம்தான் நிலையான சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நிலை யில் இருந்ததாலும், அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடித்ததாலும், தனது அமைப்பை எப்பொழு துமே ஓர் அரசியல் கட்சியாக நடத்திட விரும்பியது மில்லை; அனுமதித்ததுமில்லை. பெரியாரின் கொள் கைச் சீடர்களாக விளங்கியோர். அரசியல் வழி முறைகளைக் கொண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்து பெரியாரின் கொள்கைகளுக்கு நடைமுறை வடிவம் கொடுத்தனர். தனது கொள்கைகளுக்கு ஆட்சியாளர் கள் வடிவம் கொடுக்கையில் அவர்களுக்கு ஆதர வினையும் வழங்கி வந்தார் பெரியார். தன்னுடைய சீடர்களே ஆட்சி அதிகாரத்தின் மூலம் கொள்கைக்கு வடிவம் தந்த பொழுது தனது - தன் அமைப்பின் - தனது கட்சிக்காரர்கள் - தனது இடைவிடாத பிரச் சாரத்தால் பொதுமக்கள் கவனத்தையும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவு அளிக்கின்ற வகையில் செய்து வந்தார் பெரியார். இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர் சில நேரங்களில் தங்களது வரம்பிற்குள் செயல்பட வேண்டிய நிலையினையும் உணர்ந்தே சமுதாயப் பணி ஆற்றி வந்தார்.

ஆட்சி அதிகாரத்தைப் 

பயன்படுத்திடும் அணுகுமுறை

ஆட்சியாளர்கள் தனது கொள்கைக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் நேரங்களில் அவர்களை விமர்சனம் செய்து  - தேவைப்பட்டால் ஆட்சியாளருக்கு எதிராகப் போராடி வந்தவர் பெரியார்; அப்படிப்பட்ட அணுகு முறையினை தமது அமைப்பின் தோழர்களுக்கும் விளக்கி வழி காட்டினார்.

அரசியலில் நேரடி பங்கேற்பில்லாமல் ஆட்சியாளருக்கு ஆதரவு - எதிர்ப்பு நிலை எடுக்கும் கொள்கை சார்ந்த அமைப்புகள் சில உள்ளன. ஆனால் வெளிப் படைத் தன்மையுடன், மாபெரும் மக்கள் இயக்கமாக தனது அமைப்பை வழிநடத்தி அவருக்கு:ப பின்னரும் தொடர்ந்து சமுதாயப் பணி ஆற்றிட வைத்தவர் பெரியார். அந்த வகையில் இப்படிப்பட்ட ஒரு கொள்கை சார்ந்த இயக்கம், வெளிப்படைத் தன்மை யுடன் மக்கள் இயக்கமாக விளங்கி வருவது பெரியார் இயக்கமான திராவிடர் கழகமே. ஆட்சிக்கு வந்து கொள்கை சார்ந்த சட்டங்களை இயற்றி ஆட்சி புரிவது ஒரு வகை. கொள்கை சார்ந்து, பொது மக்கள் கருத்தை உருவாக்கி ஆட்சியாளர்கள் கவனத்தை ஈர்த்து, அழுத்தம் கொடுத்து சட்டம் இயற்ற வைப்பது ஒருவித அமைப்பு ரீதியான செயல்பாடே. he Public Opinion Marches forward, the law will come limping behind  (பொது மக்கள் கருத்து முன்னேறிச் சென்றால் சட்டம் நொண்டியடித்துக் கொண்டு பின்னர் வரும்). என்பதை தனது இயக்கச் செயல்பாடு அணுகு முறைகளாகக் கொண்டிருந்தார் பெரியார்.

ஓர் எடுத்துக்காட்டு: சாஸ்திர சம்பிரதாயம், சடங்கு கள் ஏதுமின்றி புரோகிதரைத்  தவிர்த்த திருமணத்தை ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவத்தை - நடை முறையாக "சுயமரியாதைத் திருமணமாக" அறிமுகப் படுத்தியவர் தந்தை பெரியார். 1928ஆம் ஆண்டில் ஒரு குக்கிராமத்தில் சுயமரியாதைத் திருமணத்தை முதன் முதலாக நடத்திக் காட்டினார். அப்பொழுது நிலவிய சமூகச் சூழலில் சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லாது என்ற நிலை இருந்தது. சில சமயங்களில் சுயமரியாதைத் திருமணம் குறித்த வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்கு சென்ற வேளைகளில் அந்தத் திருமணங்கள் செல்லாது என தீர்ப்பு அளிக் கப்பட்டது. ஆனால் பெரியாரது கொள்கைப் பற்றாளர் கள், கொள்கை வழிநடப்பவர்கள் சட்டத்தைப் பற்றி பொருட்படுத்தாமல் சுயமரியாதைத் திருமணங்களை தங்களது குடும்பங்களில் நடத்திக் கொண்டிருந்தனர். 1967-ஆம் ஆண்டு பெரியாரின் கொள்கைச் சீடரான ‘அண்ணா' என அன்போடு அழைக்கப்படும் அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்த பொழுது சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தந்தார். சட்டத்தால் செல்லுபடியாவதற்கும் புறம்பானவை என தனிச்சட்டம் மூலம் கருதப்பட்டதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது 

"திராவிட மாடல் ஆட்சி"

தந்தை பெரியாரது இயக்கத்தின் சமுதாயப் பணியில். திராவிடர் இயக்கத்தின் தொடக்க அரசியல் கட்சியான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் "நீதிக்கட்சி"யின் தொடர்ச்சியாக அண்ணா தலைமை யில் ஆட்சிப் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழகம், தொடங்கி "திராவிட மாடல்" ஆட்சியில் இன்று முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் அவர்களது அரசியல் தலைமையில் தந்தை பெரியாரின் சமூகநீதி, சமத்துவக் கொள்கைகள் நடைமுறைகண்டு வரு கின்றன. இவையாவற்றிற்கும் மய்யப் புள்ளியாக விளங்குபவை தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகள் தான். பெரியார் தொடங்கிய தாய் அமைப்பான திராவிடர் கழகம் தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து, செய்து மக்கள் மனநிலையில் மாபெரும் மாற் றத்தை கொண்டு வந்துள்ளது. இதுதான் 100 ஆண்டு கால வரலாற்றைத் தாண்டிய திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான விளக்கம் ஆகும்.

சுருக்கமான விளக்கம் என ஆசிரியர் அவர்கள் கூறினாலும் தான் கேட்டகேள்விக்கு விரிவான விளக் கத்தைப் பெற்ற மனநிறைவுடன் அந்த ஜெர்மனி நாட்டு மாணவி இருந்தார்.

அடுத்த கேள்வியைக் கேட்க மற்றொரு மாணவி தயாராக இருந்தார். கேள்வி இதுதான்.

பெண்கள் அதிகாரம் பெறுவது (Women enpowerment)  உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று வரு கிறது. இந்திய நாட்டுச் சூழலில் பெண்கள் அதிகாரம் பெறுவது எந்த நிலையில் உள்ளது?

மற்ற நாடுகளில் பெண்கள் அதிகாரம் பெறுவது ஒப்பீட்டளவில் எளிதாக நடைபெறக் கூடும். ஆனால் இந்த நாட்டு சமூகச் சூழலில் அப்படி எதுவும் எளிதில் விரைவாக நடந்து விட முடியாது.

பெண் விடுதலை - பெண் உரிமை

காரணம் இங்கு பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு முன்னர் இரண்டு நிலைகளைக் கடந்திட வேண்டும். முதலாவது பெண் விடுதலை; மற்றது பெண்கள் சம உரிமை பெறுதல் (ஆண்களுக்கு நிகராக உரிமை பெறுதல்), கடந்த 2000-3000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணில் பெண்கள் அடிமை நிலையில் தான் இருந்தனர். பெண்களை அடிமைகளாக வைத்திருப்பது சாஸ்திர, சம்பிரதாயங்களை (அ)தர்மங்களை கடவுளின் பெயரால் ஆதிக்கவாதிகள் உருவாக்கி விட்டனர். அடிமையாக இருப்பதே தமக்கு விதிக்கப்பட்ட விதி என கருதும் நிலை மனதளவில் ஆழமாக ஊன்றப்பட்டு விட்டது.

தந்தை பெரியாரின் கொள்கை அடிப்படையே மனிதர் அனைவரும் சமமானவர்கள் என்பதே. இந்த சமத்துவத்திற்கு தடையாக எது இருந்தாலும் - எது வந்தாலும் அதைத் தகர்த்து எறிவதிலேயே (கருத்துப் பிரச்சாரத்தால் மட்டுமே; வன்முறைக்கு இடமில்லை) உறுதியாக இருந்து செயல்பட்டவர். அவரது இயக்கத் தையும் அந்த வழியிலேயே பணி புரிந்திட நெறிப் படுத்தினார்.

ஆண்களை பிளவுபடுத்தி நான்கு வர்ணங்களாக சமூக தகுதியைப்ப் பொறுத்த அளவில் அனைவருக்கும் ‘உயர் நிலையில்' பார்ப்பனர்; அடுத்து சத்திரியர்; அவருக்கு அடுத்த நிலையில் வைசியர்; அந்த மூவகை வர்ணத்தாருக்கும் உடல்  உழைப்பை வழங்கக்கூடிய சூத்திரர். இந்த சமூகப் படிநிலை இதோடு நின்று விடவில்லை. இந்த நால்வகை வருணத்தாருக்கும் “கீழ்" நிலையில் பஞ்சமர் எனப்படும் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, நெருங்கினால் தீட்டு என்று பாகுபடுத் திடும் நிலையினையும் உருவாக்கி வைத்தனர். இவை அனைத்தும் ஒருவர் தனது பிறப்பினால் - அந்த படிநிலை சமூகத்தில் பிறந்ததால் ஏற்படுத்தப்பட்டது.

இந்த அனைத்து நிலை சமூக அடுக்கு முறைக்குக் "கீழ்"தான் "பெண்கள்" வகைப்படுத்தப்பட்டனர். வர்ணம் - ஜாதி என்பது ஆண்களுக்கு மட்டும்தான், எந்த நிலைக் குடும்பத்திலும் உள்ள "பெண்கள்" சமூகத் தில் அடிமட்ட தளத்தில் அடிமைகளாக - எந்தவித உரிமையுமின்றி இருந்தனர். மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள் நிலை இதுதான். இது கடவுள் விதித்த வழி என தங்களுக்குத் தாங்களே சமாதானம் அடைந்து உழன்று வாழ்ந்தனர். அப்படி வாழ்ந்த பெண்களிடம் விழிப்புணர்வூட்டி அவர்களது சமூக அடிமைத்துவத்தை உணர்த்தியவர் பெரியார். பெண் விடுதலை என்ற நிலையில் பெண்களுக்கான உரிமையும் பேசப்பட்டது. பெண்ணை அடக்கி ஆளும் ஆணாதிக்கம் - அதன் பிரதிநிதிகள் ஏதோ பெண்கள் உரிமைக்கு பரிந்து பேசுவது போல - உரி மைகளை வகைப்படுத்திப் பேசுவது போல - ‘பெண் களுக்கு என்னென்ன உரிமை வழங்கப்பட வேண்டும்?' என தந்தை பெரியாரிடமே கிண்டலாகக் கேட்டனர்! 

"பெரியார்" பட்டம்

உலகியலைப் புரிந்துணர்ந்த பெரியார் கூறினார். "அதிகமாக உரிமை எதுவும் பெண்களுக்கு வேண்டாம்; ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளதோ அந்த உரிமைகள் மட்டும் போதும்" என்று கூறி ஆதிக்கவாதிகளின் வாயை அடைத்தார் பெரியார்! பெண் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மாறுபட்ட தலைவராக விளங்கியவர் பெரியார். "ஈ.வெ.ராமசாமி" என்று பெயர் கொண்டவருக்கு "பெரியார்" எனும் பட்டம் அளித்ததே பெண்கள் விடுதலை மாநாட்டில் தான். ‘பெரியார்' எனும் பெயர் நிலைத்து விட்டதே பெண்கள் விடுதலையில் தந்தை பெரியார் ஆற்றிய சமுதாயப் பணியினை பறைசாற்றுவதாக விளங்குகிறது.

பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும்; பெண்களுக்கு தங்களது தந்தையார் சொத்தில் மகன்களுக்கு உள்ளதைப்போலவே மகள்க ளுக்கும் சம உரிமை வேண்டும் என 1929ஆம் ஆண் டில் செங்கல்பட்டில் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றினார். அன்று நிறைவேற்றப்பட்ட பெண்களுக் கான சம சொத்துரிமை 1989ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்து பொழுது சட்ட வடிவம் கண்டது. 2006ஆம் அண்டு அன்றைய யுபிஏ(UPA-2)  ஒன்றிய அரசில் அங்கம் வகித்த திராவிட முன்னேற்றக் கழகத் தின் வலியுறுத்தலால் நாடு முழுவதற்குமான சட்டமாக பெண்களுக்கான சொத்துரிமை வடிவெடுத்தது.

பெண் விடுதலை என்பது பெண்கள் தலைமை யேற்று போராடினால் தான் முழுமையடையும், எந்த ஆணிடமும் - (தன்னிடமும்) பெண்ணை அடிமைப் படுத்திடும் ஆதிக்க உணர்வு ஓரளவேணும் இருந் திடவே செய்யும். பெண் விடுதலை என்பது தன் தலை மையில்தான் விடியும் என்று கூறாத அப்பழுக்கற்ற பெண் உரிமைச் சிந்தனையாளர் பெரியார். தந்தை பெரியார் காலம் தொடங்கி பெண் விடுதலை என்பது பெண்களுக்கான உரிமை என்ற அளவில் மட்டுமே இருந்தது. இந்த உரிமைகள்  potential rights  கோரி னால்தான் அந்த உரிமைகள் நடைமுறைக்கு வரும்.

பெண் அதிகாரத்துவம்

பெண்கள் கல்வி கற்று, பல உயர்நிலை பதவிகளில் - அதிகார நிலைகளில் இருப்பதுதான் பெண்கள் விடுதலைக்கு பொருள் நிறைந்ததாக இருக்கும் இதுதான் பெண் அதிகாரத்துவம் (Women empowerment).  பெரியார் சமுதாயப் பணி ஆற்றிய தமிழ் நாட்டில் இன்று அரசு பதவிகளில் 40 விழுக்காடு பெண்களுக்கு என இட ஒதுக்கீடு உறுதி செய்யப் பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல்களில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரப் பதவி களுக்கு 33 விழுக்காடு பெண்களுக்கான இட ஒதுக் கீடாகத் தொடங்கி அண்மையில் நடந்த தேர்தல்களில் 50 விழுக்காடு என்ற அளவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை என்பது இந்தியாவின் பிற மாநிலங்களில் கிடையாது. 

தந்தை பெரியாரின் பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் எனப் படிப்படியாக திராவிட மாடல் ஆட்சியின் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளது. இன்றும் பல தளங்களில் ஆணுக்குள்ள வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பெரியார் இயக்கம் பாடுபட்டு வருகிறது.

ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் - தாயும் மகனும் ஆசிரியர் அவர்களிடம் விளக்கம் கேட்க முனைந்த பொழுது, அந்த ஈழத் தமிழ்ப் பெண்ணிடம் ஈழத்தில் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என ஆசிரியர் வினவிய பொழுது தனது சொந்த ஊர் (சாவகச்சேரி) பற்றி அந்தப் பெண்மணி குறிப்பிட்டார். உடனே ஆசிரியர் அவர்கள் அந்தப் பகுதிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் வந்ததையும், அங்கு பொது வாழ்க்கையில் இருந்த பிரமுகர்களின் பெயர்களைக் கூறியதும் அந்த ஈழப் பெண்மணி பெரிதும் மகிழ்வடைந்தார்!

தான் 2015ஆம் ஆண்டில் ஜெர்மனி - கொலோன் நகரத்திற்கு வருகை தந்த பொழுது அங்கு ஈழத் தமிழர் இருவருக்கு (நீலன் - ஒலிவியா) சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்ததை நினைவு கூர்ந்தார். அந்தத் திருமணம்தான் ஜெர்மனியில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம். புலம் பெயர்ந்த நாட்டிற்கு விசுவாசமாக அங்கிருக்கும் மக்களுடன் இணக்கமாக வாழ்ந்திட அந்த ஈழத் தமிழர்களுக்கு ஆசிரியர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

ஜெர்மனியிலிருந்து வருகை தந்த மாணவர்களுக்கு பெரியாரது கொள்கைகள் அடங்கிய ஆங்கிலப் புத்த கங்களை (பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள்) ஆசிரியர் அவர்கள் வழங்கினார். தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றலான ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமே - தந்தை பெரியாரிடம் அணுக்கமாக இருந்த ஆசிரியர் அவர்களிடமே திராவிடர் இயக்கம் பற்றிய விளக்கம், வரலாறு பற்றி அறிந்து கொண்ட ஜெர்மனி நாட்டு உயர்கல்வி, ஆராய்ச்சி மாணவர்கள் ஆசிரியர் அவர் களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றனர். பெரியாரது கெள்கை குறித்து மேலும் விளக்கங்கள் தேவைப்படும் பொழுது தயக்கமின்றி பெரியார் திடலை தொடர்பு கொள்ளச் சொன்னார் ஆசிரியர். 

ஏறக்குறைய 1 மணி நேரம் நடந்த கருத்து விளக்கப் பாட வகுப்பு மாணவர்களுக்கு மட்டுன்றி அனை வருக்கும் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையிலானதுதான் இந்த தொகுப்பு!

No comments:

Post a Comment