‘சட்டமன்றத்தில் புகழ்பாட வேண்டாம்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

‘சட்டமன்றத்தில் புகழ்பாட வேண்டாம்!'

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு!

சென்னை, மார்ச் 22- தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான 'நிதிநிலை அறிக்கை' நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து வேளாண் 'நிதிநிலை அறிக்கை' நேற்று (21.3.2023) தாக்கல் செய்யப் பட்டது.

வருகிற 23ஆம் தேதி (நாளை) முதல் 28ஆம் தேதி வரை 'நிதிநிலை அறிக்கை' மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதங்களும் நடைபெற இருக்கிறது.

இந்தநிலையில் மானிய கோரிக்கை விவாத நடவடிக் கைகள் குறித்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோ சனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, 

க.பொன்முடி, இ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சு.முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், சா.மு.நாசர், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், எஸ்.எஸ்.சிவசங்கர் உள்பட அமைச்சர்கள், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள், தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்கள்கலந்துகொண்டனர்.

இந்த 'நிதிநிலை அறிக்கை' கூட்ட தொடரில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்எவ்வாறு நடந்துகொள்ள வேண் டும்? எந்தெந்த விவாதங்களில் யார் யார் பேசவேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதேபோல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு களுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். மேலும் மானிய கோரிக்கை விவாத நடவடிக்கைகள் குறித்த பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சட்டமன்றத்தில் கண்டிப்பாக புகழ்பாடுவது கூடாது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 என்ற மகளிருக்கான உரிமைத்தொகையை யாருக்கு தர போகி றோம்? என்றும், 1 கோடி பெண்களுக்கு தருகிறோம், 2 கோடி பெண்களுக்கு தருகிறோம் என்றெல்லாம் யாரும் பேசக் கூடாது. உங்கள் கோரிக்கைகளை மட்டுமே தான் பேச வேண்டும்.

அதை செய்யவேண்டும், இதை செய்யவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து பேசக்கூடாது. உங்கள் தொகுதிக்கு என 10 திட்டங்களை கொடுத்துள்ளோம். அதை நிறை வேற்றுவதற்கு முழு முனைப்புடன் செயலாற்றுங்கள். அரசின் நிதிநிலை நல்ல நிலைக்கு வரும்போது மற்ற கோரிக்கைகளை பார்த்து கொள்ளலாம். சட்டமன்றத்தில் பேசும்போது கவனமாக பேசவேண்டும். வார்த்தை தடுமாற கூடாது. ஒருமையில் யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது. நிமிர்ந்து நிற்க வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும். நாம் எதற்கும் அடிபணிய போவது கிடையாது.

சட்டமன்ற உறுப்பினர்கள்மக்கள் பணியாற்றி நல்ல பெயரை பெற்றால், அது கட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் நற்பெயரை ஏற்படுத்தும். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் தவறாமல் வரவேண்டும். அமைச்சர்களை பொறுத்த வரையில், மானிய கோரிக்கை விவாதத்தின்போது தங்களது பதிலை சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறவேண்டும். நீளமான பேச்சை தவிர்த்து விடுங்கள். அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் மற்றும் விவாதங்களில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்று பதில் அளிப்பார்கள். சட்ட மன்றத்தில் தேவையில்லாமல் எழுந்து நிற்க கூடாது.

இவ்வாறு அவர் அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.

No comments:

Post a Comment