இதுதான் பிஜேபியின் மோசடி - திருகுதாளம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

இதுதான் பிஜேபியின் மோசடி - திருகுதாளம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பாஜகவில் கட்சிப் பொறுப்பு பெற பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். 32 வயதான இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வநாதன் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார். பின்னர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் உமாசங்கர் ஆகியோரிடம் தனக்கு கட்சியில் பொறுப்பு வழங்குமாறு விஸ்வநாதன் வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் விஸ்வநாதனின் நடவடிக்கை பிடிக்காததால் அவருக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விஸ்வநாதன் தொடர்ந்து இவர்களிடம் கேட்டதோடு, தனக்குக் கட்சியில் பொறுப்பு வழங்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் காழ்ப்புணர்ச்சியோடு விஸ்வநாதன் இருந்து வந்துள்ளார். இதனிடையே சம்பவத்தன்று விஸ்வநாதன் தனது வீட்டில் இருந்த போது  சிலர் தன்னைத் தாக்கி தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, விஸ்வநாதன் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது  ஹிந்துமக்களின் சேவகன் என்பதால் தன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், இதனால் தனக்குப் புகழ் சேர்ந்து தனக்கு கட்சியில் பெரிய பதவி கிடைக்கும் என்ற நினைப்பில் அப்படிச் செய்துள்ளார் என்று தெரியவந்தது.  

அவரே தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு, அதனை பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்து கட்சியில் ஏதாவது பதவி பெறவும், தனக்குக் காவல்துறை பாதுகாப்பு பெற்று பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் இதைச்செய்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து விஸ்வநாதன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். 

தனக்குத்தானே சட்டையில் தீ வைத்துக் கொண்டு பாஜக நிர்வாகிகள்மீது பொய்ப் புகார் கொடுத்த வழக்கில் பாஜக பிரமுகரே கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர்  சதீஷ்குமார். அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய கார் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் ஒரு  அடையாளம் தெரியாத நபர்  பெட்ரோல் நனைத்த துணியால் காரின் நாலு பக்கமும் துடைத்து அதன் பிறகு காரை தீ வைத்து கொளுத்துவதும் அந்த சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகி இருந்தது.

விசாரணையில் தன்மீது தாக்குதல் நடத்துவதாக செய்தி வெளியானால், அதை வைத்து பிரபலமாகி கட்சியில் உயர்பதவி வாங்கலாம் என்பதால் அவரே  தனது காரை எரித்து  நாடகமாடியது தெரியவந்தது

 புதுக்கோட்டை பாஜக மாவட்ட பிரமுகரான வடிவேல்  என்பவர் ஆட்களை வைத்து தனது காருக்குத் தீவைத்து  விட்டு, சமூக விரோதிகளின் நடவடிக்கை என்று புகார் கொடுத்தார். இது தொடர்பான விசாரணையில் காவல்துறை பாதுகாப்பு மற்றும் பிஜேபி கட்சியில் பதவிக்காக இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார்

இதேபோல் சத்தியமங்கலம் பாஜக மேனாள் நகர்மன்ற செயலாளர் சிவசக்தி என்பவரும் தனது காருக்குத் தீவைத்து விட்டு யாரோ பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச்சென்றதாக கூறினார். ஆனால் அப்பகுதி கண்காணிப்பு காமிராவை சோதனை செய்த போது அந்த நிகழ்ச்சி நடந்த அன்று யாருமே அப்பகுதியில் வந்து சென்றதாக பதிவு இல்லை. விசாரணையில் இவரும் பதவிக்காக - தானே பெட்ரோல் குண்டுவீசியது தெரியவந்தது.  இந்த மூன்று நிகழ்வுகளும் கடந்த ஆண்டு மட்டுமே நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு ஆண்டும் பல பாஜக பிரமுகர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து  சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கப் பார்க் கிறார்கள்.

சீனாவின் ஷாங்காய் பேருந்து நிலையப் படத்தை வெளி யிட்டு, குஜராத் அகமதாபாத் பேருந்து நிலையம் என்று மோசடி விளம்பரம் செய்தவர்களும்  பிஜேபிகாரர்கள்தானே!

தார்மீகப் பண்பாடு எல்லாம் எங்களுக்கே சொந்தம் என்று மார்தட்டிக் கொள்ளும் பிஜேபி வகையறாக்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள எப்படி எப்படியெல்லாம் மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.

தில்லுமுல்லு, திருகுதாளம், தந்திரம், சூழ்ச்சி இவையெல்லாம் இவர்களின் கோட்பாடுகள்தானே!

தூணில் மறைந்து வாலியைக்கொன்றது தானே இவர்களின் ராமராஜ்ஜியம்? 

No comments:

Post a Comment