மாவட்டங்களில் தனித்துவமான பொருட்கள் ஏற்றுமதிக்கு வருகிறது புதிய திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

மாவட்டங்களில் தனித்துவமான பொருட்கள் ஏற்றுமதிக்கு வருகிறது புதிய திட்டம்

சென்னை, மார்ச் 13- ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவம் வாய்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்ய மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ‘ஃபேமி டிஎன்’ மற்றும் ‘ஆர்எஸ்அய்எல் லிட்’ இணைந்து நடத்தும் பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளத்தின் பயன்பாடு குறித்தான விழிப்புணர்வு மற்றும் குழு கலந்தாய்வு நிகழ்ச்சி கிண்டி சிட்கோ தலைமை இடத்தில் சனிக் கிழமை (11.3.2023) நடைபெற்றது. நாட்டில் ஏறக்குறைய 6 கோடியே 30 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கு கின்றன. இதன்மூலம் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக் கிறது. நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் குறு, சிறு நிறுவனங்கள் 3-இல் 1 பகுதியும் மொத்த ஏற்றுமதியில் 45 சதவீத பங்கையும் வகிக்கின்றன. இதில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளது.

ஏற்றுமதியில் தமிழ்நாடு ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்து இந்தியாவிலேயே 3-ஆவது பெரிய ஏற்றுமதி மாநில மாக விளங்குகிறது. ஏற்றுமதி சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்கு விக்கவும், ஆலோசனை, உதவிகள் வழங்கவும், முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட பேமி டிஎன் அலுவலகம் திறந்து வைக் கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட தொழில் மய்யங்களிலும் எற்றுமதி மேம் பாட்டு மய்யங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மாவட்ட ஏற்றுமதி மய்யங்களில் இந்தப் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் ஏற்றுமதி யாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து அலோசனைகளும் வழங்கப்படும். இந்த மய்யங்களில் ஏற்றுமதி செய்யப்படும் பொருள் கள் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் குறித்த தகவல்கள் பராமரிக்கப்படும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றவும், ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப் படும் உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து மேம்படுத்த நடவடிக் கையும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்தின் தனித் துவம் வாய்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்ய மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் புதிதாக உருவாக் கப்பட்ட 5 மாவட்ட தொழில் மய்யத்தின் களப்பணி அலுவலர்கள் பயன்படுத்தும் விதமாக, 10 புதிய இரு சக்கர வாகனங்களை வழங்கினார்.

ஃபேமி டிஎன் நிறுவனத்தின் விரிவாகக்கப்பட புதிய அலுவலகம் தொடங்கி வைக்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அரசு செயலர் வி.அருண்ராய் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment