மராட்டிய மாநிலத்தின் கஸ்பா பெத் இடைத்தேர்தல் பா.ஜ.க. கோட்டையை தட்டிப் பறித்த காங்கிரஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

மராட்டிய மாநிலத்தின் கஸ்பா பெத் இடைத்தேர்தல் பா.ஜ.க. கோட்டையை தட்டிப் பறித்த காங்கிரஸ்

புதுடில்லி,மார்ச்3- மராட்டிய மாநிலம் கஸ்பா பெத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங் கிரஸ் கட்சி வேட்பாளர் ரவிந்தர தன்கேகர் 11,000 வாக்குகள் வித்தி யாசத்தில் பாஜகவின் ஹேமந்த் ரசானேவை தோற்கடித்துள்ளார். 28 வருடங்களாக பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்த தொகுதியில் காங் கிரஸ் இந்த வெற்றியை ருசித் திருக்கிறது.

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள கஸ்பா பெத் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர்  முக்தா திலக், சின்ச்வாட் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மண் ஜக்தப் ஆகியோர் இறந்ததைத் தொடர்ந்து பிப்.26-ஆம் தேதி அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் எண்ணும் பணி நேற்று (மார்ச்.2) காலை முதல் நடந்து வந்தது.

மராட்டிய மாநிலத்தில் காங் கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) கூட்டணியான மகா விகாஸ் அகாடி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிவ சேனாவில் இருந்து கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரிந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக வுடன் இணைந்து ஆட்சியை அமைத்தார். இதனைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட் டது. சிவ சேனா பிளவு பாஜக ஆட்சி ஏற்பட்டவுடன் நடை பெற்ற இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கிய மானதாக பார்க்கப் பட்டது.

தங்களது பலத்தை நிரூபிக்க ஷிண்டே அணியும், உத்தவ் தாக்கரே அணியும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டன. இந்த நிலையில், ஆளும் பாஜகவின் கோட்டையாக இருந்து வந்த கஸ்பா பெத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த 1995-ஆம் ஆண்டு முதல், சுமார் 28 ஆண்டுகளாக இந்த தொகுதியில் பாஜக ஆளுமை செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து மகா விகாஸ் அகாடி தலைவர்கள் மிக வும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறு கையில், "எங்களுடைய வேட்பாள ரைத் தேர்ந்தெடுத்த கஸ்பா பெத் தொகுதி மக்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மராட் டிய மாநிலம் ஒரு முற்போக்கான மாநிலம்   அதன் கொள்கையை பாஜக அழிக்கப்பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தின் மேனாள் முதலமைச்சரும் எதிர்க் கட்சி தலைவருமான, தேசிய வாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் கூறுகையில், "காங் கிரஸ் கட்சியின் ரவீந்திர தன்கேகர் மிகவும் பொருத்தமான வேட்பா ளர். இரு சக்கர வாகனத்தில் சென்று மக்களுக்காக சேவை செய் யும் அடிமட்ட ஊழியர் அவர். முதல மைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவிந்திர பட்னாவிஸும் அவர்களின் முழு பலத்தையும் பயன்படுத்தினர். ஆனால், கஸ்பா பெத் தொகுதி இடைத்தேர்தல் வேறு வகையான பதிலைத் தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனாவின் (உத்தவ் அணி) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறுகையில்,"வரும் 2024 தேர்தலில் ஏற்படப் போகும் மாற்றத்திற்கான முன்னறிவிப்பு இது. பாஜகவுக்கும் டில்லியில் இருக்கும் அதன் தலைவர்களுக்கும் இதன் மூலம் யார் உண்மையான சிவசேனா என்பது புரிந்திருக்கும். இப்போதிலிருந்து பாஜகவின் கோட்டைகள் அனைத்தும் தகர்க் கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment