மேகேதாட்டு அணை அறிவிப்பு - கருநாடக அரசுக்கு வைகோ கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 20, 2023

மேகேதாட்டு அணை அறிவிப்பு - கருநாடக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, பிப். 20- தமிழ் நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கருநாடகா, மீண்டும் மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், ஆளும் பா.ஜ.க. அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அதனைக் குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கருநாடக சட்டமன்றத்தில் 2023-_2024ஆம் நிதி யாண்டிற் கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட அறிக்கையை  17ஆம் தேதி முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்து இருக்கிறார். இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை கருநாடகா எதிர் நோக்கி உள்ள நிலையில், அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேகேதாட்டு அணைத் திட்டம், பெங்களூருவுக்கு குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கான திட்டமாகும். மேகே தாட்டு அணை கட்டுவதில் கருநாடகா உறுதியாக இருக்கிறது. அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கவும், தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் பசவராஜ் தனது நிதிநிலை அறிக்கை உரையில் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 2022 ஜூன் 17 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16ஆவது கூட்டம், ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தேர் தலைமை யில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணைப் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்படும் என்று குறிப் பிடப்பட்டு இருந்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரியில் தமிழ் நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் திறந்து விடுவதை உறுதி செய்வது மட்டும் தான். அதற்குக்கூட அதிகாரம் ஏதுமற்ற அமைப்பாகத்தான் மேலாண்மை ஆணையம் இருக்கிறது.

காவிரியில் நீரைத் தடுத்து, மேகே தாட்டுவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட் டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கருநாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழ்நாட்டின் காவிரிப் படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

கடந்த 48 ஆண்டுகளில் 15.87 இலட்சம் எக்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். 

ஆனால். கரு நாடகத்தின் பாசனப் பரப்பு  9.96 இலட்சம் எக்டேரிலிருந்து 38.25 இலட்சம் எக்டேராக அதிக ரித்து விட்டது.

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கருநாடகா, மீண்டும் மேகே தாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந் திருப்பதும், ஆளும் பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில் குறிப் பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். கருநாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை அனு மதிக்கக் கூடாது என்று தமிழ் நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment