மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க சட்ட திருத்தம் - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 20, 2023

மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க சட்ட திருத்தம் - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

சென்னை, பிப். 20- மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக மாவட்ட பதிவாளர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

சோழிங்கநல்லூர் அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமான 2 ஆயிரத்து 400 சதுரஅடி வீட்டுமனை உள்ளது. கடந்த 2017 ஜனவரியில் அவர் இறந்துவிட்ட நிலையில், 7 மாதங்கள் கழித்து போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து, அந்த நிலத்தை சிலர் மோசடியாக விற்பனை செய்துள்ளனர்.

இந்த விவகாரம், சலபதியின் வாரிசுகளுக்குத் தெரியவரவே, இது தொடர்பாக சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே போலி பத்திரப் பதிவு குறித்து புகார் வந்தால், அதை விசாரித்து, அந்த பத்திரப்பதிவு போலியானது எனக் கண்டறியப் பட்டால் அதை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அமலுக்கு வந்த இந்தசட்டத் திருத்தத்தின்படி, போலி பத்திரப் பதிவை ரத்து செய்யக்கோரி சலபதியின் வாரிசுகள் மீண்டும் புகார் அளித்தனர். ஆனால், பதிவுத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இது தொடர்பாக சலபதியின் மகன் சுதாகரராவ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் முதலில் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்தசட்ட திருத்தத்துக்குப் பிறகு இரண்டாவதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய காலத்தில் முடி வெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து சொத்துகள் எப்படி மோசடியாக அபகரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்குஒரு உதாரணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆர்.சுரேஷ் குமார், இதுபோன்ற செயல்களை தடுக்கவே உயர் நீதிமன்ற யோசனைப் படி, நாட்டிலேயே முதன்முறையாக போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந் துள்ளது. 

இது பாராட்டுக்குரியது, என கருத்து தெரிவித்தார்.

மேலும், மனுதாரரின் புகார் தொடர்பாக மாவட்ட பதிவாளர் 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

No comments:

Post a Comment