கோயில்கள் சமத்துவம் கொண்ட இடங்களாக அமைய வேண்டும் முதலமைச்சர் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

கோயில்கள் சமத்துவம் கொண்ட இடங்களாக அமைய வேண்டும் முதலமைச்சர் கருத்து

சென்னை, ஜன.6 நாங்கள் மதவாதத்துக் குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. இதை அறியவேண்டி யவர்கள் அறிந்து கொண்டால் போதும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

 வில்லிவாக்கம்,  அகத்தீஸ்வரர்  கோயில் மைதானத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதி யிலுள்ள  கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புற  கோயில்களுக்கு பணிகள் மேற்கொள்ள ரூ. 2 லட்சம் வீதம் 2500  கோயில்களுக்கு ரூ. 50 கோடிக்கான வங்கி வரைவோலைகளை வழங்கிடும் அடை யாளமாக 18  கோயில்களைச் சார்ந்த நிர்வாகிகளிடம் வரைவோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.1.2023) வழங்கினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதல மைச்சர் பேசியது: "இன்றைக்கு திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள், என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்கிற முயற்சிகளில் நிறைய ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் மிகுந்த பணிவோடு இந்த விழாவின் மூலமாக தெரிவிக்க விரும்புவது, நாங்கள் மதவாதத் துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. இதை அறியவேண்டிய வர்கள் அறிந்து கொண்டால் போதும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை இந்த நிகழ்ச்சியை நேரடியாக வந்து பார்க்க முடியாது அவர்களால், ஏனென்றால் அவர்கள் மிகப்பெரிய இடத்தில் இருக் கிறார்கள். ஆனால், நிச்சயம் தொலைக் காட்சி மூலமாக பார்த்துக் கொண்டி ருப்பார்கள், நாளைக்கு காலையில் பத்திரிகையிலும் பார்ப்பார்கள். ஆக, இதை அவர்கள் உணர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய தி.மு.க. ஆட்சி மலர்ந்த தற்குப் பிறகு, கோயில்களுக்கு ஏராளமான பணிகள் செய்யப்பட்டுக் கொண்டிருக் கிறது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த விழா. இந்த கோயில் பணிகளைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டு மென்றால், நாங்களாக எதையும் செய்ய வில்லை.  

வல்லுநர் குழு ஒப்புதல்

 கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவினுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான் இந்த செயல்பாடுகள் எல்லாம் செய்யப் படுகின்றன. தற்போது வரை 3986 கோயில்களில்  பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட் டிருக்கிறது.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 கோயில்களைப் பழைமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு  பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளது.  கோயில்களுக்கு சொந்தமான  குளங்களை சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு 4 ஆலோசகர்களும்,  கோயில் களிலுள்ள பழைமையான மூலிகை ஓவியங்களைப் பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நம்முடைய இந்து சமய அற நிலையத்துறை மானியக் கோரிக்கை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஏராளமான அறிவிப்புகளைச் செய்தார். சட்டமன்றத் தில் அறிவிக்க நேரம் இல்லாமல் - முக்கியமானதை மட்டும்தான் அறிவித்தார். மற்றவைகளை, பேசியதாக பதிவு செய்ததாக அவர் பேசுகிறபோது குறிப் பிட்டுச் சொன்னார். இந்த நிகழ்ச்சிக்கு தயாராகும்போது, அப்படி அறிவிக்கப்பட் டதில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் நான் கேட்டேன். அவர் சொன்னார்,

2021-_2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளில் 91 அறிவிப்புகளின் மூலமாக 3,769  கோயில்களில்  பணிகளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2022_-2023 ஆம் ஆண்டிற்கான 165 அறிவிப்புகளில் 135 அறிவிப்புகளின் மூலம் 2578  கோயில்களில்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - என்றும் பெருமையோடு எடுத்துச் சொன்னார். இதற்காக நான் அவரை உங்கள் அனைவரின் சார்பில், அரசின் சார்பில் மனதார பாராட்டுகிறேன்.  2022_2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் இடம் பெறாத அறிவிப்பு தான் இப்போது செயல்படுத்தப்பட் டிருக்கிறது. இது அறிவிக்கப்படவில்லை. ஆக, சொன்னதை மட்டுமல்ல,' சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சி தான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள  கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத்  கோயில்களின்  பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள் ளப்பட இருக்கிறது. அதைத்தான் நம்முடைய அரசு விரும்புகிறது, இதுதான் நம்முடைய அரசினுடைய நோக்கம். திருவாரூரில் பல்லாண்டு காலமாக ஓடாது இருந்த தேரை ஓட வைத்த பெருமை யாருக்கு என்று கேட்டீர் களானால், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குத் தான். தேர் வரும் பாதையைச் சுற்றிலும் சாலைகள் அமைக்கப்பட்டன. தேர் ஓடுவது சில நாட்கள்தான், ஆனால் மக்கள் 365 நாளும் தொடர்ந்து அந்த சாலையைப் பயன்படுத்துகிறார்கள் என்று தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

அனைத்து ஜாதியினரும் 

அர்ச்சகர் ஆகலாம்

கோயில்கள் நமது கலைச் சின்னங் களாக, பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன. நமது சிற்பத்திறமைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன.   அத் தகைய கோயில்கள் சமத்துவம் உலவும் இடங்களாக அமைய வேண்டும் என்ப திலே நமது முழுக் கவனம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. எந்த மனிதரையும் ஜாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. நன்றாக கவனியுங்கள், எந்த மனிதரையும் ஜாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்குத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நாம் கொண்டு வந்தோம்.அன்னைத் தமிழ் மொழி ஆலயங்களில், நம்முடைய தமிழ் மொழி ஒலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டு இருக்கிறோம். சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்.மனிதர்களில் மட்டுமல்ல கோயில்களிலும் நகரக் கோவில் - கிராமக் கோவில் என்றும் - பணக்காரக் கோயில் - ஏழைக் கோவில் என்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுகிறது கிராமப்புறக் கோயிலாக இருந்தாலும் - ஏழ்மையான கோயிலாக இருந்தாலும் - ஆதிதிராவிடர் பகுதியில் இருக்கும் கோயிலாக இருந் தாலும் - அனைத்தையும் ஒன்று போலக் கருதி, உதவி செய்யக்கூடிய அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

மதம் - ஜாதி வேற்றுமை மட்டுமல்ல - கோயில் -_ சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. அனைத்து வழிபாட்டுத் இடங்களையும் கண்ணும் கருத்துமாக நாம் இன்றைக்கு கவனித்து வருகிறோம். அதனால்தான் இந்த மேடையில் அமர்ந் திருக்கக்கூடிய சமயச் சான்றோர்கள் மட்டுமல்ல, இன்னும் பலரும் இந்த அரசை ஆதரித்துக் கொண்டு இருக் கிறார்கள். எனவே, உங்களுடைய பாராட் டுகளும் எங்களுக்குத் தேவை. நீங்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். இன் றைக்கு நம்மை ஏளனம் செய்து கொண்டிருக்கக்கூடிய, விமர்சனம் செய்து கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு எல்லாம் இந்த நிகழ்ச்சியே, இந்த மேடையே சாட்சி, சான்று. எனவே, நாங்கள் எந்நாளும் உழைப்போம், எப்போதும் தொடர்ந்து உழைப்போம், எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை வருகிற வரையில் இந்த திராவிட மாடல் ஆட்சி உழைக்கும்"  

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.


No comments:

Post a Comment