சென்னை, ஜன. 13- வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த விவரங்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும் என்று அயலகத் தமிழர் தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அயலகத் தமிழர் தின விழாவில், அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்றல்ல, நேற்றல்ல, 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகில் உள்ள பிற நாடுகளுடன் நல் லுறவு கொண்டிருந்த பெருமை தமிழ் நாட்டுக்கு உண்டு. அந்த பெருமையின் தொடர்ச்சியாகத்தான், தமிழ் நிலப் பரப்பின் அடையாளமாக அயலகத்தில் வாழும் தமிழர்கள் வந்திருக்கிறீர்கள்.
எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்கே காடு திருத்தி, கழனி செழிக் கச்செய்து, உழைப்பால் தன்னை மட்டு மின்றி, தனக்கு வாழ்வளித்த நாட்டை யும் உயர்த்தி காட்டியவர்கள் தான் தமிழர்கள். தலைமுறைகள் பல கடந்த தமிழர்கள். அவர்களின் வழித்தோன்றல் கள் நீங்கள். எந்த நாட்டுக்கு சென்றாலும், சொந்த நாட்டையும் தாய்மொழி யையும் தமிழர்கள் தங்கள் நெஞ்சக் கூட்டில் அடைகாத்து வைத்திருப்பது வழக்கம். விதை நெல்லாக தமிழை எடுத்துச்சென்று, தாங்கள் வாழும் நாடுகளிலும் தமிழ் விளையும் நிலங் களை உருவாக்கியவர்கள் தமிழர்கள். பல தலைமுறைகள் கடந்த அயலகத் தமிழர்களின் ஆற்றலும், ஆராய்ச்சி திறனும், உழைப்பின் மேன்மையும், உயர்ந்த பொறுப்புகளும் தனிப்பெரும் வரலாறாக உருவாகியுள்ளன. எனவே தான், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரான கலைஞர் 5-ஆவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது, 2010ஆ-ம் ஆண்டில், அயலகத் தமிழர்களின் நலன் காக்க துறையை உருவாக்க முனைந்தார். கடல் கடந்த தமிழர்களின் வேதனை உணர்வை வெளிப்படுத்திய கலைஞரின் பேனா, அதனை துடைப்பதற்கான திட்டத்தை யும் வரைந்து காட்டியது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, மறுவாழ்வுத் துறையில் ஒரு பிரிவு இணைக்கப்பட்டு அயலகத் தமிழர்கள் நலன் காக்கும் பணி தொடங்கப்பட்டது.
கடந்த 2021ஆ-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திராவிட மாடல் அரசு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்த படி, அயலகத் தமிழர்களின் நலனுக் கென தனியே ஓர் அமைச்சகத்தை உரு வாக்கி அமைச்சரையும் நியமித்துள்ளது. அயலகத்தில் வாழும் தமிழர் நலன் காக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த துறையில், கடந்த ஓராண்டில் மட்டும், வெளிநாடுகளில் இறந்துபோன 288 தமிழர்களின் உடல்களை தமிழ் நாட்டுக்கு கொண்டு வருதல், அங்கே இறந்தவர்களின் ஊதிய நிலுவை மற்றும் இழப்பீட்டுத்தொகையை பெற்று தருதல், மருத்துவ இயலாமையால் பாதிக்கப் பட்டவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல் போன்ற வேலைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ்ச்சங்கங்களின் உதவியுடன் செயல் படுத்தி வருகிறது. அயலகத் தமிழர்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்து, அயல்நாட்டுக்கு செல்லும் தமி ழர்களுக்கு அடையாள அட்டை, காப்பீடு, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமண உதவித்தொகை, கல்வி உதவித் தொகை என பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்தில், வெளிநாடு களிலிருந்து 80 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பணி வாய்ப்பை இழந்த காரணத்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலமாக மானியத்து டன் கூடிய கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே போர் மூண்டபோது, ஒன் றிய அரசின் ஒத்துழைப்புடனும், உக்ரை னின் அண்டை நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தன்னார்வ லர்கள் உதவியுடனும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியால், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த 1,890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட் டனர். இவர்களில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர். கடந்த ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தமிழ்நாடு அரசின் சார்பிலே உடனடியாக அவர்களுக்கு தேவையான ரூ.174 கோடி மதிப்பிலான உணவுப்பொருட்கள், பால்பவுடர் மற் றும் உயிர் காக்கும் மருந்துப் பொருட் களை அனுப்பி வைத்து, மனிதநேய அடிப்படையில் அங்குள்ள மக்களின் இன்னலை போக்கிட உதவிக்கரம் நீட் டியது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமையும்போதெல்லாம், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு, தாயுள்ளத்தோடு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.
அயலகத் தமிழர் நாளையொட்டி, சில அறிவிப்புகளை மகிழ்ச்சியோடு வெளியிட விரும்புகிறேன். முதலாவ தாக, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற் காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமி ழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும். இரண்டாவ தாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர் களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய் தமிழ்நாட்டின் மரபின் வேர்க ளோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண் பாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். மூன்றாவதாக, அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச்சென்று அங்கு எதிர்பாராத விதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்துக்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நான்காவதாக, அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும். என்ற அறிவிப்புகளை வெளியிடுவ தோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் தமிழ்ச் சொந்தங்களின் நலன் காத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, கண்ணை இமை காப்ப தைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று மீண்டும் உறுதியளிக் கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும். இவ்வாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment