சென்னை. ஜன. 20- சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் ஏராளமான இயக்க குடும்பங்களின் தோழர்கள் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29ஆம் ஆண்டை முன்னிட்டு, ”திராவிடர் திருநாள்” சென்னை பெரியார் திடலில் 17-01-2023 அன்று நடைபெற்றது. அத்துடன் கடந்த ஆண்டுகளைப் போலவே சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலையை ஒட்டியுள்ள வெளியரங்கில் பகல் 11 மணியளவில் ”சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்” எனும் பெயரிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பெரியவர்கள் இருபாலருக்கும் வேக நடைப் போட்டி, செங்கல் தூக்குதல், சைக்கிள் டயர் உருட்டுதல், இசை நாற்காலி, சிறுவர்களிலும் இருபாலருக்கும் ஓட்டப் பந்தயம், வேக நடைப்போட்டி, சாக்குப் போட்டி, சைக்கிள் டயர் உருட்டுதல், பலூன் ரயில், ஸ்பூன் - எலுமிச்சம் பழம், குறிபார்த்து எறிதல் உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன.
இயக்கக் குடும்பத் தோழர்கள் மிகுந்த குதூகலத்துடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மாலை நடைபெற்ற ”திராவிடர் திருநாள்” நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், குடும்ப விழாவில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்தார்.
காலை முதல் குடும்ப விழா விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற பா.சு.ஓவியச் செல்வன் தலைமையில் மு.க.பகலவன், நா.பார்த்திபன், உடுமலை வடிவேல், மாட்சி, மு.கலைவாணன், பொன்னேரி செல்வி, பவானி, கி.மணிமேகலை, த. மரகதமணி, வை.கலையரசன், அன்பரசன், மு.க.முத்தரசன், மங்களபுரம் பா. பார்த்திபன், அரவிந்த், பெரியார், சமரசம், எருக்கஞ்சேரி கலைச் செல்வன், சிற்றரசு, கிஷோர், மணிவண்ணன், கணேசன், தமிழரசன், கலைமணி, சுரேஷ், அண்ணா.மாதவன், மகிழ் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். குடும்ப விழா ஒருங்கிணைப்புப் பணிகளை துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், சீர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் பூவை செல்வி, ஆதிலெட்சுமி உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment