மாமிசம் உண்பது தீய பழக்கமன்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

மாமிசம் உண்பது தீய பழக்கமன்று

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர், சிவகங்கை

மனிதன் இயற்கை யாகவே ஒரு அனைத் துண்ணி ( OMNIVORE).

மாமிசம் மட்டும் உண்ணலாம். 

தானியங்கள் மட்டும் உண்ணலாம். 

காய்கறிகள் மட்டும் உண்ணலாம். 

கனிகள் மட்டும் உண்ணலாம். 

ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்.

முட்டை மட்டுமே சாப்பிட்டு நூறு ஆண்டுகள் வாழ்ந்த பாட்டியையும் பார்க்கிறோம்.

மத்திய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நான் வெஜ் என்பதில் பாம்பு, பல்லி, பூச்சிகளும் அடங்கும். 

உலகம் முழுவதும் அதிகமாக உண்ணப்படும் நான் வெஜ் - பன்றி இறைச்சி அதற்கடுத்த படியாக மாட்டு இறைச்சி அதற்கடுத்த படியாக கோழி மீன் போன்றவை.

மேற்சொன்னவைகளில் எது கிடைத்தாலும் மனிதனால் சாப்பிட்டு உயிர் வாழ முடியும்.

இதில், பிறப்பால் பலர் மரக்கறி மட்டும் உண்ணும் உணவு முறையில் இருக்கின்றனர். 

பலர் தாமாக முடிவு செய்து மரக்கறி மட்டும் உண்ணும் உணவு முறையை தங்களுக்கு உகந்ததாக அமைத்துக் கொள்கின்றனர். 

இன்னும் சிலருக்கு மருத்துவ காரணங்களுக்காக மரக்கறி உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது.

அவரவர் எதை உண்ண வேண்டும் என்று இடம் பொருள் ஏவல் பொறுத்து முடிவு செய்து உண்ணும் உரிமை அவரவர்க்கு உண்டு.

மருத்துவ ரீதியான காரணங்கள் இருப்பின் அந்தக் காரணங்களை அறிவியல் ஆய்வுகளுடன் பேசி நம்மால் சிலவற்றை உணவு சார்ந்து ஒருவருக்கு பரிந்துரை செய்ய இயலும். 

இதிலும் பரிந்துரை மட்டுமே செய்ய இயலும். பரிந்துரை என்பது SUGGESTION மட்டுமே.

பரிந்துரையை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் எப்போதும் அவரவர் தனிமனித சுதந்திரம் சார்ந்தது.

இதில் எதை சாப்பிட்டால் ஆரோக்கியம் என்பதில்தான் விவாதங்கள் நடக்கின்றன.

விவாதங்கள் அறிவியல் ரீதியாக நடந்தால் ஆரோக்கியமானதுதான்.

அதுவே ஜீவகாருண்யம்.

மாமிசம் செரிக்காது.

மாமிசம் இதயத்துக்கு கேடு.

மாமிசம் கேன்சர் வரவழைக்கும்.

கரியமில பாத அச்சு (carbon foot print))

மறைநீர் (Virtual water) என்று அறிவியல் பூர்வமாக நிரூபணமாகாத பல விசயங்களை உள்ளடக்கி மாமிசம் உண்பது கேடு என்பது போலவும் மரக்கறி உண்பதால் தான் உலகம் விமோசனமடையும் என்பது போல கருத்துகள் பரவுகின்றன. 

இன்றும் மனிதன் அனைத்துண்ணி தான். தனது உணவுத் தேவைக்காக மற்ற உயிரை சார்ந்து வாழும் ஒரு சமூகப் பிராணி மனிதன். 

செடி கொடி மரத்துக்கும் உயிர் உண்டு. விலங்குகளுக்கும் உயிர் உண்டு. கடல் வாழ் உயிரினங்களுக்கும் உயிர் உண்டு.

உணவுக்காக நாம் செய்யும் உயிர் வதையைக் காட்டிலும் பல்வேறு இன்னபிற தேவைகளுக்காக செய்யும் உயிர்வதை அதிகம்.

வேட்டையாடி சமூகமாக நாம் வாழ்ந்த காலந்தொட்டு பின் நாகரீகங்கள் தோன்றி விவசாய புரட்சி நடந்த பிறகும், மற்றொரு உயிரை உணவுக்காக நாடியே நமது இருப்பு உள்ளது.

இந்தியாவில் மாமிச உணவுகளின் நுகர்வு என்பது மேலை நாடுகளைக் காட்டிலும் மிகக் குறைவு.

இங்கு அதிகரித்து வரும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய், ரத்தக்கொதிப்பு, பிசிஓடி, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக உணவைக் காரணமாகக் கூற வேண்டும் என்றால், மாமிசம் உண்பதை காரணமாகக் கூற இயலாது. 

மாறாக, நாம் உண்ணும் தானியங்கள் சார்ந்த அதி உயர் மாவுச்சத்து உணவு (VERY HIGH CARBOHYDRATE INTAKE)  முறையே காரணம் எனலாம்.

இந்தியாவில் அய்ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் புரதச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கிறது. 

இதற்குக் காரணம் - பொருளாதாரம் சார்ந்த சவால்களாலும் சமூகத்தில் நிலவும் மாமிசம் மீது இருக்கும் பொய் பிரச்சாரங்களாலும் புரதம் நிரம்பிய மாமிசத்தையும் முட்டையையும் மக்கள் குறைவாக நுகரும் தன்மை இருக்கிறது.

இங்கு யாருக்கேனும் நீரிழிவோ ரத்தக்கொதிப்போ கண்டறியப்பட்டால் அவர்கள் ஏற்கெனவே குறைவாக சாப்பிட்டு வரும் மாமிசத்தை முழுமையாக நிறுத்தவே கூறப்படுகிறது.

முட்டைகளில் மஞ்சள் கருவை ஒதுக்கிவிட அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் அதனால் அறிவியல் ரீதியாக பெரிய பயன் ஏதும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

மரக்கறி மட்டும் உண்போர், மரக்கறியுடன் பால் உண்போர், மீன் மட்டும் உண்போர், அனைத்துண்ணியாக இருப்போர், யாராகினும் அவரவர் உணவுமுறையில் வரம்பு மீறாமல் இருப்பது சிறந்தது.

அறிவியல் அடிப்படை இன்றி இது தவறு, இது சரி என்று முடிவு செய்து ஒன்றைப் போற்றுவதோ ஒன்றை தூற்றுவதோ தவறு.

முடிவுரை: ஒருவர் உண்ணும் உணவு 

அவரவர் தேர்வு.

நோய்கள் இருப்பின் மருத்துவ ரீதியான பரிந்துரைப்படி உணவின் தன்மையை அமைத்துக் கொள்வதும் அவரவர் சிந்தனைக்குட்பட்டது

மாமிசம் உண்ணும் பழக்கம் தீய பழக்கமன்று. அவரவர்க்கு உகந்த மாமிசத்தை அவரவர் உண்ணலாம்.

அளவுக்கு மிஞ்சானால் அமிழ்தும் நஞ்சே!

எதிலும் வரம்பு பிறர் எல்லைகளை மீறாதவர்களாக இருப்போம்!

பன்முகத்தன்மையை மதித்து வாழப் பழகிடுவோம்!

இவ்வுலகம் நம் அனைவருக்குமானது!

இங்கு பிறப்பால் - உண்ணும் உணவால் 

படித்த படிப்பால் - வகிக்கும் பதவியால் 

உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.

இங்கு நீங்கள் நான் என அனைவருமே

பலகீனங்கள் பல நிறைந்த சாதாரண மனிதர்களே ...

நன்றி!

No comments:

Post a Comment