தமிழ்நாட்டில் செயல்படும் மின் உற்பத்தி திட்டங்கள் என்ன? மின்சாரத் தேவை எவ்வளவு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

தமிழ்நாட்டில் செயல்படும் மின் உற்பத்தி திட்டங்கள் என்ன? மின்சாரத் தேவை எவ்வளவு?

தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நிலக்கரி, எரிவாயு போன்ற மரபுசார்ந்த எரிசக்தி ஆதாரங்கள் மூலமும், நீர், காற்றாலை, சூரிய ஒளி போன்ற மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் தினசரி மின் தேவை அதிகபட்சம் 15 ஆயிரம் மெகாவாட்.. கோடைக் காலத்தில் இது 17 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரிக்கும். தமிழ்நாட்டில் தினசரி 29 கோடி முதல் 30 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் அனல் மற்றும் எரிவாயு ஆதாரங்கள் மூலம் 4 ஆயிரத்து 836 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், அனல் மின் நிலையங்கள் மூலம் 4320 மெகாவாட் மின்சாரமும், எரிவாயு மின் நிலையங்கள் மூலம் 516 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

அனல் மின்சாரம்:

அனல் மின்சாரத்தைப் பொறுத்தவரை, வடசென்னை அனல் மின் நிலையம் முதல் யூனிட்டில் இருந்து 630 மெகாவாட், இரண்டாவது யூனிட்டில் இருந்து 1200 மெகாவாட், மேட்டூர் முதல் யூனிட்டில் இருந்து 840 மெகாவாட், இரண்டாவது யூனிட்டில் இருந்து 600 மெகாவாட், தூத்துக்குடி மின் நிலையத்தில் இருந்து 1050 என மொத்தம் 4320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

எரிவாயு மின்சாரம்:

எரிவாயு மின்சாரத்தைப் பொறுத்தவரை, வழுதூர் முதல் யூனிட்டில் இருந்து 95 மெகாவாட், இரண்டாவது யூனிட்டில் இருந்து 92 மெகாவாட், குத்தாலம் மின் நிலையத்தில் இருந்து 101 மெகாவாட், திருமாக்கோட்டை மின் நிலையத்தில் இருந்து 108 மெகாவாட், பேசின் பாலம் மின் நிலையத்தில் இருந்து 120 மெகாவாட் என மொத்தம் 516 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர் தேக்கங்களில் இருந்து..

மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் என மொத்தம் 47 நீர் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 2 ஆயிரத்து 320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றாலை மின்சாரம்:

கற்றாலை மூலம் 8684 மெகாவாட், சூரிய ஒளியில் இருந்து 6040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

நெய்வேலி மற்றும் கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களில் இருந்து 6558 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது தவிர, தனியார் மின் உற்பத்தியாளர்கள் மூலமும் 5000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் வருங்காலத்தில் அமலுக்கு வர உள்ள மின் உற்பத்தித் திட்டங்கள் என்னென்ன?

டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வருங்காலத்தில் மின்உற்பத்திக்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 2024, 2026ஆம் ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர உள்ள திட்டங்களை காணலாம். 

அனல்மின் நிலையத் திட்டங்களைப் பொறுத்தவரை எண்ணூர் சிறப்புப்பொருளாதார மண்டலத்தில் 2 அலகுகளில் தலா 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. எண்ணூர் விரிவாக்கத் திட்டத்தில் 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 2 அலகுகளில் தலா 660 மெகாவாட்டும், 2 ஆவது கட்டத்தின் 2 அலகுகளில் தலா 660 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அணுமின் திட்டங்களை பொறுத்தவரை கூடங்குளம் 3 ஆவது யூனிட்டில் ஆயிரம் மெகாவாட்டும், 4 ஆவது யூனிட்டில் ஆயிரம் மெகாவாட்டும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சூரிய மின் சக்தித் திட்டத்தில் அடுத்த பத்தாண்டுகளில், 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் அனல் மற்றும் அணு மின் திட்டங்கள்

அனல் மின்நிலையத் திட்டங்கள்:

எண்ணூர் SEZ- 2 யூனிட்டுகளில் தலா 660 மெகாவாட்

எண்ணூர் விரிவாக்கம் - 660 மெகாவாட்

உடன்குடி கட்டம் 1 - 2 யூனிட்டுகளில் தலா 660 மெகாவாட்

உடன்குடி கட்டம் 2 - 2 யூனிட்டுகளில் தலா 660 மெகாவாட்

அணு மின்திட்டங்கள்:

கூடங்குளம் யூனிட் 3 - 1000 மெகாவாட்

கூடங்குளம் யூனிட் 4 -1000 மெகாவாட்

சூரிய மின்சக்தி திட்டங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் - 20,000 மெகாவாட் ஆக இருக்கும்

No comments:

Post a Comment