ஆன்லைன் சூதாட்டம் : மேலும் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை ஆளுநர் கண் திறப்பாரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

ஆன்லைன் சூதாட்டம் : மேலும் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை ஆளுநர் கண் திறப்பாரா?

சென்னை, டிச.29 ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி, கருமாங்கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (வயது 24). பி.காம். பட்டதாரி. இவரது தந்தை சங்கர் இறந்துவிட்டார். இதனால் தாயார் விஜயலட்சுமியும், அருண்குமாரும் கருமாங்கிணற்றில் வசித்து வந்தனர். கடந்த 22-ஆம் தேதி அருண்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கருமாங்கிணற்றில் உள்ள ஊர் பொது கிணற்றில்  அருண்குமாரின் உடல் மிதந்தது. காவல்துறையினர் அவரது உடலை கயிறு கட்டி மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அருண்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி தனது மகனுக்கு 'ஸ்மார்ட்போன்' ஒன்றை வாங்கி கொடுத் தார். அந்த அலைபேசியை உபயோகப்படுத்தி வந்த அருண்குமாருக்கு, ஆன்லைன் சூதாட்டம் மீது நாட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

ஆரம்பத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் அருண்குமாருக்கு பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் ரூ.1,000, ரூ.2,000 என கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை இழந்து வந்தார். இதையடுத்து விட்ட பணத்தை மீண்டும் பிடிக்க அதிக தொகையை வைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்தை அருண்குமார் இழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த தாய் விஜயலட்சுமி மற்றும் நண்பர்கள், அருண்குமாரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அருண்குமார் சம்பவத்தன்று ஊர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment