சென்னை,டிச.9- மாண்டஸ் புயல் காரணாமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் இன்று (9.12.2022)காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மய்ய அறிக்கையில், வங்கக் கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புயலானது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நிருவாகத் துறை அமைச்சர் மேயர் கே.என்.நேரு, சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா ஆலோசனையின்படியும் முதன்மை செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் இன்று (9.12.2022) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.
மழைநீரை வெளியேற்ற
இக்கூட்டத்தில், மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளையும், மரக்கிளைகளை அகற்ற தேவையான மர அறுவை இயந்திரங்களையும், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த ஜே.சியி. டிப்பர் லாரிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், மழைப்பொழிவின் போது சுரங்கப்பாதை களில் உடனடியாக மோட்டார் பம்புகளை இயக்கி மழை நீரை வெளியேற்றவும் மாநகராட்சியின் சார்பில் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றவும், அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளின் உறுதித் தன்னையினை ஆய்வு செய்து தேவைப்படின் மக்களின் பாதுகாப்பு கருதி அவற்றை அகற்றவும், கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தகடுகள் போன்ற இலகுவான பொருட்களை கட்டி பாதுகாப்பான இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment