காசியில் தமிழ்ச் சங்கமம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

காசியில் தமிழ்ச் சங்கமம்

திருவள்ளுவர் சிலை வைக்க 32 ஆண்டுகளாக அனுமதிக்காக காத்திருக்கும் சங்கடம்!

அலகாபாத், டிச. 3 அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க கடந்த 32 ஆண்டுகளாக முயற்சிக்கப் படுகிறது. காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறும் இத்தருணத்தில் உத்த ரப்பிரதேச மாநில பா.ஜ.க. அரசின் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அல காபாத்தில் கங்கை, யமுனை மற்றும்மண்ணுக்குள் ஓடுவதாகக் கருதப்படும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது. இதில்  நீராட தமிழர்கள் ஏராளமானோர் அன் றாடம் இங்கு வருகின்றனர். எனவே சங்கமம் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்க உ.பி.யின் ஹிந்தி அறிஞர்கள் விரும்பினர். இவர்கள், உ.பி.யில் மொழிகளை இணைக்க அமைத்த ‘பாஷாசங்கம்’ எனும் சமூகசேவை அமைப்பை சேர்ந்த வர்கள். பெரும்பாலும் வட மாநிலத் தவர்களைக் கொண்ட இந்த அமைப்பு, அலகாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1976 முதல் செயல்படுகிறது.

அலகாபாத் சங்கமத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயரை வைத்து அங்கு அவரது சிலையையும் அமைக்க பாஷா சங்கம் கடந்த 1990 முதல் வலியுறுத்தி வருகிறது. கடந்த ஜூன் 24,2017-இல் திரிவேணி சங்கமத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைத்து சிலையும் அமைக்க அலகாபாத் மாநகராட்சி அனுமதி அளித்தது.இதையடுத்து அதே ஆண்டு ஜூலை 10இ-ல் ‘தமிழ்கே சந்த் கவி திருவள்ளுவர் மார்க்’ (தமிழ் அய்யன் திருவள்ளுவர் சாலை) என்ற ஹிந்தி, தமிழ் கல்வெட்டுக்களை இன்மா இன்டர்நேஷனல் நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் ரத்தின வேல் திறந்து வைத்தார். இத் துடன்அவர், 2021 ஜனவரி 15, திருவள்ளுவர் தினத்தன்று சிலை வைக்க நன்கொடை முன்பணமாக ரூ.1 லட்சம் அளித்திருந்தார். ஆனால் சிலை அமைக்க முற்பட்டபோது, பொது இடங்களில் சிலை வைக்க நீதிமன்ற தடை இருப்பதாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது.  இது பற்றி  பாஷா சங்கத்தின் பொருளா ளர் சந்திர மோகன் பார்கவா கூறும்போது, “முதலில் இரண்டுக்கும் அனுமதி அளித்த அலகாபாத் வளர்ச்சி ஆணையம் பிறகு சிலை வைக்க முதலமைச்சர் யோகியின் உத்தரவு அவசியம் என்று கூறி தடை விதித்தது. கடந்த 6 ஆண்டுகளாக அவரை சந்திக்கவும் முடியாமல் உள்ளது. இது தொடர்பான செய்தி களை அறிந்து தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் குரல் கொடுத்தும் சிலைக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்றார். பாஷா சங்கம் சார்பில் வடமாநி லங்களின் பல இடங்களில் தமிழ் மொழி வகுப்புகளும் எடுக்கப்படு கின்றன. திருவாசகம், பெருங்கதை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்களை ஹிந்தியிலும், துளசி தாசரின் 12 நூல்களில் 7-அய் தமிழிலும் பாஷா சங்கம் மொழி பெயர்த்துள்ளது. இவற்றில், ஹிந்தி வழியே தமிழ் கற்பிக்க எழுதப்பட்ட 3 நூல்களில் ‘சக்தி மாலை’-க்கு ஒன்றிய அரசு ரூ.1 லட்சம் பரிசும் அளித்துள்ளது.

பாஷா சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்க் கவிகளுக்கும் -_ கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி அறிஞர்களுக்கும் விழா எடுக்கப்படுகிறது. பாஷா சங்கத்தின் மேனாள் பொதுச் செயலாளரும் திருக்குறளை ஹிந்தியில் மொழி பெயர்த்தவருமான தமிழர் எம்.கோவிந்தராஜன் கூறும்போது, “சங்கமம் அருகே அரைன் காட் எனும் இடத்தில் உள்ள சச்சா பாபா ஆசிரமத்தில் திருவள்ளுவர் சிலை வைத்துக்கொள்ள அதன் தலைவர் சுவாமி கோவிந்த தாஸ் அனுமதி தந்தார். இதனால், திருவள்ளுவருக்கு குறிப்பிட்ட மதத்தின் அடையாளம் வந்துவிடும் என அஞ்சி மறுத்து விட்டோம்” என்றார்.

 வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, கடந்த நவம்பர் 19ஆ-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது. இதை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறள் மொழிபெயர்ப்புகளை 13 மொழிகளில் வெளியிட்டார். இதன் பிறகும் அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதி கிடைக் காமல் இருப்பதை பெரும் ஏமாற் றமாக உ.பி.வாசிகள் கருதுகின்றனர். 

இதேபோல், புதுடில்லியில் தமிழர்கள் அதிகம் வாழும் சகூர் பூர்பகுதி மெட்ரோ ரயில் நிலை யத்துக்கு திருவள்ளுவர் பெயர் வைக்க வேண்டும் என கோரப் படுகிறது. டில்லியின் ‘தமிழ் இளைஞர்கள் கலாச்சார சங்கம்’ எனும் தமிழர் அமைப்பு கடந்த 2018 முதல் இக்கோரிக்கையை எழுப்பி வருகிறது. இதற்காக, மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜி.கே.வாசன், திரைக் கலைஞர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு கடிதம் அளித்தும் அனுமதி கிடைக்க வில்லை.இதில் உதவ வேண்டி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரி டமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை வைக்க உத் தரப்பிரதேச முதலமைச்சர் யோகி யின் உத்தரவு அவசியம் என்று கூறி ஆணையம் தடை விதித்தது. கடந்த 6 ஆண்டு களாக அவரை சந்திக்கவும் முடியாமல் உள்ளது என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment