சென்னை, டிச .20, தண்டையார்பேட்டை நாவலர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்புறப்படுத்தினர். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், நாவலர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, சுமார் 480 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காலியாக உள்ள இடத்தில் ஒரு சிலர் பெட்டிக்கடை, அயன் செய்யும் கடை மற்றும் சிறு, சிறு கோயில்கள் வைத்து வழிபடுவது என ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனை அகற்ற அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இருந்தபோதும், அவர்கள் அகற்றாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால், வாழ்விடம் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், காவல் துறையினர் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் முழக்கங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். இதனால், காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றினர்.
No comments:
Post a Comment