புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை,டிச.13- "புதுச்சேரி மாநிலத்தில் திமுக ஆட்சி அமையும். திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தற்போ தைய தேவை" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமார் இல்ல திருமண விழா நேற்று (டிச.12) புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாடு, புதுச்சேரி என நான் பிரித்துப் பார்ப்பதில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகள் என்றுதான் சொல்வது வழக்கம். திராவிட இலக்கியத்தின் தலைநகர் புதுச்சேரிதான். தி.மு.கழகத்தில் இருப்போ ரிடம் போட்டி இருந்தால்தான் கட்சி வளரும். அதே நேரத்தில் பொறாமை கூடாது. தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட்டு உதயசூரியன் மலர்ந்து திராவிட மாடல் என்று பெருமையோடு சொல்கிறோம். திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தேவைதான். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த ஆசை உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட அந்த வாய்ப்பு கிட்டியது. ஆனால் போய்விட்டது.

தற்போது புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடக்கிறது. ஆனால், மக்களுக்காகதான் நடக்கிறதா? புதுச்சேரி முதலமைச்சர் உயர்வானவர்தான். நல்லவர்தான். ஆனால் அடிப்பணிந்து கிடக்கிறார். வல்லவராகவும் இல்லை. ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஆட்சி நடப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா- அடங்கி ஒடுங்கி போய் ஆட்சி நடக்கிறது. இது புதுச்சேரிக்கு இழுக்கு. ஏதாவது நன்மை நடந்துள்ளதா? இச்சூழலில் புதுச்சேரியில் திமுக ஆட்சி வர மக்கள் விரும்புகிறார்கள். ஏற்கெனவே திமுக ஆட்சியும், திமுககூட்டணி ஆட்சியும் நடந்துள்ளது. நிச்சயமாக திமுக ஆட்சி மீண்டும் புதுச்சேரியில் உதயமாகும். அதேநேரத்தில் உறுதியாக மதவாத ஆட்சி புதுச்சேரியில் உருவாகி விடக்கூடாது. வரும் நாடாளுமன்றத் தேர்தல், அதைத்தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சி அமைக்கும் இலக்கோடு பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் யார் கூட்டணி, எவ்வகையில் அமையப் போகிறது என்பது அப்போது முடிவு எடுக்கப்படும். வெற்றிக்கு அச்சாரமாய் நாம் கடமையை துவக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.


No comments:

Post a Comment