ரவுடிகளுக்குப் பாதுகாப்பளிக்கிறது பா.ஜ.க.! அதன் பின்னணித் திட்டம் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

ரவுடிகளுக்குப் பாதுகாப்பளிக்கிறது பா.ஜ.க.! அதன் பின்னணித் திட்டம் என்ன?

பி.ஜே.பி., அகில இந்திய அளவிலே ரவுடி களின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது!

தேடப்படும் கொலை-கொள்ளை குற்ற வாளிகளின் சரணாலயமாகி விட்டது.

சிறைக்குச் சென்று சிறை உடை அணிய வேண் டியவர்கள் காவித்துண்டு போர்த்திக் கொண்டு காவல் துறையின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு பி.ஜே.பி.யின் தலைவராக எல்.முருகன் இருந்தபோது வண்டலூரில் ரெட்ஹில்ஸ் சூர்யா எனும் பயங்கரக் கேடி. தனது கூட்டத்தோடு பி.ஜே.பி. யில் சேர்ந்திட வந்து காவல்துறையினரைக் கண்டதும், மேடையை விட்டு ஓடிவிட்ட செய்தி ஏடுகளில் பரபரப்பாக வெளிவந்தது! 

இந்த ரெட்ஹில்ஸ் சூர்யா மீது கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு பயன்படுத்தியது போன்று ஏறத்தாழ 50 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவன் தேடப்படும் குற்ற வாளியாக இருந்தான்!

அவன் அன்றைய பாரதீய ஜனதா கட்சி யின் மாநிலத் தலைவராக விளங்கிய எல்.முருகன் முன் பாரதீய ஜனதா கட்சியில் இணைய, தானும் காவித்துண்டு தரித்து தனது கூட்டாளிகளுக்கும் காவி அணிவித்து வந்திருந்தான்!

தேடப்படும் ரவுடி, பா.ஜ.க. மேடையில் இருந்த தகவல் கிடைத்ததும் காவல் படை அங்கு விரைந்ததும், அந்த ரவுடி சூர்யா காவித்துண்டோடு ஓட, அவன் கூட்டி வந்தி ருந்த, ரவுடிகளில் சிலர் கத்தியோடு காவலர் களிடம் அகப்பட்டுக் கொண்ட செய்திகள் ஏடு களில் வந்தன. இந்தச் செய்தி வருவ தற்கு முன் பிரபல ரவுடிகள் கல்வெட்டு ரவி சத்யராஜ் ஆகியோர் பி.ஜே.பி.யில் இணைந்த செய்திகள் வந்ததும் நினைவிருக்கலாம்.

இதுபோன்று தமிழ்நாட்டில் மட்டும் பி.ஜே.பி.யில் ரவுடிகள் இணைந்து பாதுகாப்புத் தேடு கிறார்களா என்று பார்த்தால், இப் போது கருநாடகாவிலும் அத்தகைய செய்தி வெளிவந்துள்ளது.

கருநாடகப் காவல்துறையால் தேடப்படும் ரவுடியான சுனில் என்பவன், ஒரு குருதிக் கொடை முகாம் விழாவில் பி.ஜே.பி., எம்.பி.க் களான தேஜஸ்வி சூர்யா மற்றும் பி.சி.மோகன் இருவரோடு இணைந்து கலந்து கொண்டுள்ளான்.

மூவரும் காவி வண்ணத் துண்டை அணிந்து கொண்டு அந்த விழாவில் காட்சி யளித்த ஒளிப்படம் ஏடுகளில் வெளிவந்துள் ளது. அந்த விழாவில் காவல்துறையினரும் இருந்தனர். இந்த ரவுடி சுனிலை கொலை, பணம் பறித்தல் போன்று பன்னிரண்டு வழக்குகள் தொடர்பாகத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பி.ஜே.பி. எம்.பி.க் களோடு அவனும் அவர்களைப் போலவே காவித் துணி அணிந்து விழாவில் பங்கேற்றதுடன், ஒளிப்படங்களுக்கு 'போஸ்' கொடுத்துள்ளான். இதிலே வேடிக்கை என்ன வென்றால், இந்த நிகழ்ச்சி நடை பெறும் ஓரிரு தினங்களுக்கு முன் தலைமறைவாக இருந்த அவனை அவன் வீட்டிற்குள் நுழைந்து தேடி ஏமாற்றத் துடன் காவல்துறையினர் திரும்பியுள்ளனர். அந்த தேடப்படும் பயங்கர கேடி. பி.ஜே.பி. முக்கியஸ்தர்களுடன் நிற்பதைக் கண்டும் காவல்களால் அவனைக் கைது செய்ய முடியவில்லை.

பி.ஜே.பி. எம்.பி.க்களுக்கும் அவர்கள் உடன் இருந்த அந்த ரவுடிக்கும் சேர்த்து 'சல்யூட்' அடித்தவாறு காவல்துறை நின்று கொண்டிருந்தது.

ரவுடி முன்னால் தலைகுனிந்து நின்றது காவல்துறை! எல்லா வாண்டட் (Wanted) ரவுடிகளும் பி.ஜே.பி.யில் சேர்ந்து அதன் Wanted (வாண்ட்டட்) தலைவர்களா கின்றனர். வருங்காலத்தில் டான் தாவூத் இப்ராஹிம்கூட பி.ஜே.பி.யில் சேர்ந்து தன் மீதுள்ள வழக்குகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் - இதுபோன்று சமூக வலை தளங்களில் பி.ஜே.பி.யின் நடவடிக்கை குறித்து செய்யப் படும் கேலியும், கிண்டல்களும் வைரலாகி வருகிறது!.

மொத்தத்தில் பி.ஜே.பி. என்பது 

பி.ஆர்.பி. யாக அதாவது, "பாரதிய ரவுடிகள் பார்ட்டி" யாக பெயர் மாற்றம் பெறு மளவு அந்தக் கட்சியில் கொலை-கொள்ளை குற்றவாளிகள் பெருகி வருகின்றனர்!

நன்றி: 'முரசொலி' 30.11.2022

வண்டலூர் அருகே பா.ஜ.க. மேனாள் மாநிலத் தலைவர் எல். முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைய வந்து காவல்துறையினர் அங்கு வந்ததும் ஓடி ஒளிந்த- 7 கொலை வழக்கு உள்ளிட்ட 52 வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி ரெட்ஹில்ஸ் சூர்யா.

பிரபல ரவடி கல்வெட்டு ரவி பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கே சென்று அக்கட்சியில் இணைந்து, அதன் தலைவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட காட்சி.

பெங்களூருவில் ரவுடி சுனில் - பா.ஜ.க. எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா மற்றும் பி.சி. மோகன் ஆகிய இருவருடன் இரத்தத் தாள முகாம் விழாவில் காவித்துண்டு அணிந்து பங்கேற்ற காட்சி.

No comments:

Post a Comment