கடலூரில் மழை பாதிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

கடலூரில் மழை பாதிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

 அரசின் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து, சிறப்பான பணியினை செய்து வருகிறார்கள்

எதிர்க்கட்சிகள்தான் விமர்சனம் செய்கின்றன; பொதுமக்கள் பாராட்டுகிறார்கள் - அதுவே எங்களுக்குப் போதும்!

கடலூர், நவ.14 அரசின் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து, சிறப்பான பணியினை செய்து வருகிறார்கள்; எதிர்க்கட்சிகள் தான் விமர்சனம் செய்கின்றன; பொதுமக்கள் பாராட்டுகிறார்கள் - அதுவே எங்களுக்குப் போதும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 

நிவாரண உதவி

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. 

இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். 

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.11.2022) நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த ஒளிப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், எடுத்து வரும் நடவடிக்கைகள், வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். சிதம்பரம், வல்லம் படுகை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளையும் பார்வையிட்டார்.

சென்னையில் நேற்று...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.11.2022) திரு.வி.க.நகர் மற்றும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக மேற்கொள் ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி 6 ஆவது மண்டல அலுவலகத்தில், ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொசு வலைகளை வழங்கினார்.

மேலும், ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் தங்கு தடையின்றி செல்வதை ஸ்ட்ரான்ஸ் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் தேங்காமல் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணியின் காரணமாக தேங்கியுள்ள மழை நீரை 200 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் வெளியேற்றப்படும் பணிகளையும், கொசஸ்தலை வடிநிலப் பகுதி ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தின் கீழ் ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் 16 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளில் பல்லவன் சாலை,  டான்பாஸ்கோ பள்ளி அருகே செல்லும் மழைநீர் வடிகால் பணிகளையும்,  பல்லவன் சாலை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் மழை நீர் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு மழையின் போது அதிக அளவு மழை நீர் தேங்கி பாதிப்புக்கு உள்ளான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 70 அடி சாலையை பார்வை யிட்டு, இந்த ஆண்டு மழை நீர்தேக்கமில்லாத அளவிற்கு பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

பொது மக்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், மருத்துவ முகாம்களை அமைத்து உதவிடுமாறு அலுவலர் களுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு வண்ணான் குட்டை பகுதியில் தேங்கிய மழை நீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், வீனஸ் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வெளியேற்றும் உந்து நிலையத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் 

மு.க.ஸ்டாலின் பேட்டி

மழை பெய்யும்பொழுது மழை நீர் இருந்திருக்கும். அதன் பிறகு மழை  நீர் வடிந்துவிடுகிறது. கன மழையை எதிர்பார்த்துதான் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஆபத்துக்களும் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து, மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, சிறப்பான பணியினை செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் தான் விமர்சனம் செய்கின்றன. பொதுமக்கள் பாராட்டுகிறார்கள்.  அதுவே எங்களுக்கு போதும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.


No comments:

Post a Comment