எந்த மொழியில் கல்வி? உயர்நீதிமன்றத்தில் விவாதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

எந்த மொழியில் கல்வி? உயர்நீதிமன்றத்தில் விவாதம்

சென்னை நவ.9 குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், எந்த பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்று தமிழ்நாடு அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.  நாட் டில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது, கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டிய லுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்யக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலனின் அறம் செய்ய விரும்பு அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வில் 2ஆவது நாளாக நேற்று (8.11.2022) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, ‘‘ என்.சி.இ.ஆர்.டி பாட திட்டத்தின் அடிப்படையில் மாநில பாடத்திட்டத்தை வகுக்க அறி வுறுத்தப்பட்டுள்ளதும் கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது என்று வாதிட்டார். தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், குழந்தையின் கல்வி குறித்து அக்கறை கொள்பவர் பெற்றோர் தான். எந்த மொழியில் குழந்தையை படிக்க வைக்கலாம் என்று பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மாநில அரசு அல்ல.

குழந்தைகள் இந்தி தான் படிக்க வேண்டும் எனக் கூறினால் அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.  உயர் கல்வியின் தரம் குறித்து தீர்மானிக்க மட்டுமே ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், ஒன்றிய அரசின் தலைமைச் செயலகமான டில்லி நார்த் பிளாக்கில் இருந்து கொண்டு, நாட்டில் உள்ள குழந்தைகள் குறிப்பிட்ட மொழியில் தான் படிக்க வேண்டும் என்று முடிவெடுக்க முடியாது.தமிழ்நாடு ஆந்திரா, கேரளா  போன்ற மாநிலங்களில் கல்வி எந்த மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற முடியாது. மருத்துவப் படிப்பு இந்தியில் வழங்கப்படும் என்று நார்த் பிளாக் அறிவித்துள்ளதை அனுமதித் தால் ஒரு நாள் தமிழ்நாடு மாணவரும் இந்தியில் மருத்துவம் படிக்க வேண்டி வரும்.46 ஆண்டுகளுக்கு முந்தைய திருத்தத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கல்வி அனைத்து மாநிலங்களுக்கும் பொருத்தமான கொள்கையல்ல. மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில் குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும் எந்த பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது.கல்வியின் தரத்தை தீர்மானிக்க மட்டுமே ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது. மருத்துவம், பொறியியல் புத்தகங்கள் இந்தியில் வரப்போவது மிகவும் மோசமானது. ஒரே மாதிரி யானது என்று எதுவும் இல்லை. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தன்னாட்சி தகுதி உள்ளது என்பதால் மாநிலத்தின் கல்வி குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே தகுதி உள்ளது என்று வாதிட்டார்.  தமிழ்நாடு அரசு தரப்பிலான மூத்த வழக்குரைஞர் கபில் சிபலின் வாதம் நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை  டிசம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment