பேருந்துகளில் அத்துமீறும் மாணவர்கள் காட்சிப்பதிவு மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

பேருந்துகளில் அத்துமீறும் மாணவர்கள் காட்சிப்பதிவு மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை,நவ.24- சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்னை பெருநகரில் பேருந்துகளின் மேற்கூரையில் ஏறுவதும், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதும், பயணிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் பேருந்துக்கு உள்ளேயே ஆட்டம் போடுவதும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர், சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆனாலும், மாணவர்கள் பேருந்துகளில் எல்லை மீறுவது தொடர்ந்து வருகிறது. மாணவர்களின் அத்துமீறல்களைப் பொதுமக்கள் காட்சிப்பதிவு மற்றும் ஒளிப்படமாக எடுத்து தினமும் காவல் துறைக்கு அனுப்பி வருகின்றனர். இதை காவல்துறையினர் சேகரித்து வைத்து தற்போது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக பொதுமக்கள்அனுப்பிய காட்சிப்பதிவு, ஒளிப்படங்கள் மற்றும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிப் பதிவுகள் மூலம் எல்லை மீறிய மாணவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "பள்ளி - கல்லூரி மாணவர்களில் பலர் கல்வி நிலையங்களுக்கு செல்லும் நேரம் மற்றும் வீடு திரும்பும் நேரங்களில் பேருந்துகளில் எல்லை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மாணவர்கள் பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் தகராறிலும் ஈடுபடுகின்றனர்.

இதில், தொடர்புடைய மாணவர்களை எச்சரித்து விடுவித்துள்ளோம். ஆனாலும் சிலர் கேட்காமல் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றனர். எனவே, இனி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்" என்றனர்.


  அதிமுக ஆட்சியில் காலாவதி தேதி இல்லாத ரூ.700 கோடி மருந்து 

செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை,நவ.24- அதிமுக ஆட்சியில் காலாவதி தேதி குறிப்பிடப்படாத ரூ.700 கோடி மதிப்பில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டதாக தமிழ்நாடு பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் பலகோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகளை வாங்கிகுவித்து வைத்துள்ளது மருத்துவமனைகளில் பொதுக் கணக்கு குழுவினர் செய்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்.22ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தபோது ரூ.26 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகளும்,  இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி மதுரை மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது ரூ.16 கோடியில் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு,அதனால் மருந்துகள் காலாவதியானதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர், பாபநாசம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகுறிப்பிடாத சுமார் ரூ.700 கோடிமதிப்புள்ள மருந்துகள் இருப்புவைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்துகண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையின்அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment