3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

சென்னை, நவ.3 உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை அக்டோபர் 2-ஆம் தேதி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காட்டி காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. 

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ''நவம்பர் 6-ஆம் தேதி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தார்.   இந்த வழக்கு மீண்டும் 31.10.2022 அன்று  விசாரணைக்கு வந்தபோது, ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை இயக்குநர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ''தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் அணிவகுப்பு ஊர்வலம் அல்லது உள்அரங்கில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்'' என்று கூறி அறிக்கையை தாக்கல் செய்தனர்.

 அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 24 இடங்களில் காவல்துறை ஏன் அனுமதி வழங்கவில்லை? என கேள்வி எழுப்பினார். 

அதற்கு மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, ''ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப்பிறகு தமிழ்நாட்டில் வேறு மாதிரியான சூழல் நிலவுகிறது. அதை கருத்தில் கொண்டே 3 இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி போன்றவை மனித சங்கிலி நடத்தவே அனுமதி கோரியது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரவில்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது'' என்று விளக்கம் அளித்தார். காவல்துறை அறிக்கைகளை படித்து பார்த்த நீதிபதி, கோவையைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கலாமே என்றார். 

இதற்கு பதில் அளித்த மூத்த வழக்குரைஞர் ''மக்களின் பாதுகாப்பே பிரதானமானது. தற்போது ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் வீடுகளுக்கே காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றும் உளவுத்துறையினரின் அறிக்கையை புறம் தள்ளிவிட முடியாது'' என்று கூறினார். மனுதாரர்கள் தரப்பில், உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது. அமைதியான முறையில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தவே அனுமதி கேட்டுள்ளோம் என்று கூறினர். இதையடுத்து நீதிபதி, உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து எஞ்சிய 47 இடங்களில் அனுமதி வழங்குவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து  விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment