முரட்டு சுயமரியாதைக்காரர் நெய்வேலி இரா. கனகசபாபதியுடன் ஒரு நேர்காணல்! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

முரட்டு சுயமரியாதைக்காரர் நெய்வேலி இரா. கனகசபாபதியுடன் ஒரு நேர்காணல்! (2)

கேள்வி: அந்தக் காலத்தில் உங்க பணிச் சூழல் எப்படி இருந்தது?

பதில்: "நெய்வேலியில் பார்ப்பனர் கொள்ளை” அப்பிடிங்கிற பேருல ஒரு லிஸ்ட் - பார்ப்பன அதிகாரி, எத்தனை பேரு இருக்காங்க. நம்மாளுங்க எத்தனை பேரு இருக்காங்க அப்பிடின்னு, இராமானுஜம்னு ஒருத்தர் இருந்தாரு. அவரை வச்சு லிஸ்ட் எடுத்து “விடுதலை”க்கு அனுப்பிச்சேன். “விடுதலை”யில் வந்துச்சு! அதுக்கு முன்னாடி அய்யா எழுதி, நெய்வேலியா? பூணூல் வேலியா?ன்னு “விடுதலை”யில் செய்தி வந்துச்சு. நான் அதே போல இதையும் அனுப்பிச்சேன். அய்யா ரொம்ப சந்தோசப்பட்டார்.

பார்ப்பன எதிர்ப்பை அதிகாரிகள் கிட்டயும் காட்டியிருக்கேன். ரகளை பண்ணி விட்டிருவேன். அதனால அடிக்கடி சஸ்பெண்ட் ஆயிருக்கேன். ஆனால், அங்கேயும் பார்ப்பன எதிர்ப்பு அதிகாரிகள் இருந்தாங்க. அவங்க எனக்கு உதவி செஞ்சாங்க. ஒருமுறை கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது, சஸ்பெண்ட்டுக்குப் பிறகு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. முன்னதாக மகுடேஸ்வர மூர்த்தின்னு ஒருவர் என்னுடைய கட்சி வேலையைப் பார்த்துட்டு, "தம்பி, ஃபயர் சர்வீசில் ஒரு வேலை இருக்கு போறியான்”னு கேட்டார். நான் ஊருக்குப் போலாம்ன்னு இருக்கேன்”னு சொன்னேன். “ஏப்பா, நீ போயிட்டா இங்க நம்ம கட்சி இருக்கா துய்யா” இதே வார்த்தையைச் சொல்லி, சேர்த்துவிட்டார். அப்போ சம்பளம் 80 ரூபாய்! பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன் மகுடேஸ்வரர் மூர்த்தி நம்ம கட்சிக்காரர்னு! பக்கத்து டிவிசனில் மேஸ்திரியா அவரு இருந்தாரு. அப்படித்தான் பெயிண்டரா சிவில்ல இருந்த நான் டிஸ்மிஸ் ஆகும் போது, ஃபயர் சர்வீசில் டிசிப்ளிபின் ஃபோர்சில் இருந்தேன். 

அண்ணா இறந்தவுடனே நெய்வேலி யில் இரங்கல் கூட்டம் நடத்திக்கிட்டு இருக்கோம். அன்னைக்கு நெய்வேலியில் உள்ள பார்ப் பன சங்கத்தில், ’ஷத் சங்கம்’னு சொல்வாங்க அதை. அதுல 15 நாளும் இராமாயணம் நிகழ்ச்சி தான் நடக்கும். தி.மு.க. தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆண்ட குருநாதன் அப்பிடின்னு ஒருத்தர் அப்போ மேடையில் பேசிக்கிட்டு இருந்தாரு. அப்ப சிலர் ஓடிவந்து, “அய்யா! அய்யா! வாரியார், "அண்ணா இறந்ததைக் குறிப் பிட்டு, கடவுள் இல்லையின்னு சொன்னாரில்லே அவ னுக்கு இதுதான் கதி” அப்பிடின்னு சொல்லிட்டாரு அப்பிடின்னாங்க. அவ்வளவுதான்! உடனே ஆண்டகுருநாதன் கிட்டே கேட்டோம். அவரு, “எல்லாரும் எட்டு ரோடு சந்திப்புக்கு வாங்க” அப்பிடின்னு சொல்லிட்டாரு. வாரியாரு சிதம்பரம் கனக சபையோட சொந்தக்காரராம். அவரு வீட்டுல தங்கி இருந்தாரு. பொதுக்கூட்டத்தில் இருந்த அத்தனைபேரும் வந்துட்டாங்க. சுமார் 8,000 பேரு இருப்பாங்க. அதிகமா கூட இருக்கலாம். எல்லாரும் சுத்தி நின்னுட்டாங்க. நான் பெரியார் படம் வச்சிருந்தேன். போய் அவரைக் கூப்பிட்டோம். அவரு வரமாட்டேன்னுட் டாரு! வாரியாரு ஜன்னல் ஓரமா நின்னுகிட்டு பதில் சொல்லிட்டு இருந்தாரு. நான் ருத்ராட்சக்கொட்டையைப் புடிச்சு, “வாய்யா, வெளியில் வாய்யா”ன்னு இழுத்தேன். எல்லாரும் பார்க்கிறாங்க. வெளியில் வந்தாரு. நான், “மன்னிப்புக் கேள்” அப்பிடின்னேன். அவரு, “பெரியார் எனக்கு ரொம்ப வேண்டியவராச்சே! சிவாஜியை எனக்கு நல்லாத் தெரியுமே!” அப்பிட் டின்னாரு. நாங்க, பேப்பர்ல வாரியாரு, அண்ணா பற்றி பேசியது தவறு என்பது போல எழுதி, “இதுல கையெழுத்துப் போடு” அப்பிடின்னோம். போட்டாரு. அப்புறம் அதைப் பெரியாருக்கு அனுப்பிச்சேன். கட்சியிலிருந்து நீக்கப் போறாரு அப்பிடின்னு பயந்துகிட்டே இருந்தேன். அடுத்த இரண்டு நாள்ல “விடுதலை“யில் முதல் பக்கத்தில் வந்துச்சு! அப்போ தென்னார்க்காடு மாவட்டச் செயலாளர் நானு, பாண்டிச்சேரி உட்பட. மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி.

அடுத்த இரண்டு நாளுல திருச்சி திருவரங்கத்தில மாநாடு. நான் போயிருந் தேன். வாரியார் திருச்சி பெரியார் மாளிகை யில் அய்யாகிட்ட போயி, நெய்வேலியில் நடந்ததைப் பத்திப் பேசியிருக்காரு. லோக்கல் போலிஸ் என்மேல வழக்கும் போட்டிருந்தாங்க. நானும் பெரியார் மாளிகைக்குப் போனேன். அய்யா சாப் பிட்டுட்டு இருந்தார். மாவட்டத் தலைவர், ஆனைமுத்து, செல்வேந்திரன் எல்லாம் இருந்தாங்க. அய்யா என்கிட்ட, “வாரியார் வந்து ரொம்ப வருத்தப்பட்டாரு. கேஸ் இருக்குன்னு சொன்னாரு. அவரே கோர்ட்டுக்கு வரமாட்டாரு. அவரு நம்ப ஆளு! பார்ப்பான் இல்லை. போகட்டும் விடுங்க.” அப்பிடின்னு வாரியாருக்கு பரிஞ்சு பேசினாரு.

கேள்வி: அய்யா, அம்மா தலைமைக்குப் பிறகு ஆசிரியர் தலைமையில் இயக்கத்தின் செயல்பாடு பற்றி உங்க கருத்து? 

பதில்: இன்னிக்கு “விடுதலை“ சந்தா எத்தனையெத்தனை? நாங்க இருக்கும் போது அய்ந்து “விடுதலை“ சந்தாவுக்கு அப்படி அலைவோம். இன்னிக்கு படிச்சு நிறைய பேரு மேலே வந்துட்டாங்க. அறுபதாயிரம் சந்தான்னா சும்மாவா? நான் சொல்ல நினைச்சதைதான் பொத்தனூர் 

க.சண்முகம் சொல்லியிருக்காரு! என் னன்னா? “ஆசிரியரை நியமிச்சது யாரு? பெரியார்! அப்புறம்? ஆசிரியரு படாத பாடுபட்டாரு! பண்ருட்டி கமிட்டியில, அய்யா மினிட் புக் பார்த்துட்டு, “என்ன ஆசிரியர் கையெழுத்தே காணோம்” அப் பிடின்னாரு. “ஆசிரியர் தேதி கொடுக்க மாட்டேங்குறாரு அய்யா” அப்பிடின்னு சொன்னோம். அய்யா, “அப்படியா, குடுப் பாரு கேளுங்க” அப்பிடின்னாரு. ஆசிரிய ருக்கு தகவல் போச்சு, ஒருநாள் ஆசிரியர் கடலூர் வந்தப்ப திட்டக்குடிக்கு தேதி கேட்டோம். குடுத்தாரு. வாங்கிட்டு வெளியில் வரும்போது, “நில்லுங்க” அப்பிடின்னாரு. வீட்டில! என்னான்னு கேட்டோம். “தேதி கேட்டா குடுக்க மாட்டேங்கிறாருன்னு நினைக்கிறீங்க. எனக்கு இந்தப் பொறுப்பை அய்யா குடுத்திருக்காரு. அய்யாவோட சுற்றுப் பயணம் ஒருபக்கம், என்னுடைய சுற்றுப் பயணமுன்னு போட்டா “விடுதலை"யை யார் பார்க்கிறது?” அப்பிடின்னாரு. (தழுதழுக்கிறார்) அப்படி யொரு பொறுப்பு! ஒரு பைசா சேர்த்திருப் பாரா? எவனெவனோ என்னென்னமோ பேசிட்டு கிடக்கிறாங்க. என்னைப் பொறுத்த வரையில், 71 ஆண்டுகளாக விடுதலையின் வாசகன் நான்! ஆசிரியரோட செயல்பாடு மனசுக்கு ரொம்ப பூரிப்பா இருக்கு!

கேள்வி: 84 வயதில் இன்றைக்கும் நீங்கள் ஒரு கருப்புச் சட்டைக்காரர்! எப்படி யிருக்கிறது உங்கள் உணர்வு? 

பதில்: கருப்புச்சட்டைக்காரன் முடிசூடா மன்னங்க! யாருக்கும் தலை வணங்க மாட்டான்! கருப்புச் சட்டைக்காரன்னா சுயமரியாதைக்காரன்! 

இதைச் சொல்லும்போது அந்த 84 வயது உடம்பில் 20 வயது துடிப்பு ஏற்பட்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இந்தப் பெருமைக்கு ஈடாக எதைச்சொல்வது? இந்த உணர்வை எதைக்கொண்டு தகர்ப்பது? தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாய்ப்பிருக்கும் போதெல்லாம், “திராவிடர் இயக்கம் இரும்புக்கோட்டை! இதைத் தகர்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது” என்று கூறுவது வெறும் வார்த்தைகள் அல்ல, அந்த உணர்வுள்ள இயக்கத் தோழர்களோடு வாழ்ந்து கொண்டி ருப்பதால் அனுபவத்தில் வருகின்ற வார்த் தைகள்! அந்த அடித்தளத்தில் தான் இன்னமும் திராவிடர் இயக்கத்தின் இலக் கென்னும் பல்வேறு மாடமாளிகைகளையும், கூடகோபுரங்களையும் இன்றைக்கிருக்கும் தொண்டர்கள் எழுப்பியாகவேண்டும். அதுதான் சென்ற தலைமுறை பெரியார் தொண்டர்களுக்கு நாம் காட்டும் நன்றிக்கடனாக இருக்க முடியும். இதே உணர்வோடும், உறுதியோடும் நாமும் நெய்வேலி இரா. கனகசபாபதியிடம் விடைபெற்றோம்.

No comments:

Post a Comment