புதுடில்லி. அக்.19 பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர் பாக தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் செயலாளர் டி.புருசோத்தமன் சார்பில் வழக்குரைஞர் சபரீஷ் சுப்பிரமணியன் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டன.
அதையடுத்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு தொடர்புடைய அட்டவணையை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 லட்சம் மாணவர்களுக்கு 4 சுற்று கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நாட்கள் தேவைப்படுகின்றன. அதன்படி உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக் கெடுவுக்குள் கலந்தாய்வு நடத்தமுடியாத நிலை உருவாகியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, பொறியியல் கலந்தாய்வு தேதியை நவம்பர் 25-ஆம் தேதி வரை நீட்டித்துக்கொள்ள அனுமதி வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இதுபோல பிற மாநிலங்களும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
அவற்றை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, மனுவில் தெரி விக்கப்பட்டவற்றை எடுத்துரைத்தார். அதை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், பொறியியல் கலந்தாய்வு தேதியை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment