‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை

 பெரியாரும், வள்ளுவரும் வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்திருக்கலாம்; 

வெவ்வேறு உருவத்தில் வாழ்ந்திருக்கலாம் சிந்தனைகளைப் பொறுத்தவரை ஒத்தே செல்லுகின்றன! 

‘‘அனைவரும் சமம் - போராடுவோம் விடுதலைக்கு'' என்று போர் முழக்கமிட்டவர் தந்தை பெரியார்

சென்னை, அக்.10  பெரியாரும், வள்ளுவரும் வெவ் வேறு காலகட்டத்தில் பிறந்திருக்கலாம்; வெவ்வேறு உருவத்தில் வாழ்ந்திருக்கலாம். அவர்களின் சிந்தனைகளைப் பொறுத்தவரை ஒத்தே செல்லுகின்றன.  ‘‘வள்ளுவர். அனைவரும் சமம் - போராடுவோம் விடுதலைக்கு'' என்று போர் முழக்கமிட்டவர் தந்தை பெரியார். இந்த இருபெரும் தலைவர்களின் கருத்தியலை உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு நூலாக, இந்த நூலை பேராசிரியர் செகதீசன் அவர்கள் படைத்திருக்கின்றார் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய 

‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்‘’ நூல் வெளியீட்டு விழா

கடந்த 3.10.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்‘’ நூல் வெளியீட்டு விழாவில், நூலைப் பெற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பெரும்பான்மையாளர்கள் மட்டும்தான் ஜனநாயகமா?

‘‘டிசம்பர் 25 இல், இனி எவனும் இங்கே கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது; கொண்டாட விடமாட்டோம்.

ரம்ஜான் பண்டிகையை, ஈத் திருநாளை இந்த மண் ணில், இந்தியாவில் கொண்டாடக்கூடாது; கொண்டாட விடமாட்டோம்'' என்று வெளிப்படையாகவே பேசு கிறார்கள். 

ஜனநாயகத்தின் நிலை என்ன?

பன்மைத்துவத்தை  அனுமதிப்பதுதானே  ஜனநாய கத்தின் முக்கியமான பண்பு. பெரும்பான்மையாளர்கள் மட்டும்தான் ஜனநாயகமா?

மெஜாரிட்டி என்கிற அடிப்படையில், பெரும்பான் மையாக இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஜனநாயகமா?

சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது ஜனநாயகத்தில் ஒரு பங்கு இல்லையா? யாரும் எந்த மதத்திலும் சேரலாம்; எந்தக் கடவுளையும் வழிபடலாம்; எந்தக் கருத்தையும் உள்வாங்கிக் கொள்ளலாம். கடவுள் இல்லை என்றும் சொல்லலாம்; கடவுளுக்குப் பதிலாக நாங்கள் அய்யன் திருவள்ளுவனை ஏற்று, அவருடைய கொள்கை வழி அடிப்படையில், குறள்வழி அடிப்படை யில் வாழ விரும்புகிறோம் என்று வள்ளுவத்தை உயர்த்திப் பிடிக்கலாம்.

இந்த சுதந்திரத்தை அனுமதிப்பதுதானே ஜனநாயகம். 

மூடக் கருத்துகளைப் பரப்புவது -சுதந்திரம் என்ற பெயரால், அதனை எப்படி அனுமதிக்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ். பேரணியை ஏன் தடுக்கிறீர்கள்?  என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்!

புரியாமல் சிலர் கேட்கிறார்கள், அவர்களும் ஓர் இயக்கம்தானே, அவர்களுடைய பேரணியை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?  என்று.

அவர்கள் சராசரி ஜனநாயக இயக்கம் இல்லை. அவர்கள் பாசிச இயக்கம். பாசிஸ்டுகள் - பயங்கரவாத இயக்கம். இதுவரையில் இந்தியாவில் நடந்திருக்கின்ற 18 குண்டுவெடிப்புகளில் நேரிடையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்தவர்கள்மீது வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என்று ஒரு நீதியரசரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்; பட்டியலைப் படிக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னின்னார் என்று சொல்கிறார்.

நான் வேறு எந்த இயக்கத்திற்கும் வக்காலத்து வாங்க வில்லை. ‘பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்கிற ஓர் இயக்கத்தைத் தடை செய்திருக்கிறார்கள். கேட்டால், பயங்கரவாத இயக்கத்தோடு தொடர்பு இருக்கிறது; அந்த இயக்கமே ஒரு பயங்கரவாத இயக்கம் என்கிறார்கள்.

18 குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டுமா? வேண்டாமா?

அப்படியென்றால், 18 குண்டுவெடிப்புகளில் தொடர் புடைய இயக்கமான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டுமா? வேண்டாமா? தமிழ்நாட்டில் இந்தக் குரல் ஓங்கி உரத்து முழங்கவேண்டுமா? வேண்டாமா?

நாம் வழக்கம்போல் அமைதி காத்தால், மவுனம் காத்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கருப்புச் சட்டை போட்டு நாம் நடமாட முடியாது தோழர் களே! நீலச் சட்டைப் போட்டு நடமாட முடியாது. சிவப்புச் சட்டைப் போட்டு நடமாட முடியாது. நான் அச்சுறுத்துகிறேன் என்று எண்ணாதீர்கள்.

நான் யூகத்தை, வெறும் யூகமாக சொல்லவில்லை; ஆதாரங்களோடு சொல்லுகிறேன். வரலாற்றுத் தரவுக ளோடு சொல்லுகிறேன்.  நாம் நடமாட முடியாது தமிழ்நாட்டில். 

சீண்டிப் பார்க்கிறார்கள்; 

தூண்டிப் பார்க்கிறார்கள்

அண்மையில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டுகள் வெடித்ததாகச் சொன்னார்களே, ஓரிடத்தில்கூட திரியும், நெருப்பும் கிடையாது. ஓரிடத்தில்கூட அது வெடிக்கவும் கிடையாது.

இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கைவரிசை! தொட்டுப் பார்க்கிறார்கள்; தொடங்கிப் பார்க் கிறார்கள்; சீண்டிப் பார்க்கிறார்கள். தூண்டிப் பார்க் கிறார்கள்.

தமிழ்நாடு அரசை, ‘திராவிட மாடல்' என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற ஒரு சமூகநீதி அரசை வம்புக்கு இழுக்கிறார்கள்; ‘‘வழியிலே கால் நீட்டி வம்புக்கு இழுக்கிற கதை'' என்பார்கள் கிராமத்தில். அப்படி வழியிலே கால் நீட்டி வம்புக்கு இழுக்கிறார்கள். தோழர்களே, மிகவும் ஆபத்தான கட்டத்தில் நாம் நிற்கிறோம்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு என்பது தனித்தன்மையுள்ள மாநிலம்தான்!

அக்டோபர் 11 ஆம் தேதி நமக்கான ஒரு நாள். நாம் தேதி குறித்திருக்கின்றோம். தமிழ்நாடு என்பது சாதாரண மாக நீ நினைப்பது போன்று - உத்தரப்பிரதேசம் போன்று எண்ணிவிடாதே! குஜராத் என்று எண்ணிவிடாதே! மராட்டியம் என்று எண்ணிவிடாதே! தமிழ்நாடு தமிழ் நாடுதான். இந்தியாவிலேயே அது தனித்தன்மையுள்ள மாநிலம்தான்.

இந்தியா என்ற பெருங்கடலில், தமிழ்நாடு ஒரு தீவு. அது கருத்தால் முற்போக்கானது; செயலால் அது தீவிரமானது. இப்படிப்பட்ட பிற்போக்குச் சக்திகளை ஓட ஓட விரட்டியடிக்கின்ற ஆற்றல் வாய்ந்த போர் வீரர்களைக் கொண்ட ஒரு தேசம் - தமிழ்த் தேசம் என்ப தைக் காட்டவேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது தோழர்களே!

ஏதோ மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்; எங்கேயாவது நான்கு இடத்தில், கருப்புச் சட்டைப் போட்டவர்கள் கைகோத்து நிற் பார்கள்; நமக்கு என்ன, நம்முடைய வேலையைப் பார்ப் போம் என்று இருக்கக் கூடாது. தமிழர்கள் அத்துணை பேரும் வீதிக்கு வெளியே வரவேண்டும்; நான்கரை கோடி தமிழர்களும் வீதிக்கு வரவேண்டும். வாக்களிக்கக் கூடிய நான்கரை கோடி தமிழர்கள். மக்கள் தொகையில் ஆறரை கோடிக்கு மேல் இருக்கிறோம். வாக்களிக்கக் கூடிய நான்கரை கோடி தமிழர்களும் வீதிக்கு வர வேண்டும்.

தமிழ்நாடு அரசு எதையும் சந்திக்கக்கூடிய 

ஒரு முதலமைச்சரைப் பெற்றிருக்கிறது

11 ஆம் தேதி நாம் காட்டுகின்ற வலிமையில், அவன் வாலைச் சுருட்டிக்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு ஓடவேண்டும். அவன் வடக்கேயிருந்து ஆட்களை இறக்குகிறான்; இங்கே வந்து வாலாட்டிப் பார்க்கிறான். ஆப்பசைத்த குரங்கு என்பார்கள். தமிழ்நாட்டிலே ஆப்பசைத்துப் பார்க்கிறது குரங்குக் கும்பல். ஆப்பை அசைத்த குரங்கு வாலை மாட்டிக் கொள்ளும் பாருங்கள், அதுபோன்று தமிழ்நாடு அரசு எதையும் சந்திக்கக்கூடிய ஒரு முதலமைச்சரைப் பெற்றிருக்கிறது.

பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற மாமனிதர் களின், மகத்தான தலைவர்களின் கலவையால் உருவான ஒரு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள்.

‘‘கடவுள் பாதி, மிருகம் பாதி'' என்று ஒரு திரைப் படத்தில் வரும் அல்லவா - அதுபோன்று, இங்கே பெரியார் கொஞ்சம், அண்ணா கொஞ்சம், கலைஞர் கொஞ்சம், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கொஞ்சம் என்ற கலவையால் உருவானவர்தான் நம்முடைய முதலமைச்சர் தளபதி அவர்கள்.

உள்ளுக்குள் எப்பொழுதும் குமுறுகிற எரிமலை போன்றவர் நம்முடைய தளபதி அவர்கள்!

அவரிடம், பெரியாரைப் போன்று பேசுகின்ற துணிச் சல் வெளிப்படவில்லையே என்று பலர் எண்ணலாம். நான்கு கலவை இருப்பதினால், உள்ளுக்குள் எப் பொழுதும் குமுறுகிற எரிமலை போன்றவர் நம்முடைய தளபதி அவர்கள். வெளியில் தெரியாது. நேரம் வருகிற பொழுது தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவர்.

விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு, தி.மு.க. மறுபடியும் எழுந்திருக்குமா? என்று எல்லோரும் நினைத்தார்கள். இரண்டாவது இடத்திலிருந்த தி.மு.க. மூன்றாவது இடத்திற்குச் சென்றுவிட்டது.

தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்த தமிழ்நாட்டில் திடீரென்று ஒரு கட்சி முளைத்தது - இரண்டாவது இடத்திற்குச் சென்று விட்டது.

வெறும் 30 இடங்களுக்குக் குறைவாகப் பெற்று தி.மு.க. மூன்றாவது இடத்தில் இருந்தது.

அந்தக் கட்சியை, அடுத்த தேர்தலில் வெறும் 30 இடம் இடைவெளியில் எதிர்க்கட்சியாக்கினார். இன்னும் 30 இடங்கள் இருந்திருந்தால், ஆளுங்கட்சி ஆகியிருக் கும் 2016 ஆம் ஆண்டு.

தற்போது எதிரிகள் அத்துணை பேரும் சுருண்டு விழக்கூடிய வகையிலே, முதுகெலும்பு முறியக் கூடிய வகையிலே ஒரு மாபெரும் வெற்றியை ஈட்டி, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றார். 

வலிமைமிக்க ஆளுமை அண்ணன் தளபதி

அதில் என்ன சிறப்பு என்றால், காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டி, ஒரு மெகா கூட்டணியை அமைத்து, எல்லோரையும் திருப்திகரமாக வழிநடத்திச் செல்லக் கூடிய வலிமைமிக்க ஆளுமையாக அண்ணன் தளபதி அவர்கள் இந்தியாவிலேயே ஒரு சான்றாக விளங்கினார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற மெகா கூட்டணி உருவாகவில்லை; இதுபோன்ற வலிமை மிக்க ஆளுமை இல்லை.

ஆகவே நான் சொல்லுகிறேன், அந்த நம்பிக்கை யோடு சொல்லுகிறேன். எச்.இராஜாவுக்குச் சொல்லு கிறேன்; நம் சப்-ஜூனியர் அண்ணாமலைக்குச் சொல்லுகிறேன்.

அவர் மோஸ்ட் சீனியர் இராஜா - இவர் சப்-ஜூனியர் அண்ணாமலை.

யாரோ சொல்லிக் கொடுப்பதைப் பேசிக் கொண்டி ருக்கிறார்கள். ஆர்.எஸ்.எசைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாங்கள்  ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறோம் என்கிறார். 

ஆர்.எஸ்.எசைப்பற்றி நாங்கள் கிளாஸ் எடுக்கிறோம்; நீ வந்து உட்கார்; நீ என்ன எங்களுக்கு ரயில் டிக்கெட்டை எடுத்துக் கொடுப்பது?

‘‘ஆர்எஸ்.எஸ். ஓர் அபாயம்‘’ 

எங்களுக்கு ஏற்கெனவே அதையெல்லாம் பெரியார் திடல் சொல்லிக் கொடுத்துவிட்டது. ‘‘ஆர்எஸ்.எஸ். ஓர் அபாயம்'' என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்கள் திராவிடர் கழகத்தில்.

அண்ணாமலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருப்பாரா? என்று தெரியவில்லை.

திராவிடர் கழகத்தினுடைய பாசறை தளபதிகள்தான் தி.மு.க.வில் இருக்கிறார்கள்

40 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் திடல் போட்ட புத்தகம் ‘‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்'' என்று.

தமிழ்நாட்டிற்குள் ஆர்.எஸ்.எசைப்பற்றி அதிகம் வகுப்பெடுத்து, அவர்களைப்பற்றி புரிய வைத்திருக்கின்ற இயக்கம் திராவிடர் கழகம்.

திராவிடர் கழகத்தினுடைய பாசறை தளபதிகள்தான் தி.மு.க.வில் இருக்கிறார்கள். அவருக்கு அங்கே பெயர் ஆ.இராசா.

அப்படி பல பெயர்கள்.

இங்கே உங்கள் பெயர் எச்.இராஜா.

கருத்தியல் ரீதியாக விவாதிப்போம் வாருங்கள்; எங்கே வேண்டுமானாலும் பொதுக்கூட்டங்கள் போடு வோம்; பொது இடத்தில் விவாதிப்போம். ஆர்.எஸ்.எஸ். வேண்டாம்; பி.ஜே.பி.யை கூட நீங்கள் பேரணி நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டோம். அது ஓர் அரசியல் கட்சி. அவர்களுக்கு ஓர் அரசியல் முகம் இருக்கிறது. அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போன்று இல்லை.

பா.ஜ.க.வினர் என்ன சொல்லுகிறார்கள் என்றால், முஸ்லிம்கள் எங்கள்கூட இருக்கிறார்கள்; தாழ்த்தப்பட்ட வர்களும் எங்கள் கூட இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் அமைச்சராக்கி இருக்கிறோம். பெண்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். நாங்கள் பங்காரு லட்சுமணனை அகில இந்திய தலைவராக்கினோம்; எல்.முருகனை தமிழ்நாடு தலைவராக்கினோம்; அதற்கு முன்பு கிருபாநிதியை தலைவராக்கினோம் என்று காட்டவேண்டிய தேவை - அரசியல் முகம் பி.ஜே.பி.க்கு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக 

ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமிக்க முடியுமா?

மோகன் பகவத் இருக்கின்ற இடத்தில், ஒரே ஒரு நாள் ஒரு தாழ்த்தப்பட்டவரை உட்கார வைக்க அவர் களால் முடியுமா?

இந்தியாவின் தலைவராக பங்காரு லட்சுமணனைத்  தேர்ந்தெடுத்த உன்னால், தமிழ்நாட்டின் தலைவராக கிருபாநிதி என்ற ஒரு தாழ்த்தப்பட்டவரையும், எல்.முருகன் என்ற ஒரு தாழ்த்தப்பட்டவரையும் நியமிக்க முடிந்த உன்னால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலை வராக ராம்நாத் கோவிந்தை நியமித்துப் பாருங்கள். அவரை குடியரசுத் தலைவராக அமர்த்தினீர்கள். இப் பொழுது திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவராக அமர்த்தியிருக்கிறீர்கள். அவர்கள் எல்லாம் உங்கள் உற் பத்திதான்; உங்களுடைய பாசறையில் வளர்ந்தவர் கள்தான்.

ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலை வராக இருக்கட்டும்; எங்களில் ஒருவர் வேண்டாம்; பெரியார் திடலில் இருந்து யாரையும் நீ தலைவராக எடுக்கவேண்டாம்.

ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ். முகம் வேறு; பி.ஜே.பி. முகம் வேறு.

பி.ஜே.பி. பேரணியை நடத்துவதில் அரசியல் கோரிக்கைகள் இருக்கும்.

ஆர்.எஸ்.எஸின் மூன்று கோரிக்கைகள்!

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் மூன்று கோரிக் கைகள் இருக்கும்.

ஒன்று, இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்.

இந்தக் கொண்டாட்டத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடியிருந்தால் சரி; அல்லது ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் கொண்டாடியிருந்தால் சரி.

இரண்டாவது, அம்பேத்கர் நூற்றாண்டு விழா - அது முடிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது என்ன நூற்றாண்டு கொண்டாட்டம்?

1991 ஆம் ஆண்டுதான் அவருக்கு நூற்றாண்டு விழா -  இப்பொழுது அவருக்கு நூற்றாண்டு விழா என்று சொல்லி, அம்பேத்கர் முகமூடியைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

மூன்றாவது, விஜயதசமியாம். அக்டோபர் 5 ஆம் தேதிதானே விஜயதசமி. பிறகு ஏன் அக்டோபர் 2 ஆம் தேதியை உங்கள் பேரணிக்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? 

காந்தியாரின் பிறந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், ஒரு நச்சு அரசியல்தானே. காந்தியாரை எவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

அரசியல் கருத்தியல் முரண் என்பது வேறு!

காந்தி குறித்து எங்களுக்கு நிறைய கருத்து முரண் இருக்கிறது. பெரியார் திடலுக்கும், காந்திக்கும்கூட முரண் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளுக்கும், காந்திக்கும்கூட முரண் இருக்கிறது. அது வேறு - அரசியல் கருத்தியல் முரண் என்பது வேறு. ஆனால், காந்தியார் அவர்கள் மதிப்பிற்குரியவர், போற்றுதலுக் குரியவர். அதில் எங்களுக்கொன்றும் சங்கடம் இல்லை.

காந்தியாரின் தியாகத்தை மதிக்கக்கூடியவராக தந்தை பெரியார் இருந்தார்!

காந்தியாரோடு, தந்தை பெரியார் முரண் பட்டார். காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டவுடன், பெரியார் சொன்னார், இந்தத் தேசத்திற்குக் ‘காந்தி தேசம்' என்று கூட பெயர் வைக்கலாம் என்று சொல்லக்கூடிய அள விற்கு, காந்தியாரின் தியாகத்தை மதிக்கக்கூடியவராக பெரியார் இருந்தார்.

ஆசிரியர் அவர்கள் இன்றைக்கு ‘விடுதலை'யில் அறிக்கை எழுதியிருக்கிறார். அதில், பெரியாரை எல்லோரும் பார்ப்பனத் துவேஷி என்றும், பார்ப்பன வெறுப்பாளர் என்றும் சொல்கிறார்கள். காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நேரத்தில், மராட்டிய மாநிலத்தில், அக் கிரகாரத்திற்குள் புகுந்து வன்முறை நடந்தது. ஆனால், தமிழ்நாட்டில் அப்படியொரு வன்முறை நடக்கக்கூடாது என்பதற்காகவே, ஓமாந்தூர் இராமசாமி அவர்கள், பெரியார் அவர்கள் எங்கிருந்தாலும், அவரிடம் கேட்டு ஓர் அறிக்கை வெளியிடுங்கள்; அமைதிக் காக்கச் சொல்லி - என்று கேட்டிருக்கிறார்.

அதுதான் பெரியாரின் பார்வை!

திருச்சியில் இருந்த பெரியாரைச் சந்தித்து, அவரிடம் அறிக்கை கேட்டு வெளியிட்டு இருக்கிறார்கள்.

‘‘பார்ப்பனர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கக் கூடாது. காந்தியாரைச் சுட்டுக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றம்தான். ஆனால், அதற்காக நாம் பார்ப் பனர்களின்மீது கோபத்தைக் காட்டக் கூடாது.

கோட்சே என்பவர் ஒரு துப்பாக்கியால் சுட்டான்; துப்பாக்கி ஒரு கருவி என்று நாம் கருதுகிறோம்'' என்றார் பெரியார்.

இங்கேதான் பெரியாருடைய பார்வையை நாம் பார்க்கவேண்டும். அதுதான் பெரியார் பார்வை என்பது.

நமக்கு, கோட்சே மனிதனாகத் தெரிகிறான். கோட்சே கையில் இருக்கும் துப்பாக்கி கருவியாகத் தெரிகிறது. 

ஆனால், பெரியார் பார்வையில், கோட்சே கையில் இருந்த துப்பாக்கி ஒரு கருவி என்பதைப் போல, கோட்சேவும் ஒரு கருவிதான், அவனை வேறு எவனோ இயக்கி இருக்கிறான் என்றார்.

இதுதான் பெரியார். இந்தப் பார்வைதான் பெரியார் பார்வை என்பது.

கோட்சேவைத் தூண்டியது யார்? 

சுடச் சொன்னது யார்?

அப்படியென்றால், கோட்சே மீதுகூட நீ ஆத்திரப் படவேண்டாம்; ஏனென்றால், கோட்சே அதை முடிவு செய்திருப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படியென்றால், கோட்சேவைத் தூண்டியது யார்? சுடச் சொன்னது யார்? அந்தச் செயல்திட்டத்தை வகுத்துத் தந்தது யார்? அதை நடைமுறைப்படுத்தும்படி கண்காணித்தது யார்?

அதுதான் ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாட்டிற்குள்ளே ‘ஜெய்சிறீராம்‘ கோஷமிட்டுக் கொண்டு வரத் துடிக்கிறார்கள்

காந்தியாரைக் கொன்றவர்கள்; காமராசரைக் கொல்ல முயன்றவர்கள்; பாபர் மசூதியை இடித்தவர்கள்; குஜ ராத்தில் ஒரே நாளில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்றவர்கள்; மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டவர்கள்; கிரஹாம் ஸ்டெயின் ஸ்டூவர்ட்டை உயிருடன் குழந்தைகளோடு எரித்தவர்கள்; கவுரி லங்கேஷ் உள்ளிட்ட அறிவுசார்ந்த தளத்தில் பணியாற்றக்கூடிய போராளிகளைத் தேடித் தேடிப் போய்க் கொன்றவர்கள் - தமிழ்நாட்டிற்குள்ளே ‘ஜெய்சிறீராம்' கோஷமிட்டுக் கொண்டு வரத் துடிக்கிறார்கள். இதெல்லாம் ‘சூத்திர' இந்து அண்ணாமலைக்குத் தெரிய வில்லை. ‘பிராமண' இந்து ராஜாவுக்கு இவையெல்லாம் தெரியும்!

பிராமண இந்துவான ராஜாவுக்கு 

ஏன் கோபம் வருகிறது?

அவர்களே சொல்கிறார்கள், ‘பிராமண' இந்து, சத் திரிய இந்து, வைசிய இந்து, சூத்திர இந்து என்று.

நான் கேட்டேன், சூத்திர இந்துவிற்குத்தான் ஆ.இராசா அவர்கள் விளக்கம் சொன்னார்; பிராமண இந்துவான ராஜாவுக்கு ஏன் கோபம் வருகிறது? நீ சூத்திர இந்துவா? என்று கேட்டேன்.

உன்னுடைய பார்வையில், வருணாசிரமம் சொல்றபடி பார்த்தால், உனக்கும், அதற்கும் சம்பந்தமே கிடையாது. உன்னை சொல்லவே இல்லை. சூத்திர இந்துவிற்குத்தான் அந்த விளக்கம்.

இவர்கள் எல்லாம் போட்டிப் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டை வன்முறைக் களமாக்குவதற்குப் பார்க் கிறார்கள்; சனாதன மண்ணாக்கப் பார்க்கிறார்கள்.

இந்த மண்ணில் வள்ளுவம் இருந்தால், பெரியாரியம் இருக்கிறது என்று பொருள்; பெரியாரியம் இருந்தால், வள்ளுவம் இருக்கிறது என்று பொருள்.

பெரியார், வள்ளுவன் சொன்னதைத்தான் 

நமக்கு எடுத்துரைத்திருக்கின்றார்

அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பெரியாரும், வள்ளுவரும் வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்திருக் கலாம்; வெவ்வேறு உருவத்தில் வாழ்ந்திருக்கலாம். பெரியார், வள்ளுவன் சொன்னதைத்தான் நமக்கு எடுத்துரைத்திருக்கின்றார்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று சொன்னார் வள்ளுவர்.

அனைவரும் சமம் - போராடுவோம் விடுதலைக்கு என்று போர் முழக்கமிட்டவர் தந்தை பெரியார்.

இந்த இருபெரும் தலைவர்களின் கருத்தியலை உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு நூலாக, இந்த நூலை பேராசிரியர் செகதீசன் அவர்கள் படைத்திருக்கின்றார் என்பதை எண்ணி, பெருமையோடு அவரை வாழ்த்தி, வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment