தஞ்சை, அக்.27 தஞ்சை மாவட்டத்தில் இதுவரை, 250 குடும்பங்களுக்கு இருளர்-ஆதியன்குடி இன ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர், பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீடு, வீடாக சென்று வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் ஆதியன்குடி என்ற பழங்குடி இன மக்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி இன ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு பழங்குடி இன மக்களுக்கான ஜாதி சான்றிதழ்களை வழங்கி வருகிறது. அதனைத்தொடர்ந்து மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசித்து வரும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கி உள்ளோம். தஞ்சை மாவட்டத்தில் இதுவரை, 250 குடும்பங்களுக்கு இருளர் மற்றும் ஆதியன்குடி ஜாதி சான்றிழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார மேம்பாட்டிற்காக இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் தமிழ்நாடு அரசு மூலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரிய நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங் கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment