அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம்

சென்னை,செப்.12- சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் இணைந்து, அடையாறு ஆறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் களில் கலக்கும் கழிவு நீரை தடுக்க, 2,773 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

இதில், 273 கோடி ரூபாயில் நடை பெறும் பணிகளை, தலைமை செயலர் இறையன்பு நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தர விட்டார்.சென்னை மாநகராட்சி, 15 மண்டலம், 200 வார்டுகள் கொண்ட, 426 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. நிர்வாக வசதிக்காக, 15 மண்டலங்கள், 23 ஆக மாற்றப்பட உள்ளது.சென்னையின் முக்கிய நீர்வழித்தடமாக அடையாறு ஆறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்கள் உள்ளன.

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லையில், அடையாறு ஆறு, 20 கி.மீ., கூவம் 32 கி.மீ., பகிங்ஹாம் கால்வாய், 30 கி.மீ., தூரம் பயணிக்கிறது.மழைக்காலத்தில், வெள்ளத்தை வடிய வைக்கவும், இதர காலங்களில் கழிவு நீரை கடலில் சேர்க்கும் வழித்தடமாகவும் உள்ளது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், கழிவு நீர் கலப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கூவத்தில் 37 இடங்கள், அடையாறு ஆற்றில் 39 இடங்கள் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் 22 இடங்களில், கழிவு நீர் கலப்பது கண்டறியப்பட்டது.இதை யடுத்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறை களுடன் இணைந்து, கூவம் மற்றும் அடையாறு ஆற்றில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள, 402 கோடி ரூபாய் ஒதுக்கியது.இதன்படி, அடையாறு ஆற்றில், 125 கோடி ரூபாய்; கூவத்தில், 193 கோடி ரூபாய் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில், 84 கோடி ரூபாயில் பணிகள் நடைபெறுகின்றன.

இதில், கழிவு நீர் வருவதை இடைமறித்து, மாற்று வழியில் குழாய் வழியாக, கழிவு நீர் உந்து நிலையம் கொண்டு செல்லுதல், கழிவு நீரை இடைமறிக்க முடியாத இடங்களில், சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக் கப்படுகின்றன.நெற்குன்றம் பகுதியில், 5,800 கழிவு நீர் இணைப்பு வழங்கி, கூவத்தில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட உள்ளது. அடையாறு பகுதியில், 130 குடிசை வீடுகளுக்கு இணைப்பு வழங்கி, அடையாறு ஆற்றில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட உள்ளது.

மேலும், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் இணை கால்வாய்கள், கூவம், அடையாறு ஆற்றின் இணை வடிகால்கள், எண்ணூர் கழிமுகப் பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகள், 2,371 கோடி ரூபாயில் மேற் கொள்ளப்பட உள்ளன.இதன் வாயிலாக அடையாறு ஆறு, கூவம், பகிங்ஹாம் கால்வாயில் விழும் கழிவு நீரை தடுத்து, தெளிந்த நீரோடையாக மாற்ற முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.குடிநீர் வாரிய அதிகாரிகள் 

கட்டமைப்பு பணிகள் ஆய்வு

அடையாறு ஆறு மற்றும் கூவம் பகுதியில், 402 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 123.10 கோடி ரூபாயில், அடையாறு ஆற்றில் கலக்கும் கழிவு நீரை இடைமறித்து மாற்று வழிகளில் திருப்பி, அருகில் உள்ள கழிவு நீர் வெளியேற்று நிலையம் கொண்டு செல்லும் கட்டமைப்பு அமைக்கப்படுகிறது.

இதற்காக, இயந்திர நுழைவு வாயில் அமைத்தல், குழாய் பதித்தல், விசைக் குழாய் அமைத்தல், கழிவு நீரிறைக்கும் நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோன்ற கட்டமைப்பு அடை யாறு, கோட்டூர்புரம் பகுதியில், ஆற்றின் வலது கரை பகுதியில், 16.16 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.

இதேபோல், கோட்டூர்புரம் அருகே, 4.32 கோடி ரூபாயில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, 'மாடுலர்' சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்படுகிறது. மாம்பலம் நீரோடையில் கலக்கும் கழிவு நீரை தடுக்க, சைதாப்பேட்டை, தாடண்டன் நகரில், 14.21 கோடி ரூபாயில், 4 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது.நெசப்பாக்கத்தில்,

47.24 கோடி ரூபாயில், 10 எம்.எல்.டி., திறன் கொண்ட, மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு உள்ளது.இங்கு சுத்தி கரிக்கும் நீரை, போரூர் ஏரியில் விடும் வகையில், 12 கி.மீ., நீளத்தில் குழாய் பதித்து சோதனை ஓட்டம் நடை பெறுகிறது. இந்த மொத்த பணிகளையும் நேற்று (11.9.2022) தலைமை செயலர் இறையன்பு ஆய்வு செய்தார்.  


No comments:

Post a Comment