தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும்

 பக்ருதின் அலி அஹ்மத்

தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனை யற்ற மனிதர்களின் கையில் சிக்கிக் கொண் டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார். அப்படியானால், தமிழ் என்பதும் திராவிடம் என்பதும் ஒரே பொருளில் அவரால் சொல் லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த அதிகம் படித்தவர்கள் சொல்வார்களே யானால்.....

தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப் பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண் டாடக்கூடிய, இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறிஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள்தான்.

பெரியாரைப் படிக்காதவர்கள், ஏன், பெரியாரைக் கூட படிக்க வேண்டாம்; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் திராவிட மொழியியல் ஞாயிறு தேவநேயப் பாவாணருடைய ‘திராவிடத் தாய்’ என்னும்  நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்’ என்னும் நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள் என்றே கூறத் தோன்றுகின்றது.

அதேபோல, திராவிட மொழியியல் ஞாயிறு தேவநேயப்பாவாணர் தமிழ்த் தொண்டாற்றிய 27 பேரின் பட்டியலைச் சொல்லும்போது தொல்காப்பியர், திருவள் ளுவரில் தொடங்கி 11 ஆம் இடத்தில் தந்தை பெரியாரைக் குறிப்பிடுகிறார், தமிழ்த் தொண்டாற்றியவர்கள் யார் என்பதில் 27 பேரை வரிசைப்படுத்துவதில் 11ஆம் இடத்தை பெரியாருக்குத் தருகிறார் பாவா ணர் என்றால், இன்றைக்குத் தமிழ்த் தேசி யம் பேசுபவர்களைவிட, பாவாணர் என்ப வர் தந்தை பெரியாரை அறியாதவரா?

அதேபோல், தமிழ்நாட்டில் தமிழ் பாது காப்புக் கழகத்தை உருவாக்கி, தமிழ்நாட் டில் திருக்குறளை வீதிதோறும், ஊர்தோறும் திருவள்ளுவர் மன்றங்களை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் தமிழ் அறிஞர் இலக்கு வனார் அவர்கள். 

மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப் போல வள்ளுவருக்குக் கிடைத்தவர் தான் தந்தை பெரியார் என்று சொன்னவர் இலக் குவனார். இலக்குவனாரைவிட, இன்றைக் குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?

“இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிட மும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. ‘திரா விடம்’ என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே!”   இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார் அல்ல, ஒப்பியன் மொழி நூலில், 15 ஆம் பக்கத்தில் பாவாணர்தான் எழுதி யிருக்கிறார்.

தமிழ் என்பது தான் - தமிழம் என்றும் - த்ரமிள என்றும் - திரமிட என்றும் - திரவிட என்றும் - த்ராவிட என்றும் - இறுதியில் திராவிடம் என்று உச்சரிக்கப்பட்டது என்று எழுதியவர் பாவாணர் அவர்கள்.

பெரியார் அவருடைய தொடக்க காலத்தில் எழுதிய அனைத்துக் கட்டுரை களிலும் ‘திராவிட’ என்று எழுதினால் ஓர் அடைப்புக் குறியில் தமிழ் என்று எழுது வார். ஒரு கட்டுரையில் தமிழ் என்று எழு தினால் அதற்கு அடுத்து அடைப்புக் குறி யில் திராவிட என்று எழுதுவார்.

எனவே, பெரியார் இனச் சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திரா விடம்’ என்கின்ற வார்த்தையைப் பயன் படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும்.

‘திராவிட இனம்’ என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை, திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற் காகவும் சொல்லவில்லை. திராவிடம் என் பதை நான் ஓர் அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்.

அவர் ‘திராவிடம்’ என்கின்ற வார்த்தை யைத் தேர்ந்தெடுக்கின்ற காலகட்டத்தில் அவர் சொன்னது, “ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால் திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகி றேன். 

திராவிடர் கழகம் என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத்திருப்பேன்” என்றார். இதுதான் தந்தை பெரியார்.

1956 ஆம் ஆண்டுகளில் மொழிவாரி மாகாணங்கள் பிரிந்த பிறகு, தமிழ்நாடு சென்னை மாகாணமாக உருவாகிய பிறகு, கன்னடமும், தெலுங்கும் மலையாளமும், பிரிந்த பிறகு, இப்பொழுதாவது நீங்கள் தமிழர் கழகம் என்று சொல்லக் கூடாதா? என்று கேட்டபொழுது, 1955 ஆம் ஆண்டு இறுதிக் காலகட்டத்தில் நவம்பர் அல்லது டிசம்பரில் அவர் எழுதிய தலையங்கத்தில், “ஆரியனுக்கு, திராவிடன் என்று சொன்ன வுடன் எவ்வளவு கோபம் வருகிறதோ, அவ் வளவு கோபம் தமிழன் என்ற வார்த்தை யைச் சொல்லும்பொழுது எப்பொழுது வருமோ, அப்போது நான் தமிழர் கழகம் என்று வேண்டுமானால் பெயர் சூட்டத் தயாராக இருக்கிறேன்” என்கிறார்.

அப்படியானால், தன்னுடைய அரசியல் தத்துவத்திற்கு எந்த வார்த்தை சரியான வார்த்தையாக இருக்கும் என்று அவர் நினைத்தாரோ, அந்த வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்து ‘திராவிடர் கழகம்’ என்று பயன்படுத்தினார்.

தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள்

இந்த நோக்கத்தை - பெரியாருடைய நோக்கத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர் - தனித்தமிழ்த் தந்தை என்று போற்றப்படுகின்ற மறைமலையடிகள் அவர்கள். 1940  களில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் அல்லது 1948 இல் தந்தை பெரியார் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு மறைமலையடிகள் பேசும்போது சொன்னார்,

“நான் 25, 30 ஆண்டுகளாக எழுதினேன், ஆரியத்திற்கு எதிராக என்னை அழிப்ப தற்கு ஆரியம் பல்வேறு வழிகளில் முயற்சித் தது; பல்வேறு தமிழறிஞர்களும் அந்தக் காரியத்தைச் செய்தார்கள். ஆனால், பெரியாருடைய இயக்கம் என்று வந்ததோ, அதற்குப் பிறகுதான் என்னுடைய நூல்கள் அதிகமாய் விற்பனையாக ஆரம்பித்தன. நூல்களை, என்னுடைய சிந்தனையை மிக அதிகமாகப் பரப்பியவர்கள் பெரியார் இயக்கத்தவர்களே” இதுதான் பெரியாருக் கும், தமிழ்த் தேசியத்திற்கும் உள்ள உறவின் வீச்சு!

தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?

1955 இல் பெரியார் எழுதுகிறார்:

தமிழ் தமிழ்நாடு என்று பெயர் கூட இந்த நாட்டிற்கு இருக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டு விடுமானால் என்னுடைய வாழ்வு எதற்காக இருக்க வேண்டும் என்று எழுதிய தந்தை பெரியாரை விட தமிழ் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?

“தமிழன் தன்னை ‘இந்தியன்’ என்று கருதியதால் தமிழ்நாட்டையும் தமிழர் வீரத்தையும் கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்-தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும் ஞானத் தையும் பகுத்தறிவையும் உரிமையையும் இழந்தான்-என்று 1939 ஆம் ஆண்டு பேசியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் -இதைவிட தமிழ் தேசியத்திற்காக கூறு வேறு என்ன வேண்டும்? 

தந்தை பெரியாரின் மூன்று முக்கியக் கொள்கைகள்:

திராவிடர் கழகம் எனது தலைமைக்கு வந்த பிறகு மூன்று முக்கியக் கொள்கை களைச் சொல்லி வருகிறேன்.  

* இழிவு நீங்க வேண்டும்

* எனது தமிழ்நாடு தனியாக ஆக வேண்டும்

* வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்

நமக்கு ஆக வேண்டியதெல்லாம் இந்த மூன்று கொள்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதே” என்று 1951இல்  சொன்ன தந்தை பெரியாரே தமிழ் தேசியத் தினுடைய மூலவர்.

“இந்தி மொழியால் தமிழ் கெட்டுவிடும் என்று நான் வருத்தப்படவில்லை இந்தி மொழியால் மட்டுமல்ல வேறு எந்த மொழியாலும் நம் மொழி கெட்டுவிடாது. ஆனால், நான் இந்தி மொழியை எதிர்க்கக் காரணம், இந்தியாவில் நம்முடைய கலாச் சாரம் அடியோடு அழிந்துவிடும்; இப் போதே வடமொழி நாட்டில் புகுந்து நம் முடைய கலாச்சாரம் எவ்வளவோ கெட்டு விட்டது; அதற்காக நாம் இந்தியை எதிர்த் துப் போராட வேண்டியது இருக்கிறது என்று 1948 இல் ஹிந்தி திணிப்பை தமிழர்களின் மீது நடந்த பண்பாட்டுப் படை எடுப்பாக உருவகப்படுத்தியதைவிட சிறந்ததொரு தமிழ்த் தேசிய சிந்தனை என்பது இருந்திருக்க முடியுமா?

‘உண்மையைச் சொல்லவேண்டுமா னால். ஆரியம் “சமயத்” துறையில் ஆதிக் கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதா லேயுமே, தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை.  குறைந்துவிட்டது” என்று, தான் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு 1972 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

இப்படி தமிழ் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும் தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

போலித் தமிழ்த் தேசியவாதிகளுடைய பரப்புரையால் நமக்கே ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது-  ஒருவேளை பெரியார் தமிழுக்கு எதிராக இருந்தாரோ? தமிழினத் திற்கு எதிராக இருந்தாரோ? என்று.  சில இளைஞர்களுக்கு அதுபோன்ற மயக்கங் கள் ஏற்படுகின்ற சூழ்நிலையில், பெரியாரு டைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து நாடெங்கும் பிரச்சாரம் செய்ய வேண்டிய காலகட்டமாக இந்தக் கால கட்டம் அமைந்திருக்கின்றது.  

நூல்: தமிழ்த் தேசியம், அடிப்படைகளும், பரிமாணங்களும் பக்கம்: 90 - 95


No comments:

Post a Comment