கனடா மனிதநேய சமூகநீதி பன்னாட்டு மாநாட்டில் காணொலிமூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தாழப் பேருரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

கனடா மனிதநேய சமூகநீதி பன்னாட்டு மாநாட்டில் காணொலிமூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தாழப் பேருரை

 * தந்தை பெரியார் உலகமயமாகிவருகிறார்  * அவர் படைப்புகள் 21 மொழிகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் 

உலகெங்கும் உலாவர இருக்கிறது  * இனிவரும் உலகைப்பற்றி 1943 ஆம் ஆண்டிலேயே தொலைநோக்கோடு கணித்தவர் 

தந்தை பெரியார்  * அவர் யாத்த தத்துவத்தின் அடிப்படைதான் தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்' ஆட்சி!

சமூகநீதி - மானுடப் பற்று - சுயமரியாதை - பகுத்தறிவு - சமத்துவம் 

ஆகிய அய்ந்தும் தந்தை பெரியாரின் உலகளாவிய கருத்துகள்!

இவை நாடு - மொழி - இனம் எல்லைகளைக் கடந்தவை!

உலகெங்கும் தந்தை பெரியார் தத்துவத்தைக் கொண்டு சேர்ப்போம்!

மாநாட்டை நேர்த்தியாக நடத்திய அனைவருக்கும் பாராட்டுகள்!!

டொராண்டோ, செப்.25 தந்தை பெரியார் கருத்துகள் ஒரு நாட்டுக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு இனத்துக்கோ, குறிப்பிட்ட எல்லைக்கோ மட்டும் சொந்தமானவை யல்ல - உலக மானுடத்திற்கே சொந்தமானவை. பெரியார் உலக மயமாகி வருகிறார்; பெரியார் கருத்தை உலகெங்கும் கொண்டு செல்வதில் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் முனைப்போடு செயல்பட்டு வருகிறார். தந்தை பெரியாரை உலக மயமாக்குவோம் - உலகம் பெரியார் மயமாகட்டும்! அதற்காக செயல்படுவோம் என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் - கனடாவின் டொராண்டோவில் நேற்று (24.9.2022) தொடங்கி, இன்றும் நடைபெறும் பன்னாட்டு மனிதநேய சமூக நீதி மாநாட்டில் காணொலிமூலம் எழுச்சி உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா - அமெரிக்கா மற்றும் கனடா மனிதநேய அமைப்புகள் ஆகியவை இணைந்து நடத்தும், மூன்றாவது பன் னாட்டு மனிதநேயச் சமூகநீதி மாநாட்டில் தொடக்க உரை ஆற்றியுள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களே!

கனடா மனிதநேய அமைப்பின் தலைவர் மார்ட்டின் ப்ரீத் அவர்களே!

பெரியார் பன்னாட்டு அமைப்பை வழிநடத்தும் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களே!

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி அவர்களே!

அறிமுக உரை ஆற்றிய முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களே!

பல்வேறு தலைப்புகளில் உரையாற்றும் உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்களே!

நேரடியாகவும், காணொலி மூலமாகவும் இதில் பங்கேற்றுள்ள  சீர்திருத்த எண்ணம் கொண்டோரே! உங்கள் அனைவர்க்கும் வணக்கம்!

‘பெரியார் உலகமயம் - உலகம் பெரியார்மயம்’  - என்ற உன்னதக் குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள், கடந்த 17 ஆம் நாள்தான் ‘பெரியார் உலகம்’ என்ற மாபெரும் முன்னெடுப்பைச் செய்தார்.  அதற்கான அடிக்கல் நாட்டும் மகத்தான வாய்ப்பை எனக்கு வழங்கினார்.

ஒரு வாரத்துக்குள் கனடாவில் இவ்வளவு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார். 

பன்னாட்டு பெரியார் அமைப்பின் முதல் மாநாடு 2017 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்தது. இரண் டாவது மாநாடு வாசிங்டனில் நடந்தது.

இந்த மாநாட்டில்தான் ஆசிரியர் அவர்களுக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது'' அமெரிக்க மனிதநேய சங்கத்தின் சார்பில் வழங்கப் பட்டது.

மூன்றாவது மாநாடு கனடாவில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பெரியார் பன்னாட்டு அமைப்பை உருவாக்கி பெரியாரை உலகமயமாக்கி வரும் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

தொழில் முயற்சியாக அமெரிக்கா சென்ற அவர், இன்று பெரியாரை உலகம் முழுக்கக் கொண்டு செல்லும் கடமையைச் செய்து வருகிறார்.

உலகம் முழுவதும் 

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியாரின் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய வளைகுடா நாடுகள், அய்ரோப்பிய நாடுகள் என உலகின் பல நாடுகள் கொண்டாடி இருக்கின்றன.

இதுபோன்ற மாநாடுகள் தொடர்ச்சியாக நடந்தால் உலகம் முழுவதும்  பெரியார் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்'  என்று அறிவித்த ஒரே நாடு, கனடா!

அத்தகைய நாட்டில், இந்த மாநாடு நடப்பது மிகமிக பொருத்தமானது!

தமிழர்கள் அதிகளவில் வாழும் அயல்நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது. 

தைப்பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லி மகிழ் வித்தவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள்.

பல்வேறு இன, மத மக்கள் வாழ சிறப்பான நாடாக கனடா உருவாகி வருவதாக அவர் சொல்லி இருந்தார்.

தமிழ் மரபுத் திங்கள் - மசோதா கனடா நாடாளு மன்றத்தில் 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

தமிழுக்கும், தமிழர்க்கும் 

பெருமை சேர்க்கும் கனடா!

தமிழுக்கும், தமிழர்க்கும் இத்தகைய பெருமை யைச் சேர்த்த கனடா நாட்டின் பிரதமர் அவர் களையும், இதற்குக் காரணமான கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் - கனடா தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

கனடாவில் உள்ள டொராண்டோவில் நடை பெறும் இந்த மாநாட்டில் காணொலி மூலமாகக் கலந்துகொண்டு உரையாற்றுவதில்  ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் - இன்னொரு பக்கம் எனக்கு வருத்தமும் இருக்கிறது.

கனடாவுக்கு வந்து உங்களை எல்லாம் நேரில் சந்திக்க முடியவில்லை என்பதும் - நேரடியாக பேசமுடியவில்லை என்பதும் - பல்வேறு அறிஞர் பெருமக்களின் உரைகளைக் கேட்க முடியவில்லை என்பதும்தான் என்னுடைய வருத்தத்துக்கு காரணம்.

பல்வேறு அரசுப் பணிகளின் காரணமாக -மக்கள் பணியின் காரணமாக என்னால் வெளிநாட்டுப் பயணத்தை திட்டமிட முடியாத சூழ்நிலை இருப்பதை நீங்கள் அனைவரும் உணர்வீர்கள் என நான் நினைக்கிறேன்.

தூரங்களால் நாம் பிரிந்திருந்தாலும், தமிழ் உணர்வால் - சுயமரியாதை உணர்வால் - சமத்துவ உணர்வால் - சமூகநீதி உணர்வால் -மனிதநேய உணர்வால் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதன் அடையாளமாக, காணொலி வாயிலாக உங்களி டையே உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

நம்மை ஒளி இணைத்துக் கொண்டு இருக்கிறது என்பதைவிட, நம்மைப் பெரியாரின் ஒளி  இணைத்துக் கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

எந்த மண்ணிலிருந்து நான் பேசுகிறேன் தெரியுமா?

இந்த மாநாடு மனிதநேய - சமூகநீதி மாநாடாக கூட்டப்பட்டுள்ளது.

மனிதநேயத்தின் அடிப்படையே சமூகநீதிதான்!

சமூகநீதிக் கருத்தியலே மனிதநேயத்தின் அடிப்படையில்தான்  உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மனிதநேய - சமூகநீதி மாநாட்டில், சமூகநீதி மண்ணில் இருந்தபடியே நான் கலந்து கொள்கிறேன்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று சொன்ன திருவள்ளுவரின் மண்ணில் இருந்து பேசுகிறேன்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி னேன்' என்று உயிர்க்குரலாக ஒலித்த வள்ளலாரின் மண்ணில் இருந்து பேசுகிறேன்.

‘சமூகநீதியே சமநீதி' என்று முழங்கிய தந்தை பெரியாரின் மண்ணில் இருந்து பேசுகிறேன்.

அனைத்து வகுப்புக்கும் அனைத்து வாய்ப்பு களும் என்று 100 ஆண்டுகளுக்கு முன் சட்டம் போட்ட நீதிக்கட்சி ஆட்சி அமைத்த மண்ணில் இருந்து பேசுகிறேன்.

இவற்றின் நீட்சியாக ‘திராவிட மாடல்’ ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து நான் பேசுகிறேன். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' - என்று போற்றப்படுபவர் வான்புகழ் வள்ளுவர்.

திருவள்ளுவரும், தந்தை பெரியாரும் 

உலகச் சிந்தனையாளர்கள்

தமிழ்நாட்டில் பிறந்து - தமிழில் திருக்குறளைத் தீட்டி இருந்தாலும் -  அவரின் குறள்கள் - இன்று உலகில்  125-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது.

அதேபோல்,  தமிழ்நாட்டில் பிறந்து - தமிழில் எழுதியும் பேசியும் பரப்புரை செய்தாலும்  இன்றைய நாள் உலகச் சிந்தனையாளராகப் போற்றப்படுகிறார் தந்தை பெரியார் அவர்கள்.

அவரது  நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் சார்பில் உலகின் 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட திட்டம் தீட்டப்பட்டுள்ளன.

உலகளாவிய சமூகநீதியைப் பேசியவர்கள்தான்  திருவள்ளுவரும் - தந்தை பெரியாரும்.

இதனை இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த -பல்வேறு மொழிகள் பேசும் சிந்தனையாளர்களாகிய நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என  நான் நம்புகிறேன்.

பெரியார் உலகமயமாகிறார் - வாழ்ந்த காலத்திலேயே உலகமயமாகிவிட்டார்!

திருவள்ளுவரின் குறளையும் - தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் - உலகளாவிய அளவில் கொண்டு செல்வதன் மூலமாக மனிதநேய உலகத்தை - சமூகநீதி உலகத்தை - சமநீதி உலகத்தை - சமத்துவ உலகத்தை  நாம் உருவாக்க முடியும்.

பெரியார்  இன்று உலகமயமாகி வருகிறார்  என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன்.

பெரியார் அவர்கள்,  தான் வாழ்ந்த காலத்திலேயே உலகமயமாகி விட்டார்  என்றும் சொல்லலாம்.

* மலேசியா 

* சிங்கப்பூர்

*இலங்கை

* ரஷ்யா

*ஆப்பிரிக்கா

* கிரீஸ்

* துருக்கி

* ஜெர்மனி

*ஸ்பெயின் 

* பிரான்ஸ்

*போர்ச்சுகல்

* இங்கிலாந்து

*எகிப்து

*பர்மா  - போன்ற பல்வேறுநாடுகளுக்கு  சுற்றுப்பயணம் செய்தவர் அவர்.  அங்கெல்லாம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசியவர். 

அப்போதே, தனக்கான ஆதரவு வட்டத்தை  அந்த நாடுகளில் உருவாக்கியவர்தான்,  தந்தை பெரியார்!

‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என்று  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதினாரே!

அதைப் போலவே  அவர் வாழ்ந்த காலத்திலேயே  பெரியாரின் பேராற்றலை உலகம் உணர்ந்துவிட்டது.

அதேபோல், உலகத்தை உணர்ந்தவராக - எதிர்கால உலகம் எப்படி அமையும் என்பதைக் கணிக்கக் கூடிய தொலைநோக்குச் சிந்தனையாளராக பெரியார் அவர்கள் இருந்தார்.

1943 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் 'இனி வரும் உலகம்'  என்ற புத்தகம் வெளியானது.

1943 ஆம் ஆண்டிலேயே தொலைநோக்கோடு ‘‘இனிவரும் உலகம்''பற்றிக் கணித்தவர் தந்தை பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் ஒரு திருமண வீட்டில் பேசிய உரையை - அவருடன் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கேட்டு - இவை அனைத்தும் மிகப்பெரிய சிந்தனைகளாக இருக்கிறதே என்று எண்ணி - பேரறிஞர் அண்ணாவே நிருபராக மாறி - எழுதிய புத்தகம்தான் அது.

தான் வாழ்ந்த காலத்தில்  ஆங்கிலத்தில் வந்த பெரும்பாலான நூல்களைப் படித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

அத்தகைய ஆங்கில நூல்களில்கூட இல்லாத கருத்துகளை  பெரியார் அவர்கள் பேசி இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் பேரறிஞர் அண்ணா.

வருங்காலத்தில்

* எங்கும் ஆகாய விமானம் இருக்கும்.

* கம்பி இல்லாத் தந்திச் சாதனம் - ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.

* ரேடியோ - ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும்.

* உருவத்தைத்  தந்தியில் அனுப்பும்படியான சாதனம் இருக்கும்.

* ஆளுக்கு ஆள்  எங்கே இருந்தாலும்  உருவத்தைக் காட்டிப் பேசிக் கொள்ளலாம்.

* ஒரு இடத்தில் இருந்தபடியே பல இடங்களில் உள்ள மக்களுக்கு  கல்வி கற்றுத்தரலாம்.

* சிறுகுப்பிகளில் அடக்கக் கூடிய உணவுகள் வந்துவிடும்.

* மனிதனின் வாழ்நாள் அதிகமாகும்.

* குழந்தைகள் பிறப்புக்கு ஆண் - பெண் இனச்சேர்க்கை அவசியம் இருக்காது.

* மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

* மோட்டார் கார்களின் எடை குறையும்.

* பெட்ரோலுக்கு பதில் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.

* அனைத்து அறிவியல் சாதனங்களும் மக்களுக்கு எளிதில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும்.

- இப்படி எத்தனையோ அரிய கருத்துகளை 1943 ஆம் ஆண்டு சொன்னார் தந்தை பெரியார். 

நாம் இன்று பயன்படுத்தும் 

*செல்போன், 

*வீடியோ கால்,

* வீடியோ கான்பரன்ஸ்

* எப்.எம். வசதிகள்

* பேக்ஸ்

* உணவு கேப்சூல்கள்

* பேட்டரி கார்கள்   ஆகியவை பற்றி  அன்றே சொல்லி விட்டார் அய்யா.

Test tube baby  பற்றியும்  அன்றே சொல்லி விட்டார். 

குடும்பக் கட்டுப்பாடு என்பது  அனைவரும் பின்பற்றும்  நடைமுறை ஆகிவிட்டது. 

அதேபோல்  'மேல் நாடும் - கீழ்நாடும்'  என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் 1947-ஆம் ஆண்டு பேசினார். 

இந்தியாவின் வடமாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்த பெரியார், ஹரிதுவாரில் ஒரு சங்கத்தில் இப்படி ஒரு தலைப்பில் பேசி இருக்கிறார்.

அதாவது, அய்ரோப்பிய நாடுகளும் இந்தியாவும் எப்படி இருக்கிறது என்று பேசினார். 

உலகத்தின் அனைத்து விஷயங்களையும் இந்தியாவின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பேசி இருப்பார்.

உலக நாடுகளின் பண்பாட்டை 

இந்தியாவில் விதைத்தவர் பெரியார்!

உலகம் முழுக்க நான்கைந்து ஆண்டுகள் அலைந்தவர்களால்தான் அப்படி பேச முடியும். 

அப்படி. உலக நாடுகளின் பண்பாட்டை இந்தியாவில் விதைக்க விரும்பிய உலகத் தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

*  சாக்ரடீஸ் -

* இங்கர்சால் -

* மார்க்ஸ் -

*லெனின்- 

* பெட்ரண்ட் ரசல்  - ஆகியோர் உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதைகள்.

இவர்கள் எழுத்துக்களை 80 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மொழிபெயர்த்து புத்தகங்களாக வெளியிட்டவர் தந்தை பெரியார்.

அத்தகைய பெரியார், மனிதநேயத்தையும் - சமூகநீதியையும்தான் வலியுறுத்தினார்.

தன்னைப் போல வலியுறுத்திய உலகத் தலைவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகம் செய்தார்.

நாங்கள் நடத்தும் ‘‘திராவிட மாடல்'' அரசின் சீலங்கள்!

அத்தகைய, தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்களான பேரறிஞர் அண்ணா,  முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில்தான் நான் எனது தலைமையிலான ஆட்சியை நடத்தி வருகிறேன்.

இதற்கு ‘திராவிட மாடல்' என்று  பெயர்சூட்டி இருக்கிறேன்.

எனது  ‘திராவிட மாடல்' ஆட்சியின்  மய்யக் கொள்கை என்பது மனிதநேயமும் சமூகநீதியும்தான்.

* அனைத்து இடங்களிலும்  சமூகநீதியை நிலைநாட்டி வருகிறோம்.

* வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீடு  அனைவர்க்கும் சமவிகிதத்தில் தரப்பட்டு வருகிறது.

* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

* பெரியார் பிறந்தநாள் ‘சமூகநீதி நாளாக' அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

* அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்  ‘சமத்துவ நாளாக' அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

* அயோத்திதாச பண்டிதருக்கு நினைவு மண்டபம் கட்ட இருக்கிறோம்.

* பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இலவச போக்குவரத்து பயண வசதி தரப்பட்டுள்ளது.

* தமிழ்த்தாய் வாழ்த்து  மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* வேலைவாய்ப்பை அடைய தாய்மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

* இல்லம் தேடிக் கல்வி செல்கிறது.

* மக்களைத் தேடி மருத்துவம் செல்கிறது.

* உயர்கல்வி பெறும்  அரசுப் பள்ளி மாணவியர்க்கு ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.

* அரசுப்பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து இளைஞர்களையும் மாணவ, மாணவியரையும் தகுதியுள்ளவர்களாக ஆக்க ‘நான் முதல்வன் திட்டம்' அமலில் உள்ளது.

*  அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்க்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

* சமூகநீதிக் கண்காணிப்பு குழுவைபேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நிறுவி இருக்கிறோம்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தை நீதியரசர் சிவக்குமார் தலைமையில் உருவாக்கி இருக்கிறோம்.

- இப்படி எண்ணற்ற ‘திராவிட மாடல்' திட்டங்களை தீட்டி தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம்.

கடந்த அய்ம்பதாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட 

* இடஒதுக்கீட்டு உரிமைகள்

* இருமொழிக் கொள்கை

* தமிழ்மொழி மேம்பாடு

* தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள்

* வேளாண்மைக்குத் தரப்பட்ட முக்கியத்துவம்

* சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கம்

* மாநில உரிமைகளுக்காக போராடுதல் ஆகியவற்றின் மூலமாக  தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 

தி.மு.க. நிற்கும் அடித்தளம்!

அதனை மேலும் உச்சத்துக்கு கொண்டுவரவே ‘திராவிட மாடல்' கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமூகநீதி -

சமத்துவம் -

சுயமரியாதை -

மொழிப்பற்று -

இன உரிமை -

மாநில சுயாட்சி  ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில்  நிற்கும் இயக்கம்தான்  திராவிட முன்னேற்றக் கழகம்.

எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். 

தொழில் வளர்ச்சி -சமூக மாற்றம் -கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

பொருளாதாரம் -

கல்வி -

சமூகம் -

சிந்தனை -

செயல்பாடு  ஆகிய அய்ந்தும்  ஒரு சேர வளர வேண்டும். 

அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. 

அதுதான் ‘‘திராவிட மாடல் வளர்ச்சி'' என திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறேன்.

இத்தகைய திராவிடவியல் கொள்கையானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவவேண்டும் என்றும் சொல்லி வருகிறேன்.

இந்தியாவின் பிற மாநிலங்களை ஆளும் அரசுகள், தமிழ்நாட்டின்  ‘திராவிட மாடல்' கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அறிவதில் ஆர்வமாக இருக்கின்றன. தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதிலும் துடிப்புடன் இருக்கின்றன.

தந்தை பெரியாரின் கோட்பாடுகள்!

இத்தகைய சூழலில் ‘திராவிட மாடல்' தத்துவமானது உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக  கனடாவில் இம்மாநாடு நடத்தப்படுவதாகவே நான் நினைக்கிறேன்.

‘‘ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் திராவிடர்கள்தான்!” என்று சொன்னார் தந்தை பெரியார்.

மனிதனுக்குள் ரத்த பேதமும் இல்லை! ஆண் பெண்ணுக்கு மத்தியில்  பால் பேதமும் இல்லை! என்று சொன்னவர் தந்தை பெரியார்.

ஒரு மனிதன் சக மனிதனை, மனிதனாக நடத்துவதே மனிதநேயம்!

அனைத்து மனிதர்க்கும் நீதி வழங்குவதே சமூகநீதி!

தந்தை பெரியார் வலியுறுத்திய 

*  சமூக நீதி -Social justice

*  மானுடப்பற்று - Humanism 

*  சுயமரியாதை - Self-respect

*  பகுத்தறிவு - Rationality

* சமத்துவம் - Equality  ஆகிய அய்ந்தும் உலகளாவிய கருத்தியல்கள்.

இவை, நாடு, மொழி, இனம், எல்லைகள் கடந்தவை!

பெரியார் உலகமயமாக வேண்டும் என்ற ஆசிரியர் வீரமணி அவர்களின் நோக்கம் நிறைவேறும் காலம்நெருங்கிக் கொண்டு இருக்கிறது. 

மாநாட்டை முன்னெடுக்கும் ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!

இதனை முன்னெடுக்கும் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி,  டாக்டர் சோம இளங்கோவன்,  முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர்,  இலக்குவன் தமிழ்,  அருள்செல்வி வீரமணி,  வீ.குமரேசன்,  வீ.அன்புராஜ் ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்வில், நான் பங்கெடுத்து உரையாற்ற  வாய்ப்பை வழங்கிய  கேரி ஆனந்த சங்கரி மற்றும் அவரது குழுவினருக்கும் - கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் - டாண்டன் மற்றும் கனடியன் தமிழ் காங்கிரசைச் சேர்ந்த சிவன் இளங்கோ -கனடா மனிதநேய அமைப்புக்கும், நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1932-ஆம் ஆண்டு  இலங்கையில் பேசிய தந்தை பெரியார் அவர்கள் - “நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்டம் ஆக்குங்கள்!

அவற்றின் மீது தேசம், மதம், ஜாதி என்கிற பாகுபாடு இல்லாத -

மனித சமூகம் - சம உரிமை - சமநிலை என்ற கட்டடத்தைக் கட்டுங்கள்!

அனைத்து உலக மக்களுடனும் பிரிவினைக்கு இடமில்லாமல்  ஒன்று சேருங்கள்! அப்போது, நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!” என்று சொன்னார்.

அதையே நானும் இன்று சொல்கிறேன்.

‘மானுட சமுத்திரம் நான் எனக் கூவு' என்றார் புரட்சிக் கவிஞர் அவர்கள்.

மனித நேயமும் -

சமூகநீதியும் மட்டுமே  மானுட சமுத்திரத்தை ஒன்றாக்கும்.

நன்றி வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment