ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம் தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம் தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லும்

சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஆக.22 தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு 

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அர்ச் சகர்கள் நியமனம், இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என 2021 அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.

 வாதம் 

பின்னர், இந்த வழக்கைத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது. அப்போது மனு தாரர்கள் தரப்பில், கோவில்களுக்குப் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நிய மிப்பது சட்டவிரோதமானது என்றும் அறங் காவ லர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

ஆகம விதிகள் 

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமெனக் கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றி, கோவில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

விளக்கம் 

அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருடப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப் பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மய்யங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தீர்ப்பு 

சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகம விதிகளைப் படித்தவர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள தாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று  22.8.2022 தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பான்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய  அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அமர்வு - தமிழ்நாடு அரசு கொண்டு வந்த விதிகள் செல்லும் எனத் தீர்ப்பளித்தனர்.

குழு 

மேலும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும் எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன என்பதைக் கண்டறிய அய்ந்து பேர் கொண்ட 'குழு' நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த அனைத்து வழக்குககளையும் முடித்து வைத்து தீர்ப்பளித்தனர்


No comments:

Post a Comment