சென்னை,ஆக.26- அறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று (25.8.2022) ஒரே நாளில் 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய் யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதேபோல், 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதி முறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி தமிழ்நாட்டில் மத்திய சிறைகளில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளில் விடுதலை செய்வதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதில் 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட் டது. இதையடுத்து முன்விடுதலையாகும் கைதிகளின் விவரங்களை சிறைத்துறை டிஜிபி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் இறுதியான கைதிகளை முன்விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் 9 மத்திய சிறைகளில் இருந்து தேர்வான கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் நேற்று (ஆக.25) மட்டும் 40 கைதிகள் விடுதலையாகினர். முன்விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்ட பிற கைதிகள் வரும் நாட்களில் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment