கலாச்சாரப் பண்பாட்டுத் திணிப்பு என்பதற்காகத்தான் இந்தியை எதிர்க்கிறோம் நாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

கலாச்சாரப் பண்பாட்டுத் திணிப்பு என்பதற்காகத்தான் இந்தியை எதிர்க்கிறோம் நாம்!

திருச்சி: மகளிரணி - மகளிர் பாசறை - கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

திருச்சி, ஜூலை 5    நாம் இந்தி மொழியை எதிர்க்கிற வர்கள். ஆனால், மொழி என்கிற முறையில் தனிப்பட்ட முறையில் நாம் இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தித் திணிப்பைத்தான், ஒரு கலாச்சாரப் பண்பாட்டுத் திணிப்பு என்பதற்காகத்தான் அதை - நாம் இந்தியை எதிர்க்கிறோம்என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

திருச்சியில் கடந்த 12.6.2022 அன்று திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

லக்னோவிலிருந்து வந்த மின்னஞ்சல் கடிதம்

நேற்று எனக்கு மின்னஞ்சல்மூலம் ஒரு கடிதம் வந்திருக்கிறது. எங்கே இருந்து என்றால், உத்தரப்பிரதேச தலைநகரம் லக்னோவிலிருந்து வந்திருக்கிறது.

அந்தக் கடிதத்தில் உள்ளவற்றை அப்படியே சொல் கிறேன். ஏற்கெனவே தொலைபேசிமூலம் வடநாட்டி லிருந்து என்னிடம் பேசினார். அவர் பேசுகின்ற ஆங்கிலத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், இந்தி பேசுகின்றவர்களுடைய ஆங்கிலம் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். அவருடைய குரலும் சரியாக எனக்கு விளங்கவில்லை.

உடனே நான் சொன்னேன், நீங்கள் என்ன சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை கடிதமாக அனுப்புங்கள் என்றேன்.

அவருடைய முகவரியையும் தெளிவாக அந்த மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

டாக்டரேட் பட்டம் பெற்றவர். 

டாக்டர் பி.எச்.ராஹி

ஸ்டேட் பிரசிடெண்ட்,

சமத்துவத்தை உருவாக்கக்கூடிய, சமூகநீதியை உண்டாக்கக்கூடிய அமைப்பின் தலைவர்.

சி.எஸ்.அய்.ஆரின், ஃபார்மர் சீனியர் பிரின்சிபல் சயின்டிஸ்ட்..

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் உள்ள  செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

ஏனென்று கேட்டால், சில பைத்தியக்காரர்கள், பெரி யாருடைய சிலைக்கு காவி சாயம் பூசுவது, யாரும் இல்லாத நேரத்தில்  சிலைக்குப் பக்கத்தில் ஒரு செருப்பை வைப்பது போன்ற அடாவடி வேலைகளைச் செய் கிறார்கள்.

தத்துவ ரீதியாக மனநலம் 

சரியில்லாதவர்கள்தான்

காவல்துறை என்ன செய்கிறார்கள் என்றால், மேற்கண்ட வேலைகளை செய்தவனைப் பிடித்தவுடன், அவனுக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வார்கள்.

உண்மைதான், பெரியாரைப்பற்றி இப்படி விமர்சனம் செய்பவர்கள், தத்துவ ரீதியாக மனநலம் சரியில்லாத வர்கள்தான். சரியான மனநிலையில் இருந்தால், யாராக இருந்தாலும், பெரியாரைப் பாராட்டத்தான் செய்வார்கள்.

இந்த ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், 21 உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் பெரியார் நூல்களை பரப்புவதற்காக நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்.

பெரியாரை எப்படி உலகம் ஈர்க்கிறது?

எப்படி வடபுலம்கூட ஈர்க்கிறது?

கலாச்சாரப் பண்பாட்டுத் திணிப்பு என்பதற்காகத்தான் 

இந்தியை எதிர்க்கிறோம் நாம்!

நாம் இந்தி மொழியை எதிர்க்கிறவர்கள். ஆனால், மொழி என்கிற முறையில் தனிப்பட்ட முறையில் நாம் இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தித் திணிப்பைத்தான், ஒரு கலாச்சாரப் பண்பாட்டுத் திணிப்பு என்பதற்காகத்தான் நாம் இந்தியை எதிர்க்கிறோம்.

டில்லியில் உள்ள பெரியார் மய்யத்தில், மூன்று மொழிகளில் பெயர்ப் பலகையை வைத்திருக் கிறோம். புரியவேண்டும் என்பதற்காக.

அதேபோன்று, வட மாநிலங்களுக்குச் செல் லும்பொழுது, தந்தை பெரியாருடைய உரையை, என்னுடைய உரையை இந்தி மொழியில், மொழி பெயர்க்கிறார்கள்.

‘‘நீங்கள் இந்தி எதிர்ப்பாளர்களாயிற்றே’’ என்று அவர்கள் நினைப்பதில்லை. 

டாக்டர் அம்பேத்கர் அவர்களை நாம் வட வராகப் பார்க்காமல், சமூகநீதிக்கும், சுதந்திரத்திற்கு மான புரட்சியாளராகப் பார்க்கிறோமே, அது போலத்தான்.

ராஹி எழுதிய மின்னஞ்சல் கடிதம்!

அந்த மின்னஞ்சல் கடிதத்திற்கு வருவோம்.

To

The President,

Dravidar Kazhagam

K.Veeramani Jee,

Subject: To introduce and spread of Dravida Movement (Movement Launched by Late respected Periyar E. V. Ramasamy Naickar)

Sir,

We are the follower and spreading the Ideology of Rashtrapita Jyotiba Phooley, Baba saheb Dr. B. R. Ambedkar, Periyar E. V. Ramasamy Naikar, Sir Chaudhary Chhoturam, Ram Swarup Verma, Jagdev Prasad Kushwaha and Maharaj Singh Bharti (Bahujan Ideology) in whole Hindi speaking states of India. And further in context of making strong union of Dravida and Bahujan Movement in whole country, we want to properly introduce and spread the Dravida Movement launched by late respected Periyar E. V. Ramasamy Naikar, in Hindi speaking states of India.

So in this respect we want to meet you to get your proper guidance and moral support to properly introduce and spread the above mentioned movement in whole Hindi speaking states of India. In this regard we also want to meet Honourable M. K. Stalin Jee, Chief Minister, Tamil Nadu. Therefore, for this pious purpose we request you to give your kind consent to meet you in your office along with due appointment to meet Honourable M. K. Stalin Jee at Chennai.

In this matter you are further requested to kindly inform us well in advance of 15 to days before of meeting date.

Thanking you With kind regard

Yours Faithfully

Dr.T.S.Rahi,

State President,

Shoshit Samaj Dal, U.P.


இதன் தமிழாக்கம் வருமாறு:

பொருள்: தந்தை பெரியாரால் அமையப்பெற்ற திராவிட இயக்கத்தினை எடுத்துச் செல்லும் பணி

 அய்யா

 நாங்கள் மகாத்மா ஜோதிபா புலே, பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ராமசாமி, சர் சவுத்திரி சோட்டுராம், ராம் ஸ்வரூப் வர்மா, ஜகதேவ் பிரசாத் குஸ்வாஹா, மகராஜ் சிங் பாரதி(பகுஜன் கொள்கை) ஆகியோரின் கொள்கை களைப் பின்பற்றி ஹிந்தி பேசும் மக்களிடம் கொண்டு செல்கிறோம். மேலும் பகுஜன் மற்றும் திராவிட இயக்கத்தின் ஒருமித்த கொள்கைகளை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சரியான விதத்தில் கொண்டு சேர்க்கவேண்டும்  என்பதே எங்களின் நோக்கம்.

 தற்போது நாங்கள் தந்தை பெரியாரின் கொள் கைகளை அவரது சிந்தனைகளை வட இந்தியாவில் ஹிந்தி பேசும் மக்களிடையே கொண்டு செல்லும் பணியில் இருக்கிறோம்.

 இதற்காக நாங்கள் தங்களைச் சந்தித்து ஆலோ சனைகளையும், தங்களின் வழிகாட்டுதலையும், ஆதரவையும் கேட்டுக் கொள்ளவிருக்கிறோம். ஹிந்தி பேசும் பகுதிகளில் நமது கொள்கைகளை மற்றும் இயக்கத்தினை சரியாகக் கொண்டு செல்ல சமூகநீதிப் பாதையில் ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளோம். 

 ஆகவே, தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறும், அதேபோல் முதலமைச்சரைச் சந்திக்க பரிந்துரை செய்து தருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.  அருள்கூர்ந்து 15 நாட்களுக்கு முன்பாக தங்களைச் சந்திக்கும் நாள் குறித்து தெரிவித்தால் எங்கள் குழுவினர் பயண ஏற்பாடுகள் செய்து உங்களைச் சந்திக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

 நன்றி!

 முனைவர் டி.எஸ்.ராஹி

 சோசித் சமாஜ் தள் உத்தரப் பிரதேசம்

எனவே, பெரியார் உலக மயமாகிறார்.

Periyar: A Study in Political Atheism

என்னுடைய கைகளில் இருக்கும் ஒரு புத்தகம் சென்ற மாதம் இங்கிலாந்து நாட்டில் வெளியான, ஆய்வுக்குரிய ஒரு புத்தகம். Periyar: A Study in Political Atheism (Literary/Cultural Theory) by Karthick Ram Manoharan (University of Wolverhampton) இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கருத்தரங் கத்தை நடத்தி புத்தகத்தை வெளியிட்டார்கள். சென்ற வாரம்கூட ஆய்வரங்கத்தை நடத்தினார்கள்.

இப்படி உலகம் முழுவதும் பெரியார், பெரியார், பெரியார் என்று

பெரியார் உலகமயமாகிறார்

உலகம் பெரியார்மயமாகிறது

அதை செய்வதற்குத்தான், திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகம் உருவாகவிருக்கிறது.

திராவிட மாடல் என்றால் என்ன?

அனைவருக்கும் அனைத்தும் -

எல்லோருக்கும் எல்லாமும் - என்பதுதான்.

எல்லோருக்கும் எல்லாமும் கொடுக்கவேண்டும் என்று சொல்லும்பொழுது, நீட் தேர்வை எதிர்ப்பு போன்றவற்றை செய்யும்பொழுது நண்பர்களே, இந்த இயக்கம் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம்.

எங்களால் வன்முறையோ, வன்முறைக்கு இடமோ இருக்காது.

ஆனால், சனாதன தர்மத்தைப் பரப்புவதற்கு, கல வரம், வன்முறையை செய்யலாம் என்கிறார்கள்; யார்?

காந்தியாரைக் கொன்றக் கூட்டம்

மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்.

கோல்வால்கர் எழுதிய ‘ஞானகங்கை!’

இதோ என்னுடைய கைகளில் இருப்பது ‘‘ஞான கங்கை’’ - ஆர்.எஸ்.எஸினுடைய தத்துவகர்த்தா யார் என்றால், கோல்வால்கர்.

அந்த கோல்வால்கர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் ‘‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’’ என்பது.

அதைத் தமிழில் எப்படி மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்றால், ‘‘ஞானகங்கை.’’

கங்கை நதி அசுத்தம் நிறைந்ததாக மாறிப் போயிருக்கிறது; கங்கையை சுத்தம் செய்வதற்காக 3,000 கோடி ரூபாயை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கினார்கள்.

கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக ஒதுக்கிய பணம் எல்லாம் வீணாகப் போயிற்று என்று உச்சநீதி மன்றமே சொல்லியிருக்கிறது.

அந்த ஞானகங்கை புத்தகத்தில் உள்ள ஒரு பகுதியை சொல்கிறேன்.

எது திராவிட மாடல்?

எது திராவிட மாடல்?

ஏன் அதை மற்றவர்கள் எதிர்க்கிறார்கள்?

எதிர்ப்பதற்காக ஆட்களைப் பிடித்து, கூலிப் படை களை அனுப்புகிறார்கள்.

தற்போது ‘‘பெண்களுக்கு சம உரிமை’’ - ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து பெண்களை மீட்போம் என்ற அறைகூவல்கள் எழுந்துள்ளன.

பதவி நிலைகள், ஆண் - பெண் என்ற பால் பிரிவு களின் பெயரில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன, மிகப் பெரிய அளவிற்கு.

இவ்வாறு ஏற்கெனவே உள்ள ஜாதி, சமூக, மொழிப் பிரிவினைகளோடு புதிதாக இந்தப் பால் பிரிவினையும் வந்திருக்கிறது.

ஆளுநர் குறுக்கே கட்டைப் போடுகிறார்

இன்றைக்கு ஏன் ஆளுநர் குறுக்கே கட்டைப் போடுகிறார்? அவர் மக்கள் வரிப் பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு, அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டாரே, அதில்  எங்கேயாவது சனாதனம் இருக்கிறதா?

மதச்சார்பற்ற தன்மைதான்.

அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் என்ன சொல்லியிருக்கிறார்கள்

We, The People of India, having solemnly resolved to constitute India into a Sovereign Socialist Secular Democratic Republic and to secure to all its citizens

முதலில், இறையாண்மை - அதாவது அதிகாரம். அந்த இறையாண்மை எங்கே இருக்கிறது என்றால், மக்களிடம் இருக்கிறது. பிரதமரிடம் இல்லை, குடியரசுத் தலைவரிடம் இல்லை, ஆளுநரிடம் இல்லை, முதலமைச்சரிடம் இல்லை, அமைச்சர்களிடம் இல்லை. மக்களாகிய நம்மிடம்தான் இருக்கிறது - உங்களிடம் இருக்கிறது என்பதுதான் அம்பேத்கரும், மற்றவர்களும் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பீடிகையில்.

மனுதர்மத்திற்கு நேர் எதிரானது 

இந்திய அரசமைப்புச் சட்டம்

அவர்களுக்கு என்ன எண்ணம் என்றால், அரச மைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, மனுதர்மம்தான் இருக்கவேண்டும் என்பதுதான்.

ஏனென்றால், மனுதர்மத்தில் இருப்பதற்கு நேர் எதிரான பகுதி அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றி ருக்கிறது.

Justice, social, economic and political; Liberty of thought, expression, belief, faith and worship;

Equality of status and of opportunity;

and to promote among them all Fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மூன்றும் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. இந்த மூன்றுக்கும் எதிரானதுதான் மனுதர்மம்.

மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டம் ஆக்க வேண்டும் என்று சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ். அதனு டைய அரசியல்  வடிவம்தான் பா.ஜ.க. ஆகவே, பெண் ணுரிமை கூடாது என்பதுதான் அவர்களுடைய நிலை.

நாங்கள் சனாதனத்தைக் காப்பாற்றுவோம் என்று சொல்கிறார்களே, அப்படி அதை நீங்கள் காப்பாற்று கிறீர்கள் என்றால், எங்கள் தமிழிசை உங்கள் ஆளுநராக இருக்கிறாரே, அப்படி வந்திருக்கலாமா?

அவரை ஆளுநராக நியமிக்கும்பொழுதே, உங்கள் சனாதனம் போய்விட்டதே!

தமிழ்நாட்டில் ஓர் அற்புதமான ஆட்சி!

தமிழ்நாட்டில் ஓர் அற்புதமான ஆட்சி நடை பெறுகிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சமூகநீதிக்கான ஆட்சி, ஓராண்டு காலத்தில் வரலாறை உருவாக்கி யிருக்கிறது.

இந்த ஆட்சி, உத்தரப்பிரதேசத்தில் இருப்ப வர்கள் இவரை சந்திக்கவேண்டும் என்று விரும்பு கிறார்கள். வெளிநாடுகளான கனடா, மலேசியா போன்ற நாடுகளுக்கு வாருங்கள் என்று அழைக் கிறார்கள். அதுவும் இந்தக் குறுகிய காலத்தில்.

கலைஞர் அவர்கள் உடலால் மறைந்தவுடன் - சில பேருக்கு நப்பாசை ஏற்பட்டது. வெற்றிடம், வெற்றிடம் என்று சொன்னார்கள். நிறைய பேர் ஜோசியத்தை நம்புவார்கள் - இவனுடைய காசு பலனை இழந்துவிட்டு, இன்றைய ராசி பலன் என்னவென்று பார்த்துக் கொண்டிருப்பான்.

இன்னும் ஜோசியத் தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறார் அந்த ஜோசியம்!

அதிலும் மிக முக்கியமாக ஒரு ஜோதிடர், ‘‘ஸ்டாலி னுக்கு முதலமைச்சராகக் கூடிய ராசியே இல்லீங்க; அப்படி அவர் முதலமைச்சர் ஆகிவிட்டால், நான் என்னுடைய ஜோசியத் தொழிலையே விட்டுவிடு கிறேன்’’ என்று சொன்னார்.

இன்னும் அவர் தொழிலை விடாமல், ஜோசியத் தொழி லைத்தான் செய்துகொண்டிருக்கிறார். இன்னும் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார். இன்னும் நம்மாள் அதை நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; அந்த ஜோதிடத்தை நம்பி பெண்கள் செல்கிறார்கள்.

அதிலும் அந்த வித்தையை எப்படி செய்கிறார்கள் என்றால், விஞ்ஞானத்தை ஜோதிடத்திற்குப் பயன்படுத்தி, பெண்களை ஏமாற்றுகிறார்கள்.

புதுக்கோட்டையில் 

ஏமாற்றிய சாமியார்கள்!

புதுக்கோட்டையில் நடைபெற்றதாக இரண்டு வாரங் களுக்கு முன்பு ஒரு செய்தி வெளிவந்தது.

இரண்டு சாமியார்கள் ஒரு வீட்டிற்கு வந்து, ‘‘உங்கள் பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை; நீங்கள் தொட்ட தெல்லாம் தோல்வியில்தான் முடியும். ஆகவே, நான் சொல்வதை செய்தால், உங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்று சொல்லி,

என்னுடைய மாந்திரி சக்தி எப்படி என்பதைப் பாருங்கள் - நான் தொட்டுக் கொடுக்கிற எலுமிச்சை பழம் இருக்கிறதே, இது மேலே வரும் பாருங்கள்’’ என்றாராம்.

அதைப் பார்த்தவுடன் அந்த வீட்டில் உள்ளவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.

2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் அந்த இரண்டு சாமியார்களும்.

பிறகு காவல்துறைதான் அவர்களைப் பிடித்தார்கள். அந்த சாமியார்கள் தேடப்படும் குற்றவாளிகள்.

அவர்களைப் பிடித்து, எப்படி இதை செய்தீர்கள் என்று செய்யச் சொன்னார்களாம் காவல்துறையினர்.

பாதரசத்தை (மெர்குரி) எலுமிச்சம் பழத்தில் போட்ட வுடன் மேலே வருகிறது. ரத்த அழுத்தம் பார்க்கும் பொழுது மெர்குரி மேலே செல்வதுபோல, அதுவும் மேலே போயிற்றாம்.

ஏமாற்றுவதற்கும் நவீன யுக்தியை பயன்படுத்துகிறார்கள்!

ஆகவே, ஏமாற்றுவதற்கும் நவீன யுக்தியை பயன் படுத்துகிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டையில்கூட நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ஒருவர் டேபிள் போட்டு அமர்ந் திருப்பார் - என்னவென்று கேட்டால், கம்ப்யூட்டர் ஜாதகம் பார்க்கிறேன் என்பார்.

கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவருக்கும், ஜாதகத் திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

நாவலர் நெடுஞ்செழியன்

நம்முடைய நாவலர் நெடுஞ்செழியன்தான் சொல் வார், ‘‘ஏண்டா நீ ஆறறிவு படைத்தவன்; அந்த அறிவே இல்லாத ஒரு கிளி என்ன சொல்கிறது என்று கேட்கிறாயே, உன்னுடைய மன அறிவு என்னாவது?’’ என்று கேட்டார்.

எனவே, இந்த இயக்கம் பகுத்தறிவை சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம்.

இந்த இயக்கம் அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லக்கூடிய இயக்கம்.

ஜாதியை ஒழிக்கவேண்டும்; சமத்துவத்தை உரு வாக்கவேண்டும் என்று சொல்வது.

அந்த ஜாதிக்கு எது மூலாதாரமாக இருக்கிறதோ, அதை விலக்கினாலொழிய, அந்த மூடநம்பிக்கையைப் போக்கினால் ஒழிய - வேறு வழியில்லை என்பதினால் தான், நாங்கள் இதை பேசவேண்டிய அவசியத்தில் இருக்கிறோமே தவிர, யாரோடும் வம்புக்குப் போவதற் காக அல்ல.

எப்படி கிருமியை ஒழித்தால்தான், நோயை முற்றிலு மாக ஒழிக்க முடியுமோ - அதுபோலத்தான், ஜாதிக்குக் கிருமிகளாக - கடவுளாகவோ, மதமாகவோ, சம்பிரதாய மாகவோ, சனாதனமாகவோ - எது இருந்தாலும் ஒழிக் கப்படவேண்டும். அதன்மூலமாகத்தான் மனித குலம் ஒன்றாகும்.

பார்ப்பனர்களுக்கு நாம் விரோதிகள் அல்ல!

ஆண் - பெண் என்கிற பேதம் இருக்கக்கூடாது.

உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்கிற பேதம் இருக்கக் கூடாது.

அனைவர் வீட்டுப் பிள்ளைகளும் படிக்கவேண்டும்.

அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லும் பொழுது, பார்ப்பனர்களுக்கு நாம் விரோதிகள் அல்ல. பார்ப்பனர்களுக்கு மூன்று சதவிகிதம் என்றால், அந்த மூன்று சதவிகிதம் படித்துக் கொள்ளட்டும்.

மூன்று சதவிகிதமாக இருப்பவர்கள், நூறு சதவிகி தத்தையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்று சொல்லும் பொழுதுதான், போராட்டம். அதிலே கூட இந்த இயக்கம் அமைதியாக இவை அத்தனையையும் செய்துவிட்டது. 

ஒரு துளி ரத்தம் சிந்தாமல், யாருக்கும் சங்கடம் ஏற்படாமல்.

எனவேதான், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது.

காந்தியார் கொலை செய்யப்பட்ட நேரத்தில்...

காந்தியார் கொல்லப்பட்ட நேரத்தில், ஓமந்தூரார் அவர்கள், திருச்சியில் தந்தை பெரியார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு, திருச்சி வானொலி நிலையத் தாரை அங்கே போகச் சொல்லி, 

‘‘அய்யா நீங்கள் பேசினால்தான், மக்கள் அமைதி காப்பார்கள்’’ என்று சொன்னார்.

பெரியார் அய்யா அவர்கள் வானொலியில் உரை யாற்றி, கொஞ்ச நஞ்சம் ஏற்பட்ட கலவரங்கள்கூட இல் லாத அளவிற்குப் பெரியார் அமைதியை உண்டாக்கினார்.

இன்றைக்கும் மதவெறியை மாய்ப்போம் -

மனிதநேயத்தைக் காப்போம்

என்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து - காவல் துறை செய்யவேண்டிய பணியை, திராவிடர் கழகம் செய்தது.

எனவே, ஏமாற்றுக்காரர்களைக் கண்டுபிடிப்பது, எங்களுடைய பணி - உங்களுக்கு உதவுகின்ற பணி.

அதேபோல, அமைதியை உருவாக்குவதில் திரா விடர் கழகத்தினுடைய பணி, உங்களுடைய பணிக்கு ஆக்கமும், ஊக்கமும், அஸ்திவாரமும் கொடுக்கக் கூடிய பணியாகும்.

குற்றவாளியை, குற்றவாளியாகப் பாருங்கள்!

எனவேதான், குற்றவாளியையும், பறிகொடுத்த வனையும் - இரண்டு பேரிடமும் சமத்துவமாக நடப்போம் என்ற அந்த எண்ணம் இல்லாமல், குற்றவாளியை, குற்றவாளியாகப் பாருங்கள்; பொருளைப் பறிகொடுத்தவனுக்கு, பொருளை மீட்டுக் கொடுப்பதில், அவரிடம் அனுதாபத்தோடு இருப்பதைப்போல - 

இழந்த உரிமைகளை மீட்டெடுக்கப்படவேண்டும்!

நம்முடைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கப்பட வேண்டும்-

நாங்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கப்பட வேண்டும்

அந்த வகையில், மகளிர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து, இவ்வளவு சிறப்பான கூட்டத்தை போட்டி ருக்கிறீர்கள் என்று கூறி, மிகப்பெரிய அளவிற்கு, இந்தத் தீர்மானத்திற்கு நீங்கள் ஆதரவு கொடுத்து, 

திருச்சி மாநகராட்சிக்கும் வேண்டுகோள் வைத்து, அடுத்த முறை இந்தத் தெருவின் பெயரும் மாற்றப்பட்டு, நல்ல அள விற்கு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்டு,

நீண்ட நேரம் ஒத்துழைத்த உங்களுக்கும், காவல் துறைக்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்றி கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.


No comments:

Post a Comment