இலங்கைக்கு எதிராக இராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

இலங்கைக்கு எதிராக இராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இராமேசுவரம்,ஜூலை25- இராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி கைது செய்யும் நிகழ்வு அடிக்கடி நடந்து வருகிறது. இதேபோல் கடந்த 20-ந்தேதி இராமேசுவரத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப் படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த இராமேசுவரத்தை சேர்ந்த அந்தோணி, மடகு பிச்சை, பாலமுருகன், தங்க பாண்டி, அர்ஜூனன், ராஜா ஆகிய 6 மீனவர்களையும், அவர்கள் சென்ற விசைப்படகையும் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்த மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக் கக்கோரி இராமேசுவரம் மீனவர்கள் நேற்று (24.7.2022) வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து இன்று இராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு மீனவர் சங்கங்கள் சார்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் சகாயம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு இலங்கை கடற்படையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டும். இலங்கை கடற்படை தாக்குதலில் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment