நாடாளுமன்ற செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 31, 2022

நாடாளுமன்ற செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் - தயாநிதி மாறன் 

 தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார். 

 நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்  

'தஞ்சாவூர், தூத்துக்குடி, கோவை விமான நிலையங்கள் எப்போது விரிவுபடுத்தப்படும்' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா பதில் அளித்து கூறியதாவது, அனைத்து விமான நிலையங்களை மேம்படுத்துவது என்பது தொடர் நடவடிக்கை. 

அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையங்களை மேம்படுத்த மூலதன செலவின் இலக்காக ரூ.91 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.80.43 கோடி செலவிலும், மதுரை விமான நிலையத்தில் ரூ.48.36 கோடியும், கோவையில் ரூ.65.84 கோடியிலும், சென்னை விமான நிலையத்தில் ரூ.138.16 கோடி செலவிலும் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 

தஞ்சாவூர் விமான நிலையத்தில் உள்ள புதிய ராணுவ விமான தளத்தை மேம்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் முன்மொழிந்துள்ளது. கோவையில் ஓடுதளத்திற்கான இடத்தை மாநில அரசு கையப்படுத்தி கொடுக்கப்பட்ட பிறகு விரிவாக்க பணிகள் தொடங்கப்படும். 

தூத்துக்குடியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

5 கோடியை நெருங்கும் 

நீதிமன்ற  நிலுவை வழக்குகள் 

 நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 

 நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்து மூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- இம்மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரத்து 62 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கடந்த 25ஆம் தேதி நிலவரப்படி 25 உயர்நீதிமன்றங்களில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் 4 கோடியே 23 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சம் ஆகும். இது 5 கோடியை நெருங்கி வருகிறது. நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் அரசுக்கு பங்கில்லை. வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.  வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 


No comments:

Post a Comment