புதுச்சேரி, ஜூலை14- விபத்தில் மூளைச்சாவடைந்த தங்கள் மகனின் உடல் உறுப்புகளை, பலருக்கும் பயன்படும் வகையில் மனிதநேயத்துடனும், கருணையுள்ளத்துடனும் உடற்கொடை அளிக்க முன் வந்த அம்மாணவனின் பெற்றோருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள வெள்ளியனூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் சரவணமுத்து (வயது 18). விழுப்புரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 12.7.2022 அன்று காலை அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவரின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனை அவர்கள் ஜிப்மர் மருத்தவர்களிடம் தெரிவித்தனர். அதன்படி மாணவரின் இதயம் மற்றும் நுரையீரல் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 2 நோயாளிகளுக்கு அவை பொருத்தப்பட்டது. இதேபோல் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை ஜிப்மர் மருத்துவமனையிலேயே 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
No comments:
Post a Comment