தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்களுக்கு அங்கீகாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்களுக்கு அங்கீகாரம்

சென்னை, ஜூலை 28- 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்களுக்கு ரம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ரம்சர் உடன்படிக்கையின்கீழ் பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக அதாவது, ரம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ரம்சர் உடன்படிக்கை அல்லது ஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக பன்னாட்டு அளவில் ஏற்படுத்தப் பட்ட ஒரு உடன்படிக்கையாகும். 1971 ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாத்து ஈரநிலங்களின் செழுமையை பேணுதலே ரம்சர் உடன் படிக்கையின் குறிக்கோளாகும். பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும், குறிப்பாக பறவைகளின் புகலிடங்களையும் ரம்சர் அடையாளப்படுத்துகிறது.

இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதற்கும் அதனை பேணுவதற்கும் இந்த அரசு பல்வேறு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இயற்கை ஈரநிலங்களை அறிவுசார் வகையில் பாதுகாப்பதற்கு இந்த அரசு ஈரநிலங்கள் இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளது. தற்போது கிடைத்துள்ள ரம்சர் அங்கீகாரம், இந்த அரசின் முயற்சிக்கு கிடைத்த பயனாகும். ரம்சர் அங்கீகாரம் என்பது தேசிய மற்றும் பன்னாட்ட ஒருங்கிணைப்பிற்கும், இயற்கை வளங்களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து ஈரநிலங்களை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும்" 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment