ஜூலை18முதல் ஆகஸ்டு 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

ஜூலை18முதல் ஆகஸ்டு 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

புதுடில்லி,ஜூலை 3- நாடாளுமன்றம் ஆண்டுதோறும் 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 தொடர்கள் நடத்தப்படுகிறது. இதில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் நடத்தப் படுகிறது. 

இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18இல் தொடங் குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12இல் நிறைவடைவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. 

இந்த தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டு உள்ளது. கடந்த நிதிநிலை கூட்டத்தொடரைப் போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. அதேநேரம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபத் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என தெரிகிறது. 

இந்த தொடரில் சில முக்கிய நிகழ்வு களும் அரங்கேற உள்ளன. இதில் முக்கிய மாக, குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 18இல் நடைபெறுவதை தொடர்ந்து, அதில் வெற்றி பெறுபவர் நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் 25இல் புதிய குடியரசுத தலைவராக பதவியேற்கிறார். இதைப்போல ஆகஸ்டு 6இல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடை பெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர் ஆகஸ்டு 11இல் அடுத்த குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக்கொள்வார். டில்லியில் புதிய நாடாளுமன்ற கட்ட டத்தின் கட்டுமான பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. 

இந்த பணிகளை முடித்து இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத் தொடரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 

அந்தவகையில் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடை பெறும் கடைசி கூட்டத் தொடர் இந்த மழைக்கால கூட்டத் தொடராக இருக்கலாம் என கருதப் படுகிறது. 

இந்த மழைக்கால கூட்டத் தொடரை நடத் துவதற்கான ஏற்பாடுகளை நாடாளு மன்ற செயலக அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்

றனர்.

No comments:

Post a Comment