மேட்டூர் அணை : 1.33 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

மேட்டூர் அணை : 1.33 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்

மேட்டூர், ஜூலை 18 மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து 1.33 லட்சம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கருநாடக அணைகளில் இருந்து கடந்த ஒரு வாரமாக சுமார் 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக உபரிநீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவில் நீடித்தது. இதனால், ஒகேனக்கல் மெயினருவி, ஜவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் பாறைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பொங்கி பாய்ந்து மேட்டூர் அணை நோக்கி பெருக்கெடுத்துச் செல்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் (16.7.2022) காலை 10 மணியளவில், முழுகொள்ளளவான 120 அடியை எட்டி அணை நிரம்பியது. இதையடுத்து, உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,28,839 கனஅடியாக அதிகரித்தது. இதனால், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 1,10,000 கனஅடி வீதமும், மின் உற்பத்தி நிலையங்களின்  வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.


No comments:

Post a Comment