புவியில் உயிரினங்கள் கடவுளா படைத்தார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

புவியில் உயிரினங்கள் கடவுளா படைத்தார்?

பாணன்

தூசுகள் ஒன்றுசேர்ந்து கடுமையான அழுத்தத்தால் வெப்பமடைந்து அதன் மூலம் பெரு நெருப்புக்கோளகமாக உருவான விண்மீன்களில் ஒன்று நமது சூரியன், சூரியனுள் செல்ல வழியில்லாமல் அதன் ஈர்ப்பினால் அதனைச்சுற்றிகொண்டு இருக்கும் தூசுகள் மெல்லமெல்ல இணைந்து பலகோடி திடப் பொருட்களாக மாறி அந்த திடப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று மோதி இணைந்து கோள்களாக மாறியது. 

அவ்வாறு தோன்றிய பெரிய கோள் ஒன்றில் வேறு ஒரு பெரிய கோள் மோத அவ்வாறு மோதிய கோளும் அதன் சிதறல்களும் மீண்டும் ஒன்றிணைந்து உருவானதுதான் நமது பூமியும் நிலவும்.

நிலவு உருவான பிறகு பூமியின் சுற்றுப்பாதை நிலையானதாக மாறியது மேலும் இரவு பகல் மற்றும் புவியின் வெப்பத்திலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் நீர் நிலையானதும் நீர் நிலையான பிறகு பிற கோள்களில் இருந்து வந்த வெளிப்பொருட்களில் அமினோ அமிலங்கள் மற்றும் சேறும் சகதியும் நிறைந்த சதுப்பு நிலப்பகுதிகளில் ஒரு செல் உயிரினம் உருவானது. அங்கிருந்து உயிரினத்தின் தோற்றம் துவங்குகிறது. அதாவது இன்றிலிருந்து 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிரினக்கடிகாரத்தினை 24 மணி நேரம் என்று எடுத்துக்கொண்டால் அதில் கடைசி சில நொடிகளில் மட்டுமே மனிதன் உருவாகிறான், 

இதற்கு முன்பு இருந்த 24 மணி நேரத்தில் எண்ணிலடங்கா உயிரினங்கள் உருவாகி மறைந்துள்ளது. 

ஒன்றல்ல இரண்டல்ல  5 பெரிய பேரழிவுகளும் 25 சிறிய பேரழிவுகளும் நடந்துள்ளது, முதல் பேரழிவின் பெனிசெயிக் காலத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட அழிவுகள் நிகழ்ந்துள்ளன. 

இந்த அழிவுகளின் போது புவியில் தோன்றிய முதல் நுண்ணுயிர்களில் 99 விழுக்காடு முடிந்து போனது ஆழ்கடலில் மீதமுள்ள மிகச்சொற்ப நுண்ணுயிர்கள் அடுத்த பேரழிவுவரை தப்பித்தது, இப்படியாக டைனோசர் காலம் வரை தொடர்ந்தது, இறுதியாக கால்பந்து மைதானம் அளவு பெரும் விண்கல் ஒன்று மெக்சிகோவின் யுகட்டான் தீபகற்பம் பகுதியில் விழுந்தது. இதனால் டைனோசர்களின் யுகம் முடிந்துபோனது, யுகட்டான் தீபகற்பத்தில் விழுந்த விண்கல்லினால் விண்ணில் எழுந்த தூசுக்கள் முழுமையாக சூரிய ஒளியை மறைக்க பூமியின் வெப்பம் சராசரிக்கும் கீழ் சென்று பெருங்கடல்கள் மற்றும் நிலப்பகுதி முழுவதும் பனிக்கட்டியால் மூடப்பட்டது, 

இதனால் தரைக்கடியில் வாழும் நுண்ணுயிர்களில் உடலில் ஆக்ஸிஜன் உள்ளிட்டவைகள் மிகவும் குறைவாக கிடைக்கவே உயிரினத்தின் தகவமைப்புகளில் மாற்றம் ஏற்றப்பட்டது. இதன் காரணமாக முதல் மிகச்சிறிய பாலூட்டிகள் தோன்றியது, அதன் பிறகு ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் காரணமாக தொடர்ந்து பல்வேறு கட்டத்தில் மாற்றம் அடைந்து பல கிளைகளாக பிரிந்து இறுதியாக மனிதர்களின் தோற்றம் உருவாகிறது.

இவ்வளவு நீண்ட புவியின் வரலாற்றில் பல இலட்சம் வகையான உயிரினங்கள் தோன்றி சுவடே இல்லாமல் மறைந்து போயிருக்கின்றன. தொல்லெச்சங்களாக எஞ்சிய உயிரினங்களைத் தாண்டியும் ஏராளம் உயிரினங்கள் இங்கு வாழ்ந்து மறைந்திருக்கின்றன.

இந்த சிலநொடிகள் மனித வரலாற்றில் நாம் வாழும் ஒருசில மைக்ரோ செக்கெண்டுகளில் நாம் காண்பவற்றை (அரசுகள், பொருளாதார அமைப்பு, வளர்ச்சி,  தொழில்நுட்பங்கள்) நிலைத்தவையாகவும் மாற்றமுடியாத நிச்சயத்தன்மை கொண்டவை என்று நினைத்துக்கொள்கிறோம்.

புவியின் வரலாற்றில் ஏற்பட்ட பேரழிவுகளை கருத்தில் கொண்டால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிந்துபோகும் சாத்தியங்கள் உண்டு.

இங்கு கடவுள் கருமாந்திரம் என்ற ஒன்றுமே இல்லை. அதே போல் சில மிகவும் புத்திசாலித்தனமாக ஏதோ ஒரு அற்புதசக்தி என்று கதைவிடுவார்கள்,  இயற்கை உயிரற்றது அதற்கு எதனையும் காக்கவேண்டும் என்று தேவையில்லை. பூமியைக்கூட வினாடிகளில் அழித்துவிட்டு சூரியனைச்சுற்றி மீண்டும் தூசிகளாக மாற்றும் வலிமைகொண்டது.

இந்த சில மைக்ரோ வினாடிகளில் மனிதர்களின் முழு வாழ்நாள் காலம் அதன்முன் ஒரு பொருட்டே இல்லை என்பதும் நம்முடைய கற்பனையான எதிர்கால மனக்கோட்டைகள் எல்லாமே நொடியில் உடைந்துவிடக்கூடிய ஒரு நீர்க்குமிழி மீதுதான் மய்யம் கொண்டிருக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இங்கு எந்த பேராற்றலும் நம்மைக் காப்பதற்கு இல்லை. ஏனெனில் இயற்கை உயிரற்றது, அதற்கு திட்டமிட்டு எதனையும் காக்கவேண்டிய அவசியம் இல்லை.  தனது கடைசி உயிரை அணையாமல் பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்தமோ நெருக்கடியோ அதற்கு இல்லை. நாமில்லாமலும் அது சுழன்றுகொண்டேதான் இருக்கும்.

No comments:

Post a Comment