திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை


நீட் - விஸ்வகர்மா யோஜனா - பொருளாதார வீழ்ச்சி என்பவைதான்   ஒன்றிய பா.ஜ.க. அரசின் வேதனையான சாதனைகள்!

மக்கள் மீட்சி பெற வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை வீழ்த்தி, ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே ஒரே தீர்வு!

மக்களை விழிப்படையச் செய்வதுதான் விடியலுக்கான ஒரே வழி!

இன்றைக்கு அதிகாரத்தில் இருக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கல்வி, சமூகநீதித் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் மக்களை வீழ்ச்சியின் பக்கம் தள்ளுவதாகும். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி, ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே ஒரே தீர்வு! மக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தி, விடியலை ஏற்படுத்துவோம்   என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டு களுக்குமேல் நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் அதிகமான குளறுபடிகளுக்கும், குழப்பங்களுக்கும், ஆளுமையில் பஞ்சமே இல்லை!

திடீர் பணமதிப்பிழப்பு (Demonetization) அறிவிப்பு, 2000 ரூபாய் நோட்டுமூலம் கருப்புப் பண ஒழிப்பு என்று அறிவித்து, 10 ஆண்டு ஆட்சிப் பதவிக்காலம் முடி வதற்கு முன்பேகூட அதே ஆட்சியால் புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற்றது தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல; குழப்பத்தின் உச்ச வெளிப்பாடுகளும் அல்லவா?

எடுத்துக்காட்டுக்காக இது; இதுபோல் எத்தனையோ நிகழ்வுகளைக் கூற முடியும்!

மருத்துவத் துறையில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி ஆயுர் வேதத்தையே உயர்த்தித் தூக்கிப் பிடித்து, வேத காலத்திற்கு நாட்டை திரும்பவும் பின்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமென்பதற்காக பல அபத்த ஏற்பாடுகள்.

‘நீட்' கொடுமையால் வேதனைத் தீயில் வெந்து கருகும் நிலை!

‘நீட்' தேர்வு என்ற ஒன்றினைக் கொண்டு வந்து, மாநில உரிமைகளைப் பறித்து, நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று கூறி, அதில் நடைபெற்ற ஆள் மாறாட்டம், கேள்வித் தாள் குழப்பம், பல குறைபாடுகளை பல உயர் நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டிய பின்பும்கூட, ‘‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது'' என்பதாக முரண்டு பிடிப்பதால், பல நூறு மாணவர்கள் தற்கொலை, தமிழ் நாட்டில் மட்டுமல்ல, வடக்கே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெற்கே ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் உயிர்ப் பலி வாங்கும் பீடங்களாகி வரும் கொடுமையால் பெற்றோரும், மற்றோரும் வேதனைத் தீயில் வெந்து கருகும் நிலை ஏற்பட்டது.

விஷ உருண்டையின்மீது சர்க்கரைப் பூச்சு!

புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) என்ற மனு தர்மக் கல்விக் கொள்கை படமெடுத்தாடும் நிலையில், பள்ளிகளில் தொடர் தேர்வுகள், கல்லூரிகளில் சேர நெக்ஸ்ட் தேர்வு, ‘நீட்' அது ‘க்யூட்'  (Cuet)

 தேர்வு இப்படி ஒரே 'கல்விக் குமட்டலை' மாணவர்களிடையே பரப்புவ தோடு, கீழ்ஜாதியினர் எனப்படுவோர் பயிலுகின்ற பள்ளிகளை குலத்தொழில் செய்யப் பயிற்சி பெறவேண் டும் என்பதற்காகவே, குலத் தொழிலை கற்க 18 வயது நிரம்பியவுடன் - கல்லூரிக்குச் செல்லாமல், ‘‘விஸ்வகர்மா யோஜனா'' என்ற மனுதர்ம யோஜனாவை - அப்பனுடன் சேர்ந்து பிள்ளையும் குலத்தொழில் பயிற்சி செய்தால் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி குறைந்த வட்டியுடன் என்று விஷ உருண்டையின்மீது சர்க்கரையைத் தடவி, அளிக்கும் கொடுமை ஒரு பக்கம்!

இந்தியா முழுவதும் 2000 மருத்துவ இடங்கள் காலியாகி வீணாகும் வண்ணம் மாணவர் சேர்க்கை செல்லாது என்று கூறும் அவல நிலைமை இன்னொரு பக்கம்.

நாட்டில் ஒரு பக்கம் மருத்துவர் பற்றாக்குறை; மறுபுறம் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கக்கூடாது; ‘‘10 லட்சத்திற்கு 100 மாணவர்'' என்று விகிதாச்சாரத்தில் மட்டுமே சேர்க்கை என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் தாக்கீதுகள் போன்றவை  எல்லாம் மருத்துவப் படிப்பு வளர்ச்சிக்கா? தளர்ச்சிக்கா?

ஆன்மிக சிகிச்சைப் படிப்பாம் - உலகத்தவர் கைகொட்டி சிரிப்பர்

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோன்று  மருத்துவத்தில் ஆன்மிக சிகிச்சைப் படிப்பு புதிய முறை திணிப்பாம் - பிரார்த்தனை மூலமே நோயை குணப் படுத்தும் Spiritual Medical Education  என்ற அபத்தத் திட்டம்!

மதவாதிகளும், மந்திரவாதிகளும்தான் இனி மருத் துவப் பேராசிரியர்களாக(!) இருக்கும் தகுதி படைத்தவர் களாக இருப்பார்கள் போலும்! என்று உலகத்தவர் கைகொட்டி சிரிப்பர். 

என்னே கொடுமை! எவ்வளவு அபத்தம்!!

இதற்கு ஒரே தீர்வு (One Point Programme) வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை  வெற்றி பெற வைப்பதுடன், பா.ஜ.க. வை படுதோல்வி அடையச் செய்தால் மட்டுமே நாட்டினை மக்கள் விரோத ஆட்சியின் அலங்கோலத்திலிருந்து காப்பாற்றுவதன்மூலமே முடியும்.

வாக்காளர்களை விழிப்படையச் செய்தால்தான் ‘விடியல் ஏற்படும்' - இன்றேல் மக்களுக்கு எந்தப் பாது காப்பும் எத்துறையிலிருந்தும் கிடைக்காது என்பதே யதார்த்தம்.

நாட்டு நலனையே முன்னிறுத்தி, நாட்டைக் காப்பாற்ற முன்வாருங்கள்!

திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் எல்லாம் செய்யுங்கள். ஊடகங்கள் அச்சுறுத்தப்படு கின்றன; சமூக வலைத்தளங்கள் உண்மைச் செய்தி களைப் பரப்பி கடமையாற்றவேண்டும்.

புதிய விடுதலையை நாடு பெறவே தலைவர்கள் தங்களை முன்னிறுத்தாமல், நாட்டு நலனையே முன் னிறுத்தி, நாட்டைக் காப்பாற்ற முன்வாருங்கள்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.10.2023


No comments:

Post a Comment