பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்ட வீராங்கனைகளின் போராட்டம் அடுத்த கட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்ட வீராங்கனைகளின் போராட்டம் அடுத்த கட்டம்

அரித்துவார், மே 31- அரித்துவார் மக்கள் விடுத்த வேண்டுகோளையேற்று, பதக்கங் களை கங்கையில் வீசும் திட்டத்தை கடைசி நேரத்தில் மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத் துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப் பட்டது. இதனால் அவரைகைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28ஆம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத் துக்காக போடப்பட்ட கூடாரங்கள் எல்லாம் அகற்றப்பட்டன. இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் நேற்று (30.5.2023) மாலை 6 மணியளவில் வீசுவோம் என சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் ட்விட் டரில் தகவல் தெரிவித்தனர். மேலும், ‘‘இந்த பதக்கங்கள்தான் எங்கள் வாழ்வு, ஆன்மா. இவற்றை கங்கையில் வீசியபின் உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லை. நாங்கள் இந்தியா கேட் பகுதியில் சாகும்வரை உண்ணா நிலையில் இருப்போம்’’ என தெரிவித்தனர்.

‘‘காவல்துறையினர் தங்களை குற்ற வாளிகள் போல் நடத்துவதாகவும், ஆனால் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் பொதுக் கூட்டங்களில் எங்களை தாக்கிப் பேசுகிறார்’’ எனவும் அவர்கள் கூறினர்.

கங்கையில் பதக்கங்களை வீசும் முடிவு குறித்து அரித்துவார் எஸ்எஸ்பி அஜய் சிங் அளித்த பேட்டியில், ‘‘கங்கா தசராவை முன்னிட்டு அரித்துவாரில் புனித நீராட 15 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். இங்கு போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்கள் வர விரும்பினால் தாராளமாக வரலாம். அவர்கள் கங்கையில் பதக்கங் களை வீசினால் நாங்கள் தடுக்க மாட் டோம். அவர்களை தடுக்க வேண்டும் என எங்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை’’ என்றார்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகள், தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச நேற்று மாலை அரித்துவார் வந்தனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற அவர்களை, உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர். பல ஆண்டு கடின உழைப்புக்கு பின்வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசினால், 2 ஒலிம்பிக் பதக்கங்களையும், காமன்வெல்த் மற்றும் உலக வாகையர் பட்டப் போட்டி யில் வென்ற பல பதக்கங்களையும் நாடு இழக்கவேண்டியிருக்கும். அதனால் பதக் கங்களை கங்கையில் வீச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பதக் கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மே ளனத் தலைவர் மீது ஒன்றிய அரசு நடவ டிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்துள்ளனர்.


No comments:

Post a Comment