ஒரே வாரத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

ஒரே வாரத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டம்

 தூத்துக்குடி காவல்துறை ஆணையர் தகவல்

தூத்துக்குடி, ஏப்.30  தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண் டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட் டத்தில் கொலை வழக்குகளில் கைதான 7 பேர் மற்றும் கஞ்சா வழக்குகளில் கைதான 4 பேர் என மொத்தம் 11 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (20) என்பவர் கடந்த மாதம் 16 ஆம் தேதி வீட்டில் இருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக அவரது வீட்டிற்குள் புகுந்து கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (34), கயத்தாறு சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த அஜித்கண்ணன் (27), கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்களான வெயிலுமுத்து (44), ஜெயமணிகண்டன் (21), மாரியப்பன் (19), பாளையங் கோட்டை பகுதியை சேர்ந்த இசக்கி ராஜா (27),கிறிஸ்டோபர் மார்ட்டின் ராஜ் (21) ஆகியோரை கயத்தாறு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான 7 பேர் மீதும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்க்கு பரிந்துரை செய்தார்.

தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் உள்ள தனியார் உப்பள கொட்டகையில் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத மாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில், தூத்துக்குடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் (22), தூத்துக்குடி பி அண்ட் டி காலனி பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (22), தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்த அமிர்தலிங்கம் (64) ஆகியோரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய காவல்துறையினர் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்தனர்.

கஞ்சா வழக்கில் கைதான ராம்குமார், பிரதீப்குமார், சிவலிங்கம் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ஜூடி அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்க்கு பரிந்துரை செய்தார்.

இதேபோல, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட் அருகே காவல்துறை வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக சென்ற காரில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா கடத்திய வழக்கில் கைதான தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த சந்தனராஜை (22) குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கை யின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவண னின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொலை வழக்கில் கைதான 7 பேர் மற்றும் கஞ்சா வழக்குகளில் கைதான 4 பேர் என 11 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  உத்தர 

விட்டார்.

அவரது உத்தரவின்பேரில், 11 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடு பட்ட 42 பேர் உட்பட 249 பேர் குண் டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment