புதுக்கோட்டை தண்ணீர் தொட்டி கொடூரத்தில், சதி இருக்கக் கூடும்! ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் மட்டும் நீடித்திருந்தால்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 28, 2023

புதுக்கோட்டை தண்ணீர் தொட்டி கொடூரத்தில், சதி இருக்கக் கூடும்! ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் மட்டும் நீடித்திருந்தால்?

புதுக்கோட்டை, பிப்.28 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் தேவை’ என்ற மூன்று முக்கிய பிரச்சினைகளில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டை விளக்கி நடை பெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

பொன்னமராவதியில் தமிழர் தலைவர்!

பொன்னமராவதி அமர கண்டான் குளம் தெற்கு கரையில், 27.02.2023 அன்று மாலை 5 மணியளவில், நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மாவலி அனை வரையும் வரவேற்று பேசினார். ப.க. மாநில துணைத் தலைவர் அ.சரவணன் இணைப்புரை வழங்கினார். மாவட்ட தலைவர் அறிவொளி, மாவட்ட செயலாளர் வீரப்பன், மாநில இளைஞரணி துணை செயலாளர் குமார், மண்டல செயலாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர்கள் மாங்காடு மணியரசன், இரா.பெரியார் செல்வன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

யார் நமது எதிரிகள்?

ஆசிரியர் தமது உரையில், “எல்லா ஊர்களிலும் பொது மக்களின் வரவேற்பும், கூட்டணிக் கட்சிகளின் அரவணைப்பும் சிறப்பாக உள்ளது” என்றும், “அதற்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் கூறிவிட்டு, “ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்குக்கூட நிற்காத நாங்கள் ஏன் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்?” என்று பிறர் கேட்க நினைக்கும் ஒரு கேள்வியை தானே கேட்டுவிட்டு, “யார் நமது எதிரிகள் என்பதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது எங்களது கடமை! அதற்காகத்தான் இந்தப் பயணம்” என்று பதிலையும் சொன்னார். தொடர்ந்து தனக்கு இடது பக்கம் அமர்ந்திருந்த பேரூராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அழகப்பன் அவர்களை பாரம்பரியம் மிக்க தி.மு.க. கொள்கைக் குடும்பம் என்று அறிமுகம் செய்வித்து, “நூறாண்டுகளுக்கு முன்னால் இது போன்ற காட்சிகளை காணமுடியுமா?” என்றொரு ஆழமான கேள்வியை எழுப்பினார். “ஆரிய மாடல்; குஜராத் மாடல்; சனாதன மாடல் என்கிறார்களே, அந்த மாடலில் பெண்களின் நிலை என்ன?” என்று கேட்டு, “திராவிட இயக்கம் சமூக நீதியுடன், பாலியல் நீதியையும் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார். நமது எதிரிகள் யாரென்பதை அடை யாளப்படுத்த முனைவந்து, 1925 ஆம் ஆண்டில் சுய மரியாதை இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆகிய மூன்று இயக்கங்கள் தோன்றியதையும், முதலிரண்டும் முற்போக்குக் கருத்துகளை கொண்ட தாகவும், ஆர்.எஸ்.எஸ். மதவெறி இயக்கமாக உருவா னதையும், ஆர்.எஸ்.எஸ். தான் நமது எதிரி என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் சொன்னார். சுயமரியாதை இயக்கம்பற்றிக் குறிப்பிடும்போது, “தான் எரிந்து பிற ருக்கு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவத்திகள் கருஞ்சட்டைப் படையினர்” என்றார் அழுத்தம் திருத்தமாக.

சனாதன மதத்தை ஏன் ஏற்க வேண்டும்?

தொடர்ந்து, “மிகவும் நெருக்கடிக்கிடையில் புரட்சி யாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுஸ்மிருதி வரவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை” என்றார். ”ஆர்.எஸ்.எஸ்., விஷ உருண்டைக்கு தேன் தடவி கொடுக்கும்” என்றும் எச்சரித்தார். இந்த நிலை இன்றும் நீடிப்பதை, சில மாதங்களுக்கு முன்பு காசியில் சாமி யார்கள் கூடி, “2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தி யாவின் தலைநகரம் காசிதான் - டில்லி அல்ல என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் இருக்காது. மனுதர்மம்தான் அரசமைப்புச்  சட்டமாக இருக்கும்” என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை எடுத்தியம்பி, வரப்போகும் ஆபத்தை உணர்த்தினார். அதையொட்டி சில கருத்து களைச் சொன்னார். அதாவது, மனிதனை தொட மாட்டேன் என்கிறவன், மாட்டைக் கட்டிப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டினார். “இதுதான் சனாதன மதம் என்றால், அதை ஏற்க முடியுமா? நாங்கள் சொல்வதில் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று அளவற்ற மனித நேயத்துடனும், திறந்த மனதுடனும் பேசினார். இந்த காட்டுமிராண்டித்தனத்திற்குக் காரணம் ஜாதி தானே? என்றொரு காட்டமான கேள்வியை எழுப்பினார். “இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களிடம் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுதான் இந்த பயணத்தின் நோக்கம்” என்று எவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொண்டு இருக்கிறோம் என்பதை விளக்கினார். 

தொடர்ந்து மத்திய பிரதேச பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, “தன்னை நரபலி செய்துவிடுவார்கள். தமிழ்நாடுதான் பெண்கள் வாழ பாதுகாப்பான நாடு. ஆகவே, என்னை மத்தியப் பிரதே சத்திற்கு அனுப்ப வேண்டாம்.” என்று சொன்னதை திராவிட மாடலின் மேன்மைக்கு ஆதாரமாகக் கூறினார். ஒன்றிய சுகாதாரத்துறை தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை எளிய முறையில் விளக்கினார். மேலும் அவர், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது கொடூரமானது, நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இன் னும் உறுதியான நடவடிக்கை தேவை என்று கூறுவது சரி, அதை விடுத்து, அதை வைத்து அரசியல் செய்யப் படுகிறது. அண்ணாமலைகள் மட்டுமல்ல, ஆளுநரும் பேசுவதைப்  பார்த்தால், இது தமிழ்நாடு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட ’சதி’யாக இருக்குமோ என்ற பார்வையிலும் விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும்” என்று ஒரு முக்கியமான அய் யத்தை மக்கள் முன்வைத்தார். இறுதியாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் செழுமை பெற, வறுமை ஒழிய, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்ட, “தமிழன் கால்வாய் எனும் சேது சமுத்திரத்திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டும். அதற்கான தெளிவை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் விளக்கி, ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!” என்று தனதுரையை நிறைவு செய்தார். 

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் பொன்னமராவதி பேரூ ராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வெங்கடேசன், தி.மு.க.ஒன்றிய துணை செயலாளர் பழனிச்சாமி, சி.பி.அய். மாவட்ட செயலாளர் செங்கோடன், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் பக்ருதீன், சி.பி.அய்.மாநில நிர்வாக குழு உறுப்பினர் இராசு, ம.ம.க.பேரூர் கழக தலைவர் அப்துல் ரசாக், தி.மு.க. திருமயம் ஒன்றிய பொறுப்பாளர் முரளி சுப் பையா, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், வி.சி.க.நகர செயலாளர் மலை.தேவேந்திரன், பொன்னமராவதி ப.க.பொறுப்பாளர் கருப்பு சட்டை தென்னரசு, வி.சி.க. மாவட்ட செயலாளர்கள் பாக்கியராஜ், சசி கலைவேந்தன்,  ம.தி.மு.க.ஒன்றிய செயலாளர் முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை செய லாளர் ஆசைத்தம்பி நன்றி கூறினார். 

நிகழ்வு முடிந்ததும் ஆசிரியர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பின்னர் அங்கிருந்து, கருஞ்சட்டைப் படையி னர் முன்பின்னாக அணிவகுக்க, சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார். சிவகங்கையில் சிறப்பான ஏற்பாடுகளுடன், எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது.

சிவகங்கையில் தமிழர் தலைவர்!

சிவகங்கை அரண்மனை முன்பு நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இர.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெ.ராசாராம் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல தலைவர் கா.மா.சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்ட துணைத் தலைவர் செ.தன பாலன், மாவட்ட துணை செயலாளர் வைகை ஆ.தங்க ராசா, நகர் தலைவர் மணிமேகலை சுப்பையா, மாவட்ட ப.க. செயலாளர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

98 ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் பெற்ற வெற்றி!

ஆசிரியர் பேசும் போது, “சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை உ.சுப்பையா அவர்களின் வீரவணக்க நிகழ்ச்சிக்கு கரோனா காரணமாக வரமுடியாமல் போயிருந்தாலும் இன்று அவரது பெயரில் அமைந்துள்ள மேடையில் பேசுவது மனநிறைவைத் தருகிறது” என்று தொடங்கினார். தொடர்ந்து, “இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மாட்டைக் கட்டிப்பிடிக்கிறேன் அப்படிங்கறான். மனு சனை தொட்டா தீட்டு என்கிறான். அப்படிப்பட்டவர் களுக்கு அறிவு கொளுத்தத்தான் இந்த பயணம்” என்றார் எடுத்த எடுப்பிலேயே. “நான் காங்கிரசில் சேர்ந்தது சமூக நீதிக்காகத்தான்! காஞ்சிபுரம் மாநாட் டிலிருந்து துண்டை தோளில் உதறிப் போட்டுக் கொண்டு வெளியேறியதும் சமூக நீதிக்காகத்தான்!” என்று நமக் கெல்லாம் அறிவு கொளுத்திய பெரியார் சொன்னதை நினைவு படுத்தி, இன்றைக்கு காங்கிரசில் பெரியார் வலியுறுத்திய சமூக நீதிக்கான சட்டத்திருத்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, பெரியாரின் கோரிக்கை 98 ஆண்டுகளுக்கு பிறகும் வெற்றி பெற்றுள் ளதை பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், ஆழமாகச் சென்று “பா,ஜ,க, தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.தான்'' என்பதைச் சொல்லி, “டில்லியில் பசுமாட்டுக்காக பச்சைத் தமிழர் காமராசரை வீட்டுடன் கொளுத்த முயன்ற கூட்டம்தான் ஆர்.எஸ்.எஸ்.'' என்று ஆர்.எஸ்.எஸ்.சின் உட்கிடக்கையை அம்பலப்படுத்தினார்.

சமூக நீதி கண்காணிப்புக் குழு!

தொடர்ந்து சமூக நீதி, அதன் பாதுகாப்பு, அதற்காக திராவிடர் இயக்கம் செய்த அளப்பரிய பணிகளை பட்டியலிட்டு, “தமிழ்நாடு சமூக நீதியுடன் பாலியல் நீதியையும் செயல்படுத்தி வருவதோடு, சமூக நீதி ஏட்டுச்சுரைக்காயா? இல்லையா? என்பதை உறுதிப் படுத்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் தலைமையில் சமூக நீதி கண்காணிப்புக் குழு ஏற் படுத்தப்பட்டுள்ளதை நினைவுபடுத்தி, இப்படியொரு தனித்த ஏற்பாடு, வடபுலத்தில் உண்டா? குஜராத் மாடலில் உண்டா? என்ற பதிலற்ற வினாவை எழுப் பினார். மேலும், “ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக் கல்வித் திட்டம் மட்டும் நீடித்திருந்தால் இன்று ஏற்பட் டுள்ள கல்விப் புரட்சி வந்திருக்குமா? என்றொரு வலி மையான கேள்வியை எழுப்பி, அதற்கு எடுத்துக்காட்டாக சில நாட்களுக்கு முன்னர் வந்திருந்த 'தினமணி' நாளி தழை கையில் வைத்துக்கொண்டு ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை படித்துக் காட்டினார். அதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருப்ப தைச் சொல்லி, திராவிட மாடலின் சிறப்புக்கு இதைவிட சான்று தேவையா? என்றார். இது ஆயுதம் ஏந்தாத அறிவுப்புரட்சி என்றார்! மக்கள் புரிந்து கொண்டு அந்த சாதனையை கைதட்டல்கள் மூலம் அங்கீகரித்தனர். அந்தக் கல்விப் புரட்சியில் பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகளை பட்டியலிட்டார். திராவிட மாடல் ஆட்சி யின் தொடர்ச்சியாக இப்போதிருக்கும் அரசு, பெண்கள் அரசுக்கல்லூரியில் பயின்றால் மாதம் ரூ.1,000/- தருவதை பெருமிதத்தோடு எடுத்துரைத்தார். இதையே பளிச் சென்று புரியவைக்க, “அஞ்சு பொண்ண பெத்தா 'அரசனும் ஆண்டியாவான்' என்று சொல்வார்கள். இந்த திராவிட மாடல் ஆட்சியில் அஞ்சு பெண்களும் மாதா மாதம் 1000 ரூபாய் பெற்று படித்து முன்னேறலாம்” என்றார். கொஞ்ச, நஞ்ச சந்தேகமும் நீங்கினர் மக்கள்! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரைப் பற்றி குறிப்பிடத் தவறவில்லை ஆசிரியர். தொடர்ந்து சேது சமுத்திரத்திட்டம் தொடர்பாக திராவி டர் கழகத்தின் நிலைப்பாட்டைச் சொல்லி தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன், நகர்மன்ற துணைத்தலை வர் ம.கார் கண்ணன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் சேதுராமன், மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் சண்முகராஜன், வி.சி.க.மாவட்ட துணை செயலாளர் சுடர்மணி, அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் பெரியார் ராமு, ம.ம.க.நகர தலைவர் சித்திக் முகம்மது, இ.தே.லீக் மாவட்ட செயலாளர் ஷேக் முகமது,  நகர்மன்ற உறுப்பினர் அயூப் கான் மாவட்ட தொழி லாளரணி அமைப்பாளர் வேம்பத்தூர் செயராமன், மரு.இ.மலர்க்கன்னி, சி.கிருஷ்ணவேணி,   சிவகங்கை மாவட்ட மேனாள் தலைவர் மறைந்த உ. சுப்பையா மகள் பொறி.கீதப்பிரியா, மருமகன் பொறி.ரவிச்சந்திரன், மகன் பொறியாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அமைப்பாளர் கீழப் பூங்குடி முருகேசன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment