நமது மூத்த முதுகுடிமக்கள் ("Super Agers") அறிக! அறிக!! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

நமது மூத்த முதுகுடிமக்கள் ("Super Agers") அறிக! அறிக!! (2)

 நமது மூத்த முதுகுடிமக்கள் ("Super Agers") அறிக! அறிக!!   (2)

மூத்த முதுகுடிமக்கள் என்று ஆய்வில் தரப்படுத்தப்பட்டுள்ள  - 'Super Agers' என்ப வர்கள் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள முக்கிய காரணிகளாக அவர்கள் ஆய்வின்மூலம் கண்டறிந்தவைகள் நான்கு ஆகும்.

முதலாவது,

பொதுவாகவே, வயது ஏறினாலும்கூட எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும்படி அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மிக நல்ல பழக்கமாகும் - சரியான வாழ்க்கை முறையும்கூட!

சுறுசுறுப்பாக   உடல் அவயங்கள் அன்றாடம் இயங்கிக் கொண்டே இருந்தால், அதன்மூலம் நாம் சுவாசிக்கும் உயிர்க் காற்று (பிராண வாயு) அதிகமாகும். வயதுக்கேற்ற உடற்பயிற்சிகள் நமது இதயம், தசைகள், முதலியவற்றை பலப்படுத் துவதுடன் நாம் அந்த வயதில் அடிக்கடி கீழே தடுமாறி விழுவதற்குரிய வாய்ப்புகளைப் பெரிதும் குறைக்கின்றன.

தினமும்   உடலுக்கேற்ற மென்மையான உடற் பயிற்சிகள் அவசியமானதாகும். (பெரும்பாலும் நடைப் பயிற்சியே போதுமானதாகும்).

நமது உடல் அளவு பொதுவாக எவ்வளவு இருந்தால் நல்லது - பாதுகாப்பானது என்பதை அறிய  ''BMI-Body Mass Index'' என்பதின்படி பார்த்துக் கொள்வது நல்லது.

உடல் எடையும்கூட நமக்கு முக்கியம். அதிக கூடுதல் எடை விரும்பத்தக்கதல்ல. மூத்த முது குடிமக்கள் இதனைப் பூர்த்தி செய்தவர்கள் ஆவார்கள்.

இரண்டாவது, 

ஒவ்வும் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம், மனதிற்கான வேலைகளும் முக்கியம் - மூளைக்கும் பயிற்சி தருவது முக்கியமல்லவா? அதுவே பிரச்சினைகள் வரும்போது எதிர் கொண்டு தீர்வு காணும் நல்ல மனவள உறுதிப் பயிற்சியாகும்!

'சொடுக்கு' (Sudoku) என்ற கணிதப் பயிற்சி சரியாக வரவில்லையே என்று சில முதுமை யாளர்கள் கவலைப்படுவதுண்டு. அதுவில்லா விட்டால் மற்றவை உண்டே  - ஏன் கவலைப் படுகிறீர்கள்? உங்களுக்குப் புதிதாக, அரியதாக உள்ள ஒரு விடயம் குறித்து மனதால் ஆய்வு செய்து அறிந்துகொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டுப் பாருங்கள், புதியன புலப்படும். பழைய உறுப்புகள் -  மூளை போன்றவை பலமும் பெறும். மூளையைத் தூண்டும் அதிக வேலையைச் செய்ய புத்தெழுச்சியும் மூளைக்குக் கிடைக்கும். கிடைக்க வேண்டும்.

மூன்றாவது,

மூத்த முதுகுடிமக்கள் தனிமையில் இருப் பதைத் தவிர்த்து மற்றவர்களுடன் கலகலப்புடன் பழகும் வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்திக் கொள் ளுகிறவர்களானால், அதுவே அவர்களை நினை வாற்றல் மிக்கவர்களாக்கிட பெரிதும் துணைக் கருவிபோல உதவக் கூடும்!

டாக்டர் ரோகல்ஸ்கி கூறுகிறார்: "மற்றவர்கள் மூளை சுருக்கமாகி விடுகிறது; இவர்களின் மூளையோ விரிவடைகிறது" என்பதை ஆய்வின் மூலம் கூறுவதுடன் - "வயதானவர்களுக்கு வரும் சுருக்கமும், குறைவும் இத்தகையவர்களுக்கு பெரிதும் பல ஆண்டுகள் கழித்தே வருகிறது" என்றும் கண்டறிந்தார்.

உதாரணமாக 80 வயது மூத்த முதுகுடி மக் களுக்கு 50, 60 வயது அளவுக்குள் தேய்மானமாவது (ஓர் உதாரணத்திற்கு புரிவதற்காக இப்படிக் கூறுகிறோம்) குறைவான அளவுதான்!

'எக்னோமோ நியூரான்ஸ்' (Economo Neurons)  என்பது நிறையக் கிடைக்கின்றன  - சமூக கலந்துரையாடல் நடப்புகளை ஊக்கப்படுத்த இவை பெரிதும் உதவுகின்றன. இப்படிப்பட்ட மூத்த முதுகுடிமக்கள் இறந்த பிறகு அவர்களது மூளையைப் பற்றி ஆய்வு செய்தால், அதில் மேற்சொன்ன 'எக்னோமோ நியூரான்ஸ்' 4, அல்லது 5 மடங்கு - மற்ற 80 வயதுக்காரர்களை விட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது! அதனால்தான் நீங்கள் அதிகமாக மக்களோடு கலந்து சமூகப் பணி செய்து சுறுசுறுப்புடன் இயங்கி வந்தால், உங்களை அல்ஷைமர்ஸ் என்ற மறதி நோய் தாக்காது என்றும் கூறப்படுகிறது! இது வேடிக்கையாகக் கூறப்படுவதல்ல ஆய்வு மூலம் டாக்டர் ரோகல்ஸ்கி கண்டறிந்த உண்மையாகும்.

நான்காவது,

இது பெரிதும் மேலை நாட்டு அனுபவம் என்றாலும், நம் நாட்டிலும் அப்பழக்கம் வெகுவாக பரவி விட்டதால் மிதமாக குடிப்பவர்களுக்கு மறதி நோய் தள்ளி வரலாம் அல்லது தவிர்க்கப்படலாம். மற்றவர்களைக் காட்டிலும் 23 சதவிகிதம் இத்த கையவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு (மறதி நோய் தவிர்த்தல்) என்பதும் கூட அவர் கூறுவதுவே! 

பொது உண்மை - எதுவும் அளவோடு இருப்பது நல்லதுதானே!

கடைசியானது நமக்கு முக்கியமா? மற்றவை களை மூத்த முதுகுடி மக்கள் பட்டியலில்  'Super Agers'  ஆகிவிட்ட 80 வயதுக்கும்  மேற்பட்டோரே - முயற்சி செய்யுங்கள்!

அப்படி ஒரு சங்கம் வைக்க வாரீர்களா? நல்லது, வரவேற்போம்.

No comments:

Post a Comment