பந்தை அடிக்க முடியவில்லை என்றால் காலை அடிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

பந்தை அடிக்க முடியவில்லை என்றால் காலை அடிப்பதா?

தமிழ்நாட்டின் ஊடகங்களை தமிழ்நாட்டு செய்தித் தொடர்புத் துறை கட்டுப்படுத்துவதாக பா.ஜ.க. தமிழ்நாட்டு தலைவர்  போலியான தகவலை பொது இடத்தில் வைத்துள்ளார். 

எந்தத் தொலைக்காட்சிக்கும் அரசு தரப்பில் பெரும்பாலும் விளம்பரங்கள் தரப்படுவதில்லை. இதழ்களுக்கு மட்டுமே டெண்டர் தொடர்பான விளம்பரங்கள் தரப்படுவது வழக்கம். தமிழ்நாட்டை ஆளும் கட்சி ஊடகங்களை அடக்கி ஆள்கிறது என்றால்  வடகிழக்கு மாநில ஊடகங்களை யார் அடக்கி ஆள்வது?

வடகிழக்கில் உள்ள 7 மாநிலத்திற்கும் பிரைட் ஈஸ்ட் எண்டர்டெய்மெண்ட் என்ற செய்தி நிறுவனம் தான் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனம்.  அத்தொலைக்காட்சி நிறுவனமும், அதன் கிளைகளும் தான் நாகாலந்து, மணிப்பூர், மேகாலயா, அசாம், திரிபுரா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் என விரிந்து உள்ளன. இதன்  உரிமையாளர் பெயர்  ரிங்கி பையுன் சர்மா. இவர் அசாம் மாநில முதலமைச்சர் ஹெமந்தா பிஸ்வார் சர்மாவின் மனைவி ஆவார்; இவரும், மகராட்டிரா மாநில நிழல் முதலமைச்சர் போல் செயல்படும் அம்ருதா பட்னாவிஸ் (மகாராட்டிரா மாநில துணை முதலமைச்சரின் மனைவி) போன்றுதான்! 

அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், பணமிருப்பவர்கள்தான் சேனல் நடத்துகிறார்கள். அங்கே ஒட்டு மொத்த ஊடகங்களும் ஆளும் பா.ஜ.க.வின் கைகளில் தான் உள்ளன. அதுமட்டுமல்ல, இந்தியாவில் கிட்டத்தட்ட   ஹிந்தி பெரும்பான்மை ஊடகங்கள் அனைத்தும் பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பு வெளியீட்டாளர்களாகவே உள்ளன. 

2015 ஆம் ஆண்டு மும்பை "மேக் இன் இந்தியா" கண்காட்சி அரங்கத் தீவிபத்து முதல்  - 2019 டில்லி கலவரம் மற்றும் சமீபத்திய குஜராத் மோர்பி பால விபத்துவரை மக்களிடம் கொண்டு செல்லாமல் பார்த்துக்கொண்டன அல்லது அரசு எதை வெளியிட வேண்டும் என்று சொல்கிறதோ அதைத்தான் அவை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.  

2015 முதல் 2022 வரை ஒன்றிய அரசின்  செய்தி மற்றும் விளம்பரத்துறை, வானொலி, இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு விளம்பரமாக  836 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. அதில்   பல கோடி ரூபாய்களுக்கு யாருக்கு எவ்வளவு தந்தோம் என்ற விவரங்களே இல்லாமல் உள்ளது.  'மிஸ்ஸலென்ஸ்' (Miscellaneous) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்கு தங்களுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட  கொடுத்த கோடிகள் இவை அனைத்தும் பொது வெளி செலவில் உள்ளனவாம்; ஒன்றிய அரசினை நோக்கி இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி உள்ளன. (விவரம் அருகில் காண்க)

 இவ்வளவு அழுக்குகளைத் தன் முதுகில் சுமந்து வைத்துள்ள ஒரு கட்சி -  அதன் மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்புத்துறைமீது அபாண்டப் பழி சுமத்துகிறார். தவறு நடந்தால் சான்றுகளோடு புகார் தரலாமே; அதை விட்டு விட்டு  செய்தியாளர் சந்திப்பில் உளறிக்கொட்டுவதும், வசை பாடுவதும் எந்த வகை ஜனநாயகப் போக்கு?

செய்தியாளர்களை பேட்டிக்கு அழைப்பது; அதற்குப் பின் செய்தியாளர்கள் கேள்வி எழுப் பினால், பதில் சொல்ல சரக்கு இல்லாத கையறு நிலையில், "பந்தை அடிக்க முடியவில்லையெனின் எதிர் அணி விளையாட்டுக்காரரின் காலை அடி" என்னும் கோழைகளாக நடந்து கொள்வது - அசல் வெட்கக் கேடு!

ஊடகக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்! விளம்பரம் தேடுவதற்காகவே எதையும் பேசும் விளம்பர வியாதி பேர் வழிகளுக்குத் துணை போக வேண்டாமே!

No comments:

Post a Comment