- பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
தவத்தமிழ் இனத்தின் வழிகாட்டி
தாயகத் தமிழர் பெருந்தகையே!
குவலயம் ஈடில் நம்பெரியார்
கொடைச்சம நீதிக் காவலரே!
உவப்புடன் மாற்றார் மறுப்பினையும்
உள்ளம் ஏற்றுத் திருத்துதற்கே
இவருக்கிணை இவரே இவரைப்போல்
எவருளர்? அறம்வான் வீரமணி!
தித்திக் கத்தான் சொல்லாடல்
திசைகள் ஏற்கும் சிந்தனைக்கோ
மத்தில் தயிரைக் கடைந்தேதன்
மதிகை வெண்ணெய் தானெடுத்தே
ஒத்தநல் இயல்புப் பக்குவத்தால்
உணவில் நெய்யைக் கலத்தலைப்போல்
வித்தகக் கருத்தை மக்கட்கே
வியப்புடன் ஊட்டிவெல் வீரமணி!
தொண்ணூற் றகவைத் தோன்றலேஎம்
தொண்டர் தி.க. தோழர்களின்
எண்ணம் வாழும் பெருந்தகையே!
ஏறுபோல் உம்நடை இன்றுமுள!
அண்ணலே அறிவா யுதம்கோடி
அரிமாத் திராவிடர் கழகப்படை
உண்மைப் பெரியார் கோட்பாடே
உயர்த்திய பெரும் வாழியரோ!
துணிவில் எல்லைக் கோடாவார்
தொகைதொகை ஆற்றல் கருவாகி
பணிபுகும் பண்பின் படைப்பாவார்
பழுமரத் தைப்போல் கொடையாவார்
கணினிதேர் உலகின் நடையாவார்
கண்ணொளி வழங்கும் பயனாவார்
அணிஅணி வகுத்தே தமிழ்நாட்டின்
காப்பரண் தமிழர் தலைவரேதான்!
தந்தை பெரியார் உயிரெழுத்தாய்
தகத்தக நெருப்புப் புதுமுனைப்பாய்
எந்தை உணர்த்திய சமநீதி
ஏந்திய கொள்கைக் கொடிஉயர்த்தும்
சந்தனக் காட்டின் தமிழ்மணமாய்
சங்கொலி முழங்கும் தமிழர்களின்
விந்தைத் தொண்ணூற் றகவையிலும்
வீரநம் மணியார் விடிவிளக்கே!
வருங்கா லத்தும் இளமையுடன்
வாகை வாழ்வியல் நூற்றாண்டு
தரும்நல் வாய்ப்புக் காலமிகும்
தகுதியாய் உடல்நலம் நன்றாக
இருந்தமிழ் போல என்றென்றும்
எம்முயிர் எல்லாம் உம்உயிராய்
அருளுக இயற்கை ஆயுளோங்க
அகிலத் தமிழர் வணங்கு துமே!
பகுத்தறி வுக்கோர் பகலவனே
பதர்போல் மூட நம்பிக்கை
வகுத்தறி வில்லா வம்புகளை
வண்டமிழ் நாட்டில் விரட்டித்தான்
வெகுமட மக்கள் திருந்துவகை
விதிசமைத் தொழுகும் ஈடில்லா
தகுதிக் கெல்லாம் தகுதிதரும்
தமிழர் தலைவர் வாழியரோ!
No comments:
Post a Comment