தமிழர் தலைவரும் அண்ணாமலை நகரும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

தமிழர் தலைவரும் அண்ணாமலை நகரும்!

பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அண்ணாமலை நகரில் இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மீது அலாதியான அன்பும் உண்டு; ஏனெனில், தான் பயின்ற பல்கலைக்கழகம் அல்லவா! அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இல்லையெனில் நான் படித்திருக்க வாய்ப்பே இல்லை" என்று ஆசிரியர் அவர்களே பலமுறை கூறியிருக்கின்றார்.

ஆசிரியர் தொடக்க காலத்தில் நாள்தோறும் கடலூர் ளி.ஜி. ரயில் நிலையத்திலிருந்து, சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு 'பாசஞ்சர்' ரயிலில் வந்து பயின்றதாகக் கூறியுள்ளார். அதிலும், ரயில் நிலையத்திற்கு, ரயில் பாதை வழியாக கொஞ்ச தூரம் நடந்து வந்து ரயில் ஏறியதாகவும் கூறியுள்ளார். இக்கட்டுரையில் இதன் தொடர்பான ஒரு செய்தி உள்ளது. பிறகு, அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் புலவர் கோ.இமயவரம்பன், கந்தசாமி (இவர் பின்னாளில் நாமக்கல் வேலூர் கந்தசாமி கவுண்டர் கல்லூரியில் பணிபுரிந்தார்) போன்ற மாணவர்களுடன் விடுதியில் தங்கிப் படித்ததாகக் கூறியுள்ளார். அப்பொழுதுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் "திராவிடர் மாணவர் கழகம் அமைத்து பெரியார் கருத்துகளைப் பரப்பினர். அப்பொழுது திராவிடர் மாணவர் கழக மாநிலத் தலைவர் ‘டார்ப்பிடோ' ஏ.பி.சனார்த்தனம், ஆவார்.

ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் இயக்கப் பணி செய்துகொண்டே படித்து, வகுப்பில் முதல் மாணவராக தங்கப்பதக்கம் பெற்று, பட்டம் பெற்றார். தன் வகுப்பில், தன்னருகில் அமர்ந்திருந்தவரும் பிற்காலத்தில் சிதம்பரத்தில் முன்னணி வழக்குரைஞராகவும், தி.மு.க. உறுப்பினராகவும் விளங்கிய வேதநாயகம் என்கிற தில்லை மறைமுதல்வன் அவர்களையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை பேராசிரியாகப் பணியாற்றிய ஏ.வி.ரெங்காச்சாரி அவர்களைப் பற்றியும் என்னிடம் இன்றளவும் விசாரிப்பார். படிக்கும் பொழுது எனக்கும், ரெங்காச்சாரிக்கும்தான் போட்டி - என்று ஆசிரியர் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, என்னை மேல வீதியில் சந்தித்த அந்த ஏ.வி.ரெங்காச்சாரி அவர்கள், "உங்கள் தலைவர் எப்படி உள்ளார்?" என்று கேட்டார்கள்.

ஆசிரியர் அவர்கள் இங்கு மாணவராகப் படிக்கும் பொழுது, ஆசிரியர், புலவர் இமயவரம்பன், கந்தசாமி ஆகியோர் அண்ணாமலை நகரில் இருந்து, சிதம்பரம் சின்னக் கடைத் தெருவில் இருந்த மாவட்டத் தலைவர் கு.கிருட்டினசாமி அவர்கள் வீட்டுக்கு நடந்தே வருவார்கள் என்று கூறியுள்ளார். இன்றைய அளவில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அப்படி வரும் வழியில் தெற்கு வீதியிலுள்ள, கழகத் தோழர், பின்னாளில் நகரச் செயலாளர் டி.கே.மூர்த்தி அவர்களது 'சலூன்‘ கடையில் அமர்வோம், பேசிக் கொண்டிருப்போம் என்று கூறியுள்ளார்.

ஆசிரியர் அவர்கள் சட்டப் படிப்பிற்கு சென்னை சென்ற பின், அண்ணாமலை நகரில், தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பியவர்கள், வாழப்பாடி கூ.இராமமூர்த்தி, அதன் பிறகு இன்றைய தமிழறிஞர் பொற்கோ, புள்ளவராயன் குடிகாடு வ.பாலகிருட்டினன் (இவர் மன்னை நாராயணசாமியின் மருமகன்) ஆவார்கள்.

அதன் பிறகுதான் நான் 1966ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.யூ.சி. சேர்ந்தேன். நண்பர் வ.பாலகிருட்டினன், அரியலூர் நா.தங்கவேலு, வாழப்பாடி சுகுமார், அக்ரி ஆறுமுகம் ஆகியோர் உதவியுடன் மீண்டும் திராவிடர் மாணவர் கழகம் புதுப்பிக்கப்பட்டது.

திராவிடர் மாணவர் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் - பலமுறை அண்ணாமலை நகர் அஞ்சல் நிலையம் அருகில் திருவேட்களத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தந்தை பெரியார் ஆசிரியர் உள்பட அன்றைக்கிருந்த அனைத்து நம் கழக சொற்பொழிவாளர்களையும் அழைத்தோம். ஆசிரியர் அவர்களை திராவிடர் மாணவர் கழகம் சார்பில், 05.2.1972 ஆம் ஆண்டு அழைத்து பொதுக்கூட்டம் நடத்தினோம். 

ஆசிரியர் கடலூர் வந்து தன் இல்லத்தில் தங்கிவிட்டு, ரயில் மூலம் (அதாவது தான் படித்த காலத்தில் தினசரி வந்த ரயிலில்) மாலை 4:00 மணிக்கு வந்தார்கள். நான் ரயில் நிலையம் வந்து குதிரை வண்டியில் அழைத்து சென்றேன்.

இன்னொருமுறை, வாழப்பாடி சுகுமார் அன்றைய ‘ணி-2' விடுதிச் செயலாளர் அன்பானந்தம் ஆகியோர் முயற்சியால், விடுதி விழாவுக்கு (பிஷீstமீறீ ஞிணீஹ்) ஆசிரியர் வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பக வெள்ளி விழா நிகழ்ச்சியின் பொழுது. ஆசிரியர் அவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்க வைத்தேன். அங்கிருந்த பொழுது, காலை சிற்றுண்டி உண்ண என் வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது, வழியில் இருந்த பல்கலைக்கழகக் ‘கோகலே’ மண்டபத்தைப் பார்த்து, "இங்கதான் கூட்டங்கள் நடைபெறும்; நாங்கள் எல்லாம் பேசுவோம்” - என்று கூறினார். புகைப்படம் எடுக்கும் சிவக்குமார் உடன் வந்துள்ளாரா? “கோகலே மண்டபம் முன் நான் தனியாக நின்று படம் எடுக்க வேண்டும்” - என்றார். அப்பொழுது சிவகுமார் எங்களுடன் வரவில்லை, ‘நான் தங்கியிருந்த விடுதி அறைகளை எல்லாம் சென்று பார்க்க வேண்டும்' என்றார்.

வருங்காலத்தில் அண்ணாமலை நகர் திருவேட்களக் குளக்கரையில் ஆசிரியர் அவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தி கோகலே மண்டபம், அய்யா தங்கியிருந்த விடுதி அறைக்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதியளிக்கிறேன். வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர்!

No comments:

Post a Comment